Published : 28 May 2015 03:04 PM
Last Updated : 28 May 2015 03:04 PM

சச்சினுக்கு அளித்த பிரியாவிடை போல் சந்தர்பாலுக்கும் அளித்திருக்க வேண்டும்: லாரா

மேற்கிந்திய கிரிக்கெட்டின் கடினமான காலங்களில் போராடி விளையாடிய ஷிவ் நரைன் சந்தர்பாலுக்கு, சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ அளித்த பிரியாவிடை போல் அளிப்பதுதான் நியாயம் என்று பிரையன் லாரா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய அணியில் சந்தர்பால் தேர்வு செய்யப்படவில்லை. அவர் கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆனால், கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும், அவரை சச்சின் டெண்டுல்கரைப் போல் மரியாதையுடன் வழியனுப்பியிருக்க வேண்டும் என்கிறார் பிரையன் லாரா.

டிரினிடாட் அண்ட் டொபாகோ கார்டியன் இதழில் பிரையன் லாரா இது பற்றி கூறும்போது, “இது ரன்கள், எண்கள் பற்றிய விவகாரம் அல்ல. இது மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் அவர் பிரியாவிடை பெறும் தகுதியை தன் பங்களிப்பின் மூலம் வென்றுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் ஓய்வு பெறும் முடிவை அவரே வெளியிட அனுமதித்திருக்க வேண்டும்.

தங்கள் வீரர்களை அவர்கள் நடத்தும் விதம் இழிவானது, இதனை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. திரும்பிப் பார்க்கும் போது எவ்வளவு வீரர்கள் இம்மாதிரி அடக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பார்த்தால் நமக்கு நடுக்கமே ஏற்படும்.

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ என்ன செய்தனர்? ஒரு தொடரையே நடத்தி அவருக்கு ஒரு அருமையான வழியனுப்பு விழாவை வழங்கினர். அவரது பங்களிப்பை மதித்தனர்.

அம்மாதிரி மரியாதை செய்யும் போட்டியில் அவர் டக் அடித்தாலும் சரி அல்லது இரட்டைச் சதம் அடித்தாலும் சரி அது ஒரு விஷயமே அல்ல. அது ஒரு பிரியாவிடை தொடர், உலகம் முழுதும் அது தெரியும். அது போல் சந்தர்பால் பிரியாவிடை விழா எடுக்க தகுதியானவரே.

சந்தர்பாலை மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும், அதற்கான தனது மதிப்பை அவர் தனது பங்களிப்பின் மூலம் ஈட்டியுள்ளார். எனவே மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் சந்தர்பாலை மரியாதையாக நடத்தவில்லை என்றே நான் கருதுகிறேன்” என்று சாடினார் பிரையன் லாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x