Published : 15 Oct 2016 12:46 PM
Last Updated : 15 Oct 2016 12:46 PM
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் எதும் அடிக்கப்படவில்லை. கேரள அணி பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் அந்த அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளுக்கு மும்பை கோல்கீப்பர் ரோபர்ட்டா முட்டுக்கட்டை போட்டார்.
45-வது நிமிடத்தில் கேரள அணியின் அஸ்ராக் கொடுத்த கிராஸை கோல்கம்பத்தின் அருகே நின்ற நட்சத்திர வீரர் முகமது ராபி தலையால் முட்டினார். ஆனால் பந்து கோல்கம்பத்தின் மேலே சென்று ஏமாற்றம் அளித்தது.
58-வது நிமிடத்தில் கேரளா முதல் கோலை அடித்தது. அந்த அணியின் மைக்கேல் சோப்ரா இந்த கோலை அடித்தார். முகமது ராபியிடம் இருந்து பந்தை பெற்ற பெல்போர்ட் இலக்கை நோக்கி உதைத்தார். அப்போது கோல்கம்பத்தின் அருகே இருந்த மைக்கேல் சோப்ரா லாவகமாக அதை கோலாக மாற்றினார். இதனால் கேரளா முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.
69-வது நிமிடத்தில் மும்பை வீரர் நார்டி பந்தை அருமையாக கடத்தி சென்று இலக்கை நோக்கி தள்ளிவிட்டார். அப்போது கோல்கீப்பர் இல்லாத நிலையில் கேரள வீரர் ஆரோன் ஹியூஸ் பந்தை கோல் விழாமல் தடுத்துவிட்டார். இதனால் மும்பை வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின்னர் கடைசி வரை போராடியும் மும்பை அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
முடிவில் கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் அந்த அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கேரள அணி 4 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு டிரா கண்டுள்ளது. இரு ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.
ஐஎஸ்எல் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT