Published : 29 May 2015 05:19 PM
Last Updated : 29 May 2015 05:19 PM

கடைசி வாய்ப்பளிக்குமாறு மன்றாடிய சந்தர்பால்: அலட்சியம் செய்த பயிற்சியாளர் சிம்மன்ஸ்

21 ஆண்டுகளாக மேற்கிந்திய கிரிக்கெட்டுக்கு அயராது பங்களிப்பு செய்த சந்தர்பால் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்த பின்னணியை அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

சந்தர்பாலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் கிளைவ் லாய்ட் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஸ்மார்ஃபோன் அப்ளிகேஷனான வாட்ஸ் அப்பில் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ், சந்தர்பால் இடையே நடந்த உரையாடலை உள்ளூர் பத்திரிகை ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

164 டெஸ்ட் போட்டிகளில் 11,867 ரன்கள் எடுத்துள்ளார் சந்தர்பால், மே.இ.தீவுகள் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்து சாதனையை வைத்துள்ள லாரா எடுத்த ரன்கள் 11,953, இன்னும் 87 ரன்கள் எடுத்தால் லாராவின் சாதனையை சந்தர்பால் முறியடித்திருப்பார்.

சந்தர்பால் தனது உரையாடலில் இதைக்கூட தெரிவிக்கவில்லை, மாறாக, தனது சொந்த மண்ணில், தனது ரசிகர்கள் முன்னிலையில் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடும் தனது நியாயமான விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால்... சிம்மன்ஸ்-சந்தர்பால் உரையாடல் இதோ:

"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் முடித்துக் கொள்ளும் எனது முடிவு அதிகப்படியான கோரிக்கை அல்ல, உள்நாட்டில் என்னுடைய ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்லும் வாய்ப்பை கேட்கிறேன். மேலும் மேற்கிந்திய கிரிக்கெட்டுக்கு எனது பங்களிப்புக்காக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு பிரியாவிடை அளிக்கும் சாத்தியமும் இதில் உள்ளது.

என்னை ஓய்வு முடிவுக்கு தள்ளக்கூடாது. எனது சொந்த மண்ணில் நான் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாட ரசிகர்களும் விரும்புகின்றனர் மக்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பயிற்சியாளர் சிம்மன்ஸ் தனது மறுப்பில், “கடந்த 21 ஆண்டுகளாக மேற்கிந்திய கிரிக்கெட்டுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது, உங்களது சேவையும் அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு ஆண்டுகள் விளையாடியது என்ற சேவைக்காலம் அணித்தேர்வுக்கான அளவுகோலாக இருக்க முடியாது.

ரசிகர்கள், மற்றும் பொதுக்கருத்து உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம், ஆனால் இது அணித் தேர்வுக்கு ஒரு அளவு கோலாக இருக்குமானால் நீங்கள் 50 வயது வரை கூட ஆட முடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதனை நாம் அளவுகோலாகக் கொள்ள முடியாது என்பதே.

நாங்கள் உங்களை ஓய்வு நோக்கி தள்ளவில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், சந்தர்பால் ஓய்வு பெறுகிறார் என்பது சந்தர்பால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதை விட மதிப்பு மிக்கதுதானே?” என்று சிம்மன்ஸ் கூறியதாக அந்த உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கயானா கிரிக்கெட் வாரிய தலைவர் சந்தர்பாலுக்கு நிகழ்ந்ததை கடுமையாக எதிர்த்து தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார். கயானா ரசிகர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x