Published : 03 Dec 2016 04:50 PM
Last Updated : 03 Dec 2016 04:50 PM

ஐபிஎல் போட்டிகளில் ஆடி காயமடைய வேண்டாம்: ஆஸி. வீரர்களுக்கு மைக்கேல் கிளார்க் எச்சரிக்கை

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார்.

2016 ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் காயமடைந்ததை அடுத்து மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது ஐபிஎல். இதனால் ஓய்வு இன்றி கடுமையான களைப்பு ஏற்படுகிறது.

சாதகமான அம்சம் பணம் வருகிறது என்பதுதான். ஆனால் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது. களைப்பு, ஓய்வின்மை. நமக்கு சிறந்தது எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்பந்த வீரர்களுக்கு 6 வாரங்கள் ஓய்வு அளிக்கிறது. இது ஐபிஎல் நடைபெறும் காலக்கட்டமாகும். எனவே தனிப்பட்ட வீரர்கள் ஐபிஎல் விளையாடுவதைத் தேர்வு செய்கின்றனர். 6 வார விடுமுறையை ஐபிஎல் ஆடுவதற்காக நீங்கள் முடிவெடுத்தால் அது உங்கள் தேர்வு” என்று கூறியுள்ளார்.

2016 ஐபிஎல் போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆடும் போது காயமடைந்து வெளியேறினார், விரல் காயம் அவரது ஆட்டத்தை பாதித்தது.

அதே போல் ஷான் மார்ஷ் காயமடைந்து வெளியேறினார். ஐபிஎல் என்றாலே காயமடையும் வெளிநாட்டு வீரர்களில் நம் நினைவுக்கு வருபவர்களில் இருவர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்: டேல் ஸ்டெய்ன், ஏ.பி.டிவில்லியர்ஸ். இருவரும் இன்னமும் காயங்களிலிருந்து விடுபடமுடியவில்லை. ஐபிஎல் பணிச்சுமையினால் ஏற்படும் காயம் மேன்மேலும் அவர்களை காயத்திற்குத் தள்ளியதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் மைக்கேல் கிளார்க் மேலும் கூறும் போது, “நான் எந்த அணிக்கு எதிராக ஆடுகிறேன் என்பது முக்கியமல்ல, ஆஸ்திரேலியாவுக்கு முதலுரிமை கொடுப்பதே தலையாயது. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். எனவே அனைத்து வடிவங்களுக்கும் ஆஸ்திரேலிய அணி முழு வலுவுடன் திகழ வேண்டும், அதற்கான வீரர்கள் அவசியம் என்று நான் ஐயமற கருதுகிறேன்” என்று திட்டவட்டமாக ஐபிஎல் கிரிக்கெட்டின் பாதகங்களை சுட்டிக்காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x