Published : 07 Apr 2015 07:02 PM
Last Updated : 07 Apr 2015 07:02 PM
தங்கள் அணியின் ஸ்பின் பவுலர்களுக்குச் சாதகமாக மந்தமான பிட்ச்களை தயாரிப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
நாளை (புதன்) ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல்-8 தொடரின் முதல் போட்டியில் களமிறங்குகிறது.
இந்நிலையில் பிட்ச் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கம்பீர், “நாங்கள் வெற்றி பெறுவதற்காக மந்தமான, ஸ்பின் சாதக ஆட்டக்களங்களை தயாரிக்கிறோம் என்று பேசிவருகின்றனர். மந்தமான பிட்ச்களில் விளையாடி இருமுறை சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது. பெரிய தொடர்களை வெல்ல சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். நாங்கள் அதைத்தான் செய்தோம்.
பந்துகள் திரும்பும் ஆட்டக்களம், இருதரப்பினருக்கும் சாதகமான நல்ல ஆட்டக்களமும் கூட, ஆனால் எங்களிடம் சிறந்த பேட்டிங் வரிசையும் உள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இருதரப்புக்கும் சாதகமான பிட்ச்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற பிசிசிஐ-யின் எச்சரிக்கை ஒவ்வொரு பிட்ச் தயாரிப்பாளருக்குமானதே என்று நம்புகிறேன்.
நாங்கள் கொல்கத்தாவுக்கு வெளியேயும் சிறப்பாக ஆடி வருகிறோம், பிட்ச் பற்றிய பேச்சை நிறுத்த வேண்டும் என்று கருதுகிறேன். நாங்கள் 14 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளோம்.
எப்போது தொடரை தொடங்கினாலும் பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பதை நாங்கள் அறியாமல்தான் களமிறங்குகிறோம். இப்போது போடப்பட்டுள்ளது ஒரு புதிய பிட்ச் ஆகவே அது இப்படித்தான் செயல்படும் என்றெல்லாம் கூறுவதற்கில்லை.
எங்கள் அணியை வீழ்த்துவது கடினம். மீண்டும் உள்நாட்டு வீரர்கள்தான் முக்கியத்துவம் பெறுவார்கள் என்று நினைக்கிறேன். ராபின் உத்தப்பா நல்ல ஃபார்மில் இருக்கிறார். சூரியகுமார் யாதவ் ஒரு பிரகாசமான இளம் வீரர், அவர் இந்தத் தொடரில் ஒரு முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கலாம். மணிஷ் பாண்டே இருக்கிறார், அவரும் ரன்களை எடுத்து வருகிறார். யூசுப் பத்தான் இருக்கிறார்... ஆகவே உள்நாட்டு வீரர்கள் அதிக பங்களிப்பு செய்வார்கள் என்றே நான் கருதுகிறேன்” இவ்வாறு கூறினார் கம்பீர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT