Published : 21 Nov 2014 12:23 PM
Last Updated : 21 Nov 2014 12:23 PM
ஆனந்த் கார்ல்சன் இடையே நேற்று நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 9-வது சுற்று ஆட்டம் 20 நகர்த்தல்களில் டிரா ஆனது. இதையடுத்து கார்ல்சன் 5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
ரஷ்யாவின் சூச்சியில் உலக செஸ் போட்டி நடந்துவருகிறது. போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில் ஆனந்த் குறைந்தது இரண்டு வெற்றிகள் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் கார்ல்சன் மீதமுள்ள சுற்றுகளை டிரா செய்தாலே உலக சாம்பியன் ஆகிவிடலாம்.
இந்த நிலையில் நேற்று நடந்த 9வது சுற்று ஆட்டம், e4 e5 என்கிற முதல் நகர்த்தலுடன் ஆரம்பமானது. கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களில் ஆடினார். பெர்லின் தொடக்கமுறையில் ஆட்டம் தொடங்கியது. இந்தச் சுற்றுக்கு ஆனந்த் நன்கு தயாராகி வந்தது அவருடைய வேகமான நகர்த்தல்களில் தெரிந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி ஆட்டம் சீக்கிரம் முடிந்தது.
கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களில் ஆடிய 7-வது சுற்று 122 நகர்த்தல்கள் வரை சென்றது. ஆனால் நேற்றைய ஆட்டம் 20 நகர்த்தல்களில், ஒரு மணி நேரத்தில் முடிந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. “என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனந்த் என்னைவிடவும் நன்கு தயாராகி வந்திருந்தார். சென்னையை விடவும் இங்கு கடினமான போட்டி நிலவுகிறது. முன்னிலை பெற்றிருப்பதால், இந்த டிராவை ஏற்றுக்கொள்கிறேன்.” என்று ஆட்டம் முடிந்தபிறகு கார்ல்சன் கூறினார். “வெள்ளை நிறக் காய்களில் நான் இன்னும் கடினமாக ஆடவேண்டும்” என்றார் ஆனந்த்.
மீதமுள்ள மூன்று சுற்றுகளில், இரண்டில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுகிறார் ஆனந்த். கடந்த 6 சுற்றுகளில் ஆனந்த் வெற்றி எதுவும் பெறாததால் அதிக முனைப்புடன் ஆடி முழுப் புள்ளியை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 10-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT