Published : 06 Mar 2016 11:39 AM
Last Updated : 06 Mar 2016 11:39 AM

உலகக் கோப்பை டி20; இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: இயன் சாப்பல்

உலகக் கோப்பை டி20-கிரிக்கெட் இந்தியாவில் நடைபெறுவதால் இந்திய அணிக்கு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்போ இணையதளத்தில் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் ஒரேயொரு பலவீனம் என்னவெனில் பின்வரிசையில் ஒரு பெரிய ஹிட்டர் இல்லாதது. ஆனால் இந்தக் குறைப்பாட்டை அவர்கள் தங்களது டாப் ஆர்டர் பேட்டிங்கை வைத்து திறம்பட அகற்றி விடுகின்றனர். மேலும் தோனியின் பினிஷிங் திறமைகளும் கைகொடுக்கின்றன.

இங்கிலாந்து சமீபத்தில் இந்த வடிவத்தில் சிறந்து விளங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது. இவர்களுக்கு சவால் அளிக்கும் அணிகளாக ஓரளவுக்கு தென் ஆப்பிரிக்காவைக் கூறலாம். அதாவது நாக் அவுட் நிலைக்கு வரும் வரை அந்த அணி சவாலாக இருக்கும். மெக்கல்லம் இல்லாவிட்டாலும் நியூஸிலாந்தும் ஒரு அச்சுறுத்தும் அணியே.

நான் மேற்கிந்திய தீவுகளையும் சேர்ப்பேன், ஆனால் அங்கு கிரிக்கெட் நிர்வாகிகளுக்கும் வீரர்களுக்கும் வேறுபாடுகள் முற்றி வருகிறது.

முன்பெல்லாம் பாகிஸ்தானின் பலமாகக் கூறப்படுவது அதன் எதிர்பாராதத் தன்மை ஆனால் இப்போது சீரற்ற ஆட்டம் என்ற பல்வீனமாக இது மாறியுள்ளது.

குமார் சங்கக்காரா, மகேலா ஜெயவர்தனேயின் ஓய்விலிருந்து மீள இலங்கை அணி தட்டுத் தடுமாறி வருகிறது.

எனவே அரையிறுதியில் குரூப் 1-இலிருந்து இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும், குரூப் 2-லிருந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுமே தகுதி பெற வாய்ப்பு.

இந்த 4 அணிகளிலும் இந்தியா வெல்லவே சாதகச் சூழ்நிலைகள் உள்ளன. ஏனெனில் அவர்களுக்கு உள்நாட்டு சாதகங்கள் உள்ளன. அணியும் தற்போது நல்ல நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு மிட்செல் ஸ்டார்க் இல்லாதது தாக்கம் ஏற்படுத்தும், இங்கிலாந்துக்கு ஸ்டீவ் ஃபின் இல்லாதது பின்னடைவே, மேலும் தரமான ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் தடுமாற்ற குணமுடையது. ஆனாலும் அதிரடி ஆல்ரவுண்டர்கள் இங்கிலாந்தில் அதிகமுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய விஷயம் அதன் தன்னம்பிக்கையின்மை, ஆனால் தற்போது ரபாதா, டேல் ஸ்டெய்ன் வருகையினால் புத்துயிர்ப்பு பெறும். மேலும் இந்தியாவில் சமீபமாக டெஸ்ட் போட்டியில் ஸ்பின் பந்து வீச்சின் பூனைக்குட்டிகளாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் ஆக்கப்பட்டதையும் அவர்கள் நினைவிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.

மேலும் தற்போதெல்லாம் பெரிய தொடர்கள் நடத்தும் நாடே அந்தத் தொடர்களை வென்று விடுவதும் வாடிக்கையாகி வருகிறது, எனவே இதற்கு எதிராகச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x