Published : 03 Dec 2014 05:12 PM
Last Updated : 03 Dec 2014 05:12 PM
2015 உலகக்கோப்பை போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியைத் தேர்வு செய்ய வியாழக்கிழமை அணித் தேர்வுக்குழுவினர் மும்பையில் கூடுகின்றனர்.
நாளை, தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான 5 நபர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மதியம் 1 மணியளவில் உத்தேச அணி தேர்வுக்காக மும்பையில் கூடுகின்றனர் என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்த்ள்ளார்.
ஜாகீர் கான், இர்பான் பத்தான் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை எனவே இவர்கள் பெயர் பட்டியலில் இடம்பெறாது என்று தெரிகிறது.
ஆனால் ஆஷிஷ் நெஹ்ரா பெயர் இடம்பெறலாம் என்று தெரிகிறது. யுவராஜ் சிங், கம்பீர், சேவாக், ஹர்பஜன், நெஹ்ரா ஆகியோர் 2011 உலகக் கோப்பையில் ஆடியவர்கள் ஆனால் தற்போது பெரிய அளவுக்கு பார்மில் இல்லை.
32 வயதாகும் யுவ்ராஜ் சிங், 2011 உலகக்கோப்பை போட்டிகளின் தொடர் நாயகன், ஆனால் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரேயொரு அரைசதத்திற்கு பிறகு ஒன்றும் சோபிக்கவில்லை. தியோதர் கோப்பையில் இவர் ஆடிய ஒரு இன்னிங்ஸில் பெரிதாக ரன் எடுக்கவில்லை.
மேலும் ஆல்ரவுண்டர் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா இருக்கையில் யுவராஜ் கதை உலகக்கோப்பையைப் பொறுத்தவரை முடிந்தது என்றே கூறலாம். இவர் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட தன்னை முழுதும் தயார் படுத்திக் கொள்வது நலம்.
சேவாக், ஆஸ்திரேலிய பிட்ச்களில் பயன்படுவார் என்று கருத இடமுண்டு, மேலும், ரவி சாஸ்திரி, சேவாகின் மிகப்பெரிய விசிறி. 10 போட்டிகளில் 3 ஆட்டங்களில் மட்டுமே சேவாக் சிறப்பாக ஆடுகிறார் என்றால் கூட நான் அவரை அனைத்து போட்டிகளிலும் ஆடவைப்பேன் என்று ஒருமுறை ரவிசாஸ்திரி கூறியது நினைவுகூரத்தக்கது.
அதேபோல் ஹர்பஜன் சிங் அனுபவமா அல்லது பர்வேஸ் ரசூலின் இளம் திறமையா, இதில் எந்த முடிவுக்கு தேர்வுக்குழுவினர் வருவார்கள் என்பது அறுதியிட முடியாத ஒரு விஷயம்.
இலங்கைக்கு எதிராக விளையாடிய 14 வீரர்கள் மற்றும் தோனியுடன் 15 வீரர்கள் பெயர்கள் இடம்பெறுவது உறுதி, மீதி 15 வீரர்களில் மனோஜ் திவாரி, மணீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா, பாபா அபராஜித், மயங்க் அகர்வால், சூரியகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் நமன் ஓஜா, சஞ்சு சாம்சன் பவுலர்களில் பங்கஜ் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT