Published : 12 Dec 2014 02:53 PM
Last Updated : 12 Dec 2014 02:53 PM

இந்திய-ஆஸ்திரேலிய வீரர்களிடையே கடும் வாக்குவாதம்: கோபக்கார கோலி சமாதானத் தூதரானார்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டம் ஒருவழியாக உண்மையான ஆஸ்திரேலிய-இந்திய டெஸ்ட் போட்டியாக விளையாடப்பட்டது. இரு அணி வீரர்களுக்கு இடையேயும் இருமுறை மைதானத்தில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் ஆட்டத்தின் 34-வது ஓவரை வீச வருண் ஆரோன் அழைக்கப்பட்டார். அப்போது டேவிட் வார்னர் அந்த ஓவரின் 3-வது பந்தை அடிக்க முயன்று தோல்விகண்டு பவுல்டு ஆனார்.

வருண் ஆரோன் ஆக்ரோஷமாக அதனைக் கொண்டாடினார். வார்னரும் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். ஆனால் நடுவருக்கு நோ-பால் என்ற சந்தேகம் எழவே வார்னரை நிற்கச் சொன்னார்.

ரீ-ப்ளேயில் அது மிகப்பெரிய நோ-பால் என்று தெரிந்தது. வார்னர் உடனே க்ரீஸிற்கு திரும்பியவர் சும்மா இல்லாமல் ‘கமான் கமான்’ என்று வருண் ஆரோனை நோக்கி கத்திய படியே வந்தார்.

கிரீஸில் ஒரு பந்தை எதிர்கொண்ட பிறகும் கமான் கமான் என்று மீண்டும் ஆரோனை வெறுப்பேற்றவே. இது தவானுக்கு பிடிக்காமல் போக அவருக்கும் வார்னருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. வருண் ஆரோனும் இதில் இணைந்தார். மேலும் சில வீரர்களும் இணைய கேப்டன் விராட் கோலி அனைவரையும் சமாதானம் செய்ய நேரிட்டது, வருண் ஆரோன் கமான் கமான் அறைகூவல் மீது கடும் கோபமடைந்தார்.

அவ்வளவு பெரிய நோ-பாலை நடுவர் கவனிக்காமல் இருந்ததால் இந்த தகராறு ஏற்பட்டது. பேட்ஸ்மென் பவுல்டு என்று பவுலர் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அது நோ-பாலா என்று சரி பார்ப்பதை நடுவர்கள் கைவிட வேண்டும். அவ்வளவு பெரிய நோ-பாலை பார்க்காமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? நடுவரின் முதல் பணி நோ-பால் பார்க்க வேண்டியதே. இப்போதெல்லாம் இது அதிகமாக நடைபெறுகிறது. இதனால் உணர்வு பூர்வமான தருணங்களில் வீரர்களிடையே தகராறு ஏற்படுகிறது.

அதன் பிறகு சமாதானமாக ஆட்டம் சென்றது.

ஆனால், தேநீர் இடைவேளைக்குப் பிறகு வாட்சன், மைக்கேல் கிளார்க் விக்கெட்டுகள் விழுந்த பிறகு மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டது. இந்த முறை ரோஹித் சர்மா நாயகன் ஆனார்.

ஸ்டீவன் ஸ்மித், ரோஹித் சர்மா வீசிய ஒரு பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்றார் ஆனால் ரோஹித் பந்தை ஷாட்டாக அவருக்கு சிக்காமல் வீசினார். பந்து அவரைக் கடந்து சென்று விடும் என்ற அச்சத்தில் இயல்பாக காலை நீட்டி அந்தப் பந்தை பேடால் தடுத்தார் ஸ்மித். அது அவுட் என்பதற்கு வழியே இல்லை.

ஆனால், ரோஹித் அபத்தமாக நடுவரிடம் முறையீடு செய்தார். பேசினார். ஆனால் இது முழுதும் நடுவருக்கும் பவுலருக்கும் இடையிலானது. ஆனால் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ஸ்டீவன் ஸ்மித் அங்கிருந்து ரோஹித் சர்மாவை நோக்கி ஏதோ கூற, ரோஹித் சர்மா பதிலுக்கு ‘வாட்? வாட்?’ என்று இருமுறை கோபமாக பேச மீண்டும் கோலி, நடுவர்கள், ரோஹித் சர்மா, புஜாரா, வார்னர் ஆகியோரிடையே சிலபல வார்த்தைகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.

மீண்டும் விராட் கோலி சமாதனத் தூதராகச் செயல்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களின் செய்கை குறித்து நடுவர் இயன் கோல்டிடம் நீண்ட நேரம் பேசினார்.

ஆனால் அனைத்துமே ஆட்ட உணர்வுடன் நடைபெற்றது. ஆஸ்திரேலியா அதன் ஆக்ரோஷ சொற்பிரயோக அணுகுமுறைக்குத் திரும்பியுள்ளது, இந்தத் தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x