Last Updated : 13 Dec, 2016 05:58 PM

 

Published : 13 Dec 2016 05:58 PM
Last Updated : 13 Dec 2016 05:58 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆவேசமாக வீசுவேன்: வஹாப் ரியாஸ் உறுதி

ஆஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரில் விளையாடாத பாகிஸ்தான் தற்போது விளையாடவுள்ள நிலையில் வஹாப் ரியாஸ் ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2015 உலகக்கோப்பையின் போது ஷேன் வாட்சனுக்கும் இவருக்கும் நடந்த அந்தச் சவாலான போட்டி மறக்க முடியாததாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதை விடவும் ஆவேசமாக வீசுவேன் என்கிறார் பாகிஸ்தான் வேகப்பட்ந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்.

“நான் வீசியதிலேயே சிறந்த மேட்ச் அது (2015 உ.கோ.போட்டி), அது உண்மையில் உற்சாகமாகவே இருந்தது, தற்போது அதுபோலவே, அதைவிடவும் ஆவேசமாக வீசப்போகிறேன். ஆனாலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் முதற்கண் குறிக்கோள்.

நான் என்ன சிறப்பாகச் செய்ய முடியுமோ அதனை நான் நிச்சயம் செய்து காட்ட வேண்டும். நான் ஆவேச அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் அது எனக்கு சரியாக அமைவதில்லை. எனவே ஆவேசமாகவே வீசப்போகிறேன். சூழலுக்கு ஏற்பட ஷார்ட் பிட்ச் பந்துகளையும் பயன்படுத்தப் போகிறேன்.

ஐக்கிய அரபு அமீரக பிட்ச்கள் சுழற்பந்துக்கும் பேட்டிங்கிற்கும் சாதகமானது, எனவே இந்த உலகில் வேகப்பந்து சாதக ஆட்டக்களத்தை பார்க்கும் போது பாகிஸ்தான் வீச்சாளர்களாகிய எங்களுக்கு உத்வேகம் கூடுகிறது.

ஆசிய நாடு எதுவும் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதில்லை என்பதை அறிவோம், அதனை நேர் செய்யவே இங்கு வந்துள்ளோம், 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதில்தான் எங்களுடைய கவனம் உள்ளது. ஆனால் இது எளிதானதல்ல.

ஆஸ்திரேலிய அணி உள்நாட்டில் ஆக்ரோஷமாக ஆடும், நம் எதிர்த்தாக்குதல் முறை ஆட்டத்தை ஆட வேண்டும். எங்களிடம் அதற்கான திறமை உள்ளது, அணியில் அனைவருமே இந்தத் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தோம்.

பயிற்சியாளர் ஆர்தர் ஆஸ்திரேலியாவுக்கு பயிற்சியாளராக இருந்தவர், இதனால் எங்களுக்கு அந்த வீரர்கள் பற்றிய தகவல்கள் பல கிடைக்கின்றன. இவர்களின் அனுபவங்களை களத்தில் செலுத்தி வெற்றி பெறுவதே எங்கள் கடமை” என்றார் வஹாப் ரியாஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x