Published : 25 Nov 2014 11:41 AM
Last Updated : 25 Nov 2014 11:41 AM

ஆனந்த் வாய்ப்புகளைத் தவறவிட்டார்: கார்ல்சன்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை ஆனந்த் தவறவிட்டதால் தோல்வியடைய நேர்ந்தது என்று மீண்டும் உலக சாம்பியன் ஆகியுள்ள கார்ல்சன் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் சூச்சியில் நடை பெற்ற உலக செஸ் போட்டியின் 11வது சுற்று ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்று மீண்டும் செஸ் உலக சாம்பியன் ஆனார். 6.5 - 4.5 என்ற புள்ளிக்கணக்கில் சூச்சியில் வெற்றிவாகை சூடிய 23 வயது கார்ல்சனுக்கு ரூ. 4.8 கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. போட்டியில் தோற்ற 44 வயது ஆனந்துக்கு ரூ. 3.2 கோடி கிடைத்தது.

11வது சுற்று ஆட்டத்தின் 26வது நகர்த்தலின்போது ஆனந்துக்கு வெற்றி பெறுவதற்கான சந்தர்ப் பங்கள் உருவாகியும் தொடர்ந்து தவறுகள் செய்ததால் கார்ல்சனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். மீண்டும் உலக சாம்பியன் ஆனது பற்றி கார்ல்சன் கூறியதாவது: ஆனந்த் இந்தமுறை கடுமையான போட்டி மனப்பான்மையை உருவாக்கினார். சென்னையில் ஆடியதை விடவும் இங்கு நன்றாக ஆடினார். 8 மற்றும் 10-வது சுற்றுகளில் வெள்ளை நிறக் காய்களில் ஆனந்த் ஆடியபோது ஏதாவது செய்திருக்கவேண்டும். தன் வாய்ப்புகளைத் தவறவிட்டு விட்டார்.

11வது சுற்றில், 18-23 நகர்த்தல்களின்போது நான் சரியாக ஆடவில்லை. அதன்பிறகு, மீண்டு வந்து ஆனந்துக்கு மேலும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் செய்தேன். அவருடைய பிஷப்பை வெளியேற்றியபிறகு வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்தேன் என்றார்.

கார்போவ், காஸ்பரோவ், கிராம்னிக், ஆனந்த் ஆகியோருக்குப் பிறகு கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

தோல்வி பற்றி ஆனந்த் கூறியதாவது: இந்தப் போட்டியில் கார்ல்சன் சிறப்பாக ஆடினார். 11வது சுற்றில் யானையை இழந்தது தவறான திட்டமிடல். அதற்காக தண்டிக்கப் பட்டுவிட்டேன். இந்தப் போட்டியில் தோற்றதால் ஓய்வு பெறமாட்டேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x