Published : 28 Nov 2015 03:23 PM
Last Updated : 28 Nov 2015 03:23 PM

அடிலெய்ட் டெஸ்ட்: நிலைதடுமாறிய ஆஸ்திரேலிய அணியை தூக்கி விட்ட நடுவர்கள்

அடிலெய்டில் நடைபெற்று வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய நடுவர் ரவி மற்றும் 3-வது நடுவர் ஆகியோர் செய்த தவறுகளினால் நியூஸிலாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.

116/8 என்று திணறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய நடுவர் எஸ்.ரவியின் தவறான தீர்ப்பினாலும், அதனையடுத்து ரிவியூவில் டிவி நடுவர் லாங்கின் விளங்க முடியா தீர்ப்பினாலும் நியூஸிலாந்து ரன் எண்ணிக்கையான 202 ரன்களைக் கடந்து முன்னிலை பெற்றது.

அதாவது நேதன் லயன் அவுட். அது நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, இதனையடுத்து ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னிலையைப் பெற்றிருக்க வேண்டிய நியூஸிலாந்து கடைசியில் 22 ரன்கள் பின் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நடுவர்களின் தீர்ப்பு நியூஸிலாந்தின் வெற்றி வாய்ப்பையும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

நேற்று தொடங்கிய ‘பிங்க்’ பந்து வீசப்படும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 2-ம் நாளான இன்று நியூஸிலாந்தின் அற்புதமான, துல்லியமான பந்து வீச்சு மற்றும் அபாரமான பீல்டிங்கினால் 116 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறியது.

ஆட்டத்தின் 54-வது ஓவர் நியூஸிலாந்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்ட்னர் வீசினார். ஸ்வீப் செய்தார் லயன் ஆனால் பந்து டாப் எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் கேன் வில்லியம்ன்சன் கையில் கேட்ச் ஆனது. பந்து மட்டையில் லேசாகப் பட்டு லயனின் முழங்கைக்கு சற்று மேல் பகுதியில் பட்டு கேட்ச் ஆனது. கள நடுவரான இந்தியர் எஸ்.ரவி நாட் அவுட் என்றார், காரணம் அவர் பந்து தோள்பகுதியில் பட்டுச் சென்றதாக நினைத்தார். ஆனால் அவர் நிற்கும் இடத்திலிருந்து நிச்சயம் மட்டையின் விளிம்பில் பட்டதா இல்லையா என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

நேதன் லயனே தான் அவுட் என்று நடையைக்கட்டவிருந்தார். ஆனால் நடுவர் ரவி நாட் அவுட் என்றதும் அனைத்தும் மாறிப்போனது.

ரவி நாட் அவுட் என்று கூற, நியூஸிலாந்து வீரர்கள் உடனே ரிவியூ செய்தனர். ஹாட் ஸ்பாட்டில் நேதன் லயன் மட்டையில் பந்து பட்டுச் சென்றதற்கான மெலிதான் சுவடு தெரிந்தது. ஆனால் ரியல்-டைம் ஸ்னிக்கோ மீட்டர் இதனை தடம் காண முடியவில்லை. 3-வது நடுவர் நிகல் லாங் முடிவை அறிவிக்க நீண்ட நேரம் எடுத்து காலவிரயம் செய்ததோடு, கடைசியில் எட்ஜ் ஆனதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று எஸ்.ரவி தீர்ப்பை சரியென்று கூறினார்.

இதைவிடவும் பெரிய தமாஷ் என்னவெனில், சரி எல்.பி. யாக இருக்கலாம் என்று நைஜெல் லாங் சரிபார்த்தார், ஆனால் அதற்கான ஆதார வீடியோவில் லயன் ஆடிய வேறொரு பந்து காண்பிக்கப்பட்டது.

இதனையடுத்து 0-வில் இருந்த நேதன் லயன் 34 ரன்களை எடுத்தார். இவரும், விக்கெட் கீப்பர் நெவிலும் இணைந்து 74 ரன்களை 9-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க ஆஸ்திரேலியா கடைசியில் 224 ரன்கள் எடுத்தது.

டி.ஆர்.எஸ். சர்ச்சை எனும் புத்தகத்தில் புதிய அத்தியாயமாக இந்த நேதன் லயன் தீர்ப்பு விவகாரம் சேர்க்கப்படலாம், அதாவது நியூஸிலாந்து இந்த டெஸ்ட் போட்டியில் தோற்றால் அதற்குக் காரணம் இந்திய நடுவர் எஸ்.ரவி, மூன்றாவது நடுவர் நைஜெல் லாங் என்றே வரலாறு பேசும்.

சானல் 9 தொலைக்காட்சி வர்ணனையில் இருந்த இயன் சாப்பல் உடனடியாக, “நான் என்ன பார்த்தேனோ அதனை என்னால் நம்ப முடியவில்லை, மோசமான தீர்ப்பு” என்றார்.

ஷேன் வார்ன் தனது ட்விட்டரில், “5 நிமிடங்கள் படு மோசம். நைஜல் லாங்கின் படுமோசமான தீர்ப்பு, லயன் தெளிவாக அவுட். லயனே பெவிலியன் திரும்ப எத்தனித்தார் என்பதை குறிப்பிடத் தேவையேயிலை. பந்து மட்டையில் பட்டு தோள்பட்டையில் பட்டு கேட்ச் ஆனது, இதில் சந்தேகமேயில்லை. முட்டாள் தனமான நேர விரயம் மற்று தவறான தீர்ப்பு” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x