Last Updated : 03 Jun, 2018 10:23 AM

 

Published : 03 Jun 2018 10:23 AM
Last Updated : 03 Jun 2018 10:23 AM

ஆடும் களம் 08: தாண்டிப் பாயும் புலி!

நீளம் தாண்டுதலில் சாதிக்கும் அளவுக்கு இந்தியாவில் திறமை வாய்ந்த வீராங்கனைகள் யாருமில்லை என்ற காலம் ஒன்று இருந்தது. அந்த இருண்ட பக்கங்களுக்கு ஒளிகொடுத்தவர் கேரளத்தைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ். உலக சாம்பியன்ஷிப், உலகத் தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். இதன் மூலம் இந்திய நீளம் தாண்டுதல் விளையாட்டை உலக அளவில் கவனம் பெறச் செய்தவரும் இவர்தான்.

உயரமே வரம்

படிப்பைத் தாண்டி வேறு எதையும் யோசிக்கக் கூடாது என்று சொல்லும் பெற்றோர் மத்தியில் அஞ்சுவின் தந்தை கே.டி. மார்க்கோஸ் சற்று வித்தியாசமானவர். ‘விளையாட்டுதான் வாழ்க்கை’ என்று அஞ்சுவுக்கு அவர் கற்றுக்கொடுத்தார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் விளையாட ஊக்குவித்தார். தொடக்கத்தில் ஏழு விளையாட்டுகளின் கலவையான ‘ஹெப்டத்லா’னில்தான் அஞ்சு ஆர்வம் காட்டிவந்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நீளம் தாண்டுதல், தடை தாண்டும் விளையாட்டுகள் மீது அஞ்சுவுக்குக் காதல் ஏற்பட்டது. இதற்கு அவரது உயரமும் ஒரு காரணம். உயரமாக இருப்பவர்கள் நீளம் தாண்டுதலில் சுலபமாகச் சாதிக்க முடியும். 185 செ.மீ. உயரம் இருந்த அஞ்சுவுக்கும் அந்த உயரம் சாதகமானது.

03CHDKN_NATIONAL_COMBINED_EVENTS_right

தொடர்ந்து நீளம் தாண்டுதலில் மாநில அளவில் வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருந்த அஞ்சு 1996-ல்தான் முதன்முதலாகத் தேசிய அளவிலான போட்டிகளில் காலடி வைத்தார். அப்போது டெல்லியில் ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதன்முறையாகப் பங்கேற்ற அஞ்சு, நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றார். அதுதான் அஞ்சுவின் பதக்க வேட்டைக்குப் பிள்ளையார்சுழி போட்டது. இதன் பிறகு மாநில அளவிலும் தேசிய அளவிலும் தொடர்ந்து சாதித்துவந்தவர், சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையை வசமாக்கினார்.

முதல் சர்வதேசப் பதக்கம்

2003-ல் பாரிஸில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. நீளம் தாண்டுதல் மகளிர் பிரிவில் அஞ்சுவும் இடம் பெற்றிருந்தார். அதற்கு முன்புவரை உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் பெண்கள் யாரும் சாதித்ததில்லை. இந்த முறையும்கூட அப்படியொரு வாய்ப்பு இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. தகுதிச் சுற்றில் அஞ்சு களத்தில் இருந்தபோது ஆசியர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த வீராங்கனைகளே நிறைந்திருந்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய அஞ்சு, 6.59 மீட்டர் தாண்டி, பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். தகுதிச் சுற்றில் 6.59 மீட்டர் நீளம் தாண்டியிருந்த நிலையில், இறுதிச் சுற்றில் 6.70 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷ்யாவின் கால்கினாவுக்கும் அஞ்சுவுக்கும் 0.04 மீட்டர்தான் வித்தியாசம். என்றாலும் அஞ்சு வெண்கலப் பதக்கம் வென்று அன்று சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமைத் தேடிந்தந்தார். உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

சாதனை மேல் சாதனை

2004-ல் ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. உலக சாம்பியன்ஷிப்பில் அஞ்சு சாதித்திருந்ததால், அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தகுதிச் சுற்றைத் தாண்டி இறுதிச் சுற்றுக்குள் அஞ்சு நுழைந்ததே அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. எப்படியும் அஞ்சு சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவரால் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும் 6.83 மீட்டர் நீளத்தைத் தாண்டியது, அவரது தனிப்பட்ட சாதனையாகப் பதிவானது. அவர் நீளம் தாண்டுதல் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும்வரை அதுவே அவரது அதிகபட்ச தனிநபர் சாதனையாகத் தொடர்ந்தது.

அடுத்த ஆண்டே இன்னொரு களத்துக்குத் தயாரானார் அஞ்சு. 2005-ல் மொனாகோவில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. ஒலிம்பிக்கில் விட்ட பதக்கத்தை எப்படியும் பெறுவது என்ற முடிவோடு உழைத்தார். தங்கப் பதக்கத்துக்குக் குறிவைத்திருந்தார். போட்டியில் 6.75 மீட்டர் நீளத்தைத் தாண்டினார். ஆனால், அந்தப் போட்டியில் அவரால் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. வெள்ளிப் பதக்கத்துடன் அஞ்சு திருப்தியடைய வேண்டியிருந்தது. ஆனால், தங்கம் அவரைவிட்டுச் செல்லவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.

03CHDKN_BRITAIN_COMMONWEALTH_GAMES

அந்தப் போட்டியில் முதலிடம் பிடித்த ரஷ்ய வீராங்கனை கொடோவா, ஊக்க மருந்து பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் 9 ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டது. மிகவும் தாமதமாக கொடாவோ பெற்ற தங்கப் பதக்கம் 2014-ல் பறிக்கப்பட்டது. அந்தப் பதக்கம் இரண்டாம் இடம் பிடித்த அஞ்சுவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அஞ்சு பெற்றார்.

கணவரே பயிற்சியாளர்

இந்தப் பதக்கங்கள் மட்டுமல்ல, 2002-ல் மான்செஸ்டர் காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2002-ல் (பூசன்) தங்கம், 2006-ல் (தோகா) வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றையும் அஞ்சு அள்ளினார். மேலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2005-ல் (இஞ்ச்சேன்) தங்கம், 2007-ல் (அம்மான்) வெள்ளிப் பதக்கங்களையும் தன்வசமாக்கினார்.

2000-ல் ராபர்ட் பாபி ஜார்ஜை அஞ்சு திருமணம் செய்துகொண்டார். இவரும் விளையாட்டு வீரர்தான். தேசிய டிரிப்பிள் ஜம்ப் சாம்பியன். திருமணம் செய்தபிறகு தான் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டு அஞ்சுவின் பயிற்சியாளராக மாறினார் பாபி ஜார்ஜ். அஞ்சு சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற்றதெல்லாம் இவரது பயிற்சியின் கீழ்தான். ஒரு வகையில் சிறுவயதில் அஞ்சுவின் தந்தை அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். திருமணத்துக்குப் பிறகு அவருடைய கணவர் வழிகாட்டியானார்.

2002-ல் அஞ்சுவுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் 2004-ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளிலும் பங்கேற்ற அஞ்சு, அதன் பிறகு நீளம் தாண்டுதலிலிருந்து விடைபெற்றார். தற்போது 41 வயதாகும் அஞ்சு பாபி ஜார்ஜ், ‘டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம்’ என்றழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு உதவும் திட்டத்தின் செயல் உறுப்பினராக இருந்துவருகிறார். மத்திய அரசு அதிகாரியாகவும் பணியாற்றிவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x