Published : 19 Apr 2015 02:00 PM
Last Updated : 19 Apr 2015 02:00 PM

விவாதம்: கறுப்பு நிறம் அவமானச் சின்னமா?

அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப் படுகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகள் தங்கள் வார்த்தை ஜாலங் களுக்கு வாகாகப் பெண்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இணை அமைச்சர் கிரிராஜ் சிங், “ராஜீவ்காந்தி, நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை மணந்து, அந்தப் பெண் சோனியாவைப் போல் வெள்ளைத் தோலுடன் இல்லாமல் இருந்தால் அவரை காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டிருப்பார்களா?” என்று கேட்டிருக்கிறார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம், “நீங்கள் இப்படி வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினால் உங்கள் தோல் கறுத்துவிடும். பிறகு உங்களுக்கு மணமகன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, திருமணம் தாமதமாகிவிடும்” என்று அறிவுரை வழங்கி யிருக்கிறார் கோவா மாநில முதல்வர் லகஷ்மிகாந்த் பர்சேகர்.

காப்பீட்டுத் துறை சீர்திருத்த மசோதா குறித்த விவாதத்தின்போது, “தென்னிந்தியப் பெண்கள் அழகான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்களின் கறுப்பு நிறமும் அழகானது. அவர்களுக்கு நடனமாடவும் தெரியும்” என்று சொல்லியிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ். தான் கறுப்பு, வெள்ளை நிற பேதத்தைக் குறித்து மட்டுமே பேசியதாகவும் தன் கருத்தைச் சிலர் திரித்துச் சொல்கின்றனர் என்றும் சரத்யாதவ் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பேச்சுகளுக்குப் பின் உள்ள அரசியல் நோக்கங்கள் தனி விவாதத்துக்கு உரியவை. கிரிராஜ் சிங்கின் கவலை நிறபேதம் பற்றியதா அரசியல் சார்ந்ததா என்பது கேள்விக்குரியது.

அறிவா, நிறமா?

ஆனால், அரசியலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இவர்களின் இந்தப் பேச்சுகள், கறுப்பு நிறத்தின் மீதான ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன. நிறம் சார்ந்த ஆதிக்கம் சமூகத்தின் எல்லாத் தட்டு மக்களிடமும் மேலோங்கி இருக்கிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் நிற வேறுபாடு குறித்த விருப்பு வெறுப்புகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு சமூக நிகழ்வும் மாற்றங்களும் அதைத்தான் சொல்கின்றன.

தொலைக்காட்சி விளம்பரங்களில் பெரும் பாலானவைச் சிவப்பழகு குறித்தவையாகவே இருக்கின்றன. சிவப்பாக இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணுக்குக் கல்வி, வேலை, நண்பர்கள், திருமணம் உட்பட அனைத்தும் சாத்தியம் என்பது போலவே பல விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. சிவப்பாக இருந்தால் மட்டுமே தன்னம்பிக்கை சாத்தியம் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் விளம்பரங்களும் உண்டு. ஆண்களுக்கான பிரத்யேக சிவப்பழகு க்ரீம்களும் சந்தைக்கு வந்துவிட்டன. மூன்று வேளை உணவில்லாமல்கூட இருந்துவிடலாம், சிவப்பழகு இல்லாமல் இருக்கவே கூடாது என்கிற தொனியில்தான் விளம்பரங்கள் கூச்சலிடுகின்றன.

காட்சி ஊடகம் மட்டுமல்ல, நம்மைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளில் நிறம் என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தன் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. வீடு, அலுவலகம், பொதுவெளி என்று எங்கேயும் எப்போதும் சிவப்புக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கிறவர்கள், கறுப்பு நிறத்தை அத்தனை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதில்லை. சிவந்த, அழகான என்பவை மட்டும்தான் மணப்பெண்ணுக்கான தகுதிகளா? பல்வேறு நிறுவனங்களில் வரவேற்பாளராகவும், விற்பனைப் பிரிவில் வேலை செய்யவும் சிவந்த நிறம்தான் அடிப்படைத் தேவையா? அங்கே அறிவு ஏன் இரண்டாம்பட்சமாக்கப்படுகிறதா? அறிவைவிட நிறம் சக்தி வாய்ந்ததா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x