Last Updated : 26 Apr, 2015 02:08 PM

 

Published : 26 Apr 2015 02:08 PM
Last Updated : 26 Apr 2015 02:08 PM

பேசக் கூடாத விஷயமா மாதவிடாய்?

பெண் உடலில் நடக்கும் இயல்பான உடலியல் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இன்னமும் நம் சமூகத்தில் அருவருப்பானதாகவும், அவமானமாகவும் பார்க்கப்படுகிறது. மாதவிடாய் என்பது வெளிப்படையாகப் பேசக் கூடாத விஷயமல்ல. பெண்களின் உடலியல் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டிய கடமை மனித சமூகத்துக்கு இருக்கவே செய்கிறது. மனித சமூகத்துக்குள் ஆண்களும் அடக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒரு பெண், தான் பூப்பெய்தும்போதே அவளுக்கு அளிக்கப்படும் முதல் அறிவுரை தன் அப்பாவிடம்கூட மாதவிடாயைப் பற்றி பேசக்கூடாது என்பதுதான்.

மாதவிடாயின் போது ஒரு பெண் அசுத்தமாக இருக்கிறாள், அவள் உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் அசுத்தமானது, அதனால் அவள் கோயிலுக்குள் செல்லக் கூடாது, சமையலறைக்குள் செல்லக் கூடாது, ஊறுகாயைத் தொடக் கூடாது போன்றவற்றை இப்போதும் நாம் எதிர்கொள்ளவே செய்கிறோம்.

மாதவிடாயைச் சுற்றிச் சூழலும் இந்த மாதிரியான கற்பிதங்களை உடைக்கும் விதமாகப் பல விழிப்புணர்வு முயற்சிகள் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் இணைந்து அப்படியொரு விழிப்புணர்வுப் பேரணியை நடத்தியிருக்கிறார்கள். ‘கம் அண்ட் சி தி பிளட் ஆன் மை ஸ்கர்ட்’ (Come and see the blood on my skirt) என்ற அந்தப் பேரணியில் மாணவர்கள், மாணவிகள், பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டனர். பெண்கள் மாதவிடாயின் போது தாங்கள் சந்திக்கும் பல்வேறுவிதமான பிரச்சினைகளைப் பற்றி அந்த அணிவகுப்பில் விவாதித்திருக்கிறார்கள். சமூகம், மாதவிடாயைப் பார்க்கும் பார்வை, இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் ‘பிசிஓடி’ (Polycystic Ovary Disorder) என்னும் மாதவிடாய்ப் பிரச்சினையைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள். இந்த முயற்சியைப் பல தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டங்களுக்கான முன்னுதாரணங்களை உருவாக்கியவர் ஜெர்மனைச் சேர்ந்த பத்தொன்பது வயது எலோனா கஸ்ட்ராட்டி. சானிட்டரி நாப்கின்களில் பெண்ணிய வாசகங்களை எழுதிப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டுவதன் மூலம் ‘பேட்ஸ் அகேன்ஸ்ட் செக்ஸிசம்’(Pads against sexism) என்ற பிரச்சாரத்தை அவர் ஆரம்பித்துவைத்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இந்தப் போராட்ட வடிவத்தை முன்மாதிரியாக வைத்து ஜமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் அதே பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். ஆனால், இந்த ‘பேட்ஸ் அகைன்ஸ்ட் செக்ஸிசம்’ பிரச்சாரத்துக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாதவிடாய் சம்பந்தமான எல்லா விஷயங்களும் சமூகத்தில் பேசக் கூடாத விஷயமாக இருப்பது அவர்களுக்குப் புரிந்தது. அதன் விளைவுதான் கடந்த வாரம் நடைபெற்ற ‘கம் அண்ட் சி தி பிளட் ஆன் மை ஸ்கர்ட்’ பேரணி.

அத்துடன், சமூக வலைத்தள மான இன்ஸ்ட்டாகிராமும் ஒரு பெண் தன் மாதவிடாயின் போது எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்தபோது அதை நீக்கியது. பிறகு, அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதும் அந்தப் படத்தை மறுபடியும் பதிவிட்டது. இப்படிப் பெண்ணின் மாதவிடாயை ஏற்றுக்கொள்ள முடியாத மனப்பான்மைதான் நம் சமூகத்தில் அதிகமாக நிலவுகிறது. ‘கம் அண்ட் சி தி பிளட் ஆன் மை ஸ்கர்ட்’ பிரச்சாரம் மாதவிடாயைச் சமூகம் பார்க்கும் பார்வையை மாற்றுவதற்கான ஒரு தொடக்கம் என்கின்றனர் இந்தப் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்த மாணவர்கள். மாதவிடாய் என்பது பேசக்கூடாத விஷயமல்ல என்பதை இந்தச் சமூகம் புரிந்துகொண்டால்தான் பெண்ணுடல் குறித்த ஆண்களின் தவறான பார்வை ஓரளவுக்காவது மாறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x