Published : 19 Jan 2014 04:00 PM
Last Updated : 19 Jan 2014 04:00 PM

பெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள்

பெண்கள் சார்ந்தும், பெண்ணியம் சார்ந்தும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில மட்டுமே முழுமைபெற்றவையாக இருக்கின்றன. ஆனால் முனைவர் கே. சதாசிவன் எழுதி, கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ என்ற புத்தகம், தன் இலக்கைக் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த தேவதாசி நடைமுறையைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

கோயில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள். பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் சமூகத்தினரால் மரியாதையாகப் பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் அந்த மரபின் வழி வந்தவர்களுக்குப் போதிய அங்கீகாரமும் கவனிப்பும் இல்லாமல், தேவதாசிகள் என்பவர்கள் மிகக்கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டனர்.

தமிழ்க் கலாச்சாரத்துக்குச் செழுமை சேர்த்த ஒரு சமூக மரபு தன் சொந்த மண்ணில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனதன் பின்னணியைக் கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். ‘எந்த ஒரு உன்னதமான நிறுவனமும் கூட, சமூக விரோதிகள் அதனுள் சுதந்திரமாக ஊடாட அனுமதிக்கப்படும் பட்சத்தில் உருச்சிதைந்து, மிக மோசமான ஒரு நிறுவனமாகச் சீரழிந்து போய்விடும்’ என்ற உண்மையை தேவதாசி முறையின் அழிவு உணர்த்துவதாகக் குறிப்பிடுகிறார் இவர். நூல் முழுவதும் வியாபித்திருக்கும் அரிய தகவல்களும் அவற்றுக்கான ஆதாரங்களும் ஆசிரியரின் ஆழமான களப்பணியையும் வாசிப்பையும் பறைசாற்றுகின்றன.

புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:

ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது மிக ஆர்வம் நிறைந்த சுவையான கதை. தேவதாசியாக வேண்டுமென்றால், எந்த ஓர் இளம் பெண்ணும் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் (சிலவற்றின்) ஊடாகப் பயணித்து வர வேண்டும்; அவையாவன:

1. சடங்குபூர்வமான திருமணம்

2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு

3. நிகழ்த்துகலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்

4. அரங்கேற்றம்

5. கடமைகள் மற்றும்

6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்

இவை ஒரு ‘சாதாரண’ இளம் பெண்ணை ‘என்றைக்கும் புனிதமான பெண்’ணாகப் பரிணாம மாற்றமடையச் செய்பவளாக அமைகின்றன. இந்த அடுத்தடுத்த படிநிலைகளையும், இவை உள்ளடங்கிய மற்ற பிற சடங்குகளையும் விவாதிப்பதில் கி.பி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரையிலான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடமைகள்

பாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதும்தான் கோயில்களில் அவர்களின் பொதுவான கடமைகளாக இருந்தன. இந்த ஓர் அம்சத்தில் மட்டுமே இராஜராஜேஸ்வரம் கோயிலின் தேவதாசிகளுடைய கடமைகள், இதர கோயில்களில் இணைந்திருந்த இவர்களுடைய சக தேவதாசிகளுடைய கடமைகளோடு ஒரே தன்மையுடையவையாக இருந்தன.

அரசின் உறுதுணை

தேவதாசி முறையை முன்னெடுத்துச் சென்றது அரசின் உறுதுணையாகும். காரணம், அரசுக்கு இது வருவாய் அளிக்கக்கூடிய ஒரு வழி; தேவதாசிகள், நுண்கலைகளின் பாதுகாவலகர்ளாக இருந்திருக்கின்றனர்; மேலும் அரசர்களுக்கும், புரோகிதர்களுக்கும் இன்பம் பெறுவதற்கான ஒரு வழிவகையாக இது இருந்துள்ளது.

சமூக சேவை

தேவதாசிகள், பொதுமக்களுக்கான சமூக சேவைகளை மேற்கொண்டனர் என்று சாசனங்கள் பதிவு செய்துள்ளன. விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. இரண்டு தேவதாசிகளான நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகியோர் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர். அன்னநாடு என்ற இடத்தில் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x