Last Updated : 22 Feb, 2015 03:45 PM

 

Published : 22 Feb 2015 03:45 PM
Last Updated : 22 Feb 2015 03:45 PM

குழந்தைகள் பாதுகாப்பு: தொடரும் மூடநம்பிக்கைகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கடத்தல்களும் கணக்கு வழக்கில்லாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த வன்முறைகளை யாரோ வெளியில் இருப்பவர்கள் மட்டும்தான் செய்கிறார்கள் என்று கண்மூடித்தனமாக நம்புகிறோம். வெளியில் இருப்பவர்களைவிட, முதல் கட்டமாக இப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்பவர்கள் நமக்கு நன்கு தெரிந்த நபராக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இந்தக் குற்றங்களில் உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து சமூக சேவை செய்கிறேன் பேர்வழி என இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினரின் பங்கும் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டின் பெடோ, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருகிறார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்திவருகிறார். சென்னையைச் சேர்ந்த ‘துளிர்’ தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு ‘குழந்தைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளும் கொடுமைகளும்’ குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இரு வகை துன்புறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச் செய்பவர்களை பிடோபைல்ஸ் (Pedophiles) என அழைப்பார்கள். இவர்கள் குழந்தைகளுடன் நெருக்கமாக இருப்பதை அதிகம் விரும்புபவர்கள். கனவில் மிதப்பவர்கள். இவர்களைவிட, வலிந்து சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு செயல்படுபவர்கள்தான் ஆபத்தானவர்கள். இவர்கள் குழந்தைகளைக் குற்றச்செயல் புரிவதற்குத் தயார்படுத்துவார்கள். இதற்காகக் குழந்தைகளின் அன்பைப் பெறுவார்கள். அதற்காக, பலவிதமான சலுகைகளைக் குழந்தைகளுக்கு அளிப்பார்கள்.

உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தில் இருக்கும் பல குழந்தைகளில், ஒரு குழந்தையை மட்டும் ‘நீதான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்’ என்று புகழ்வார்கள். குழந்தையின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு நம்முடைய குழந்தைகளை, அவர்களிடமிருந்து காப்பாற்றுவது முக்கியம். குழந்தைளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்துவந்தால்தான், இப்படிப்பட்ட மனிதர்களை அடையாளம் காணமுடியும். ஏனென்றால், அவர்கள் உங்களுக்கு நன்கு தெரிந்த நபராக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கண்காணிப்பு அவசியம்

“நிச்சயம் இந்தக் குற்றச் செயலைத் தடுப்பது சவாலான விஷயம்தான். அரசு எந்திரங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்” என்கிறார் பெடோ.

குழந்தைகளுக்குச் சில சமூக விரோதிகளாலும் குடும்ப உறுப்பினர்களாலும் பாலியல் தொல்லைகள் ஏற்படுவது நாம் முன்னரே அறிந்த செய்தி. வெளிநாட்டிலிருந்து சமூக சேவை செய்ய இந்தியாவுக்கு வரும் சில வெளிநாட்டினராலும் இந்தியக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2011-12 ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைக் கொடுத்ததற்காக 66 வெளிநாட்டினர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்னும் பெடா, “இதில் என்ன கொடுமையென்றால், இவர்களில் பாதிப் பேர் வெளிநாட்டிலும் இதே குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் எப்படியோ தப்பித்து சுற்றுலாப் பயணிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என்னும் பெயரில் இந்தியாவுக்குள் நுழைந்துவிடுகின்றனர்” என்கிறார்.

முகமூடி நபர்கள்

சமூக சேவை என்ற முகமூடியை அணிந்துகொண்டு இந்தியாவுக்குள் குழந்தைகளைக் குறிவைத்து நுழைந்தவர்கள்தான் டங்கன் கிராண்ட், ஆலன்வாட்டர், பார்டில் ப்ரேரே, பால் மீக்கீன், ரேமண்ட் வார்லி ஆகியோர். சமூக சேவை, கல்விப் பணியில் ஈடுபடப்போவதாக இந்தியாவுக்குள் நுழைந்த இவர்கள், குழந்தைகளைப் பாலியல்ரீதியில் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர் என்பது உறுதியாகியிருக்கிறது. இவர்கள் ஏழைக் குழந்தைகளைக் கடத்தி வெளிநாடுகளில் விற்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கின்றனர் என்னும் தகவல் பல தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகைய கொடுமைகள் இனியும் நிகழாமல் இருக்க, இந்திய வெளியுறவு அமைச்சகமும் அரசும் தொண்டு நிறுவனங்களையும், சேவை செய்வதற்காக வரும் வெளிநாட்டினரையும் தீவிர கண்காணிப்புக்குப் பின்பே இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் கொடுமைகள் புரியும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்பிக்காத வகையில் பார்த்துக்கொள்வதும் இந்திய அரசின் கடமை” என்கிறார் ‘துளிர்' அமைப்பின் நிறுவனர் வித்யா ரெட்டி.

மேலும் தகவல்களுக்கு:>http://www.tulir.org/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x