Published : 27 Dec 2015 12:31 PM
Last Updated : 27 Dec 2015 12:31 PM

குறிப்புகள் பலவிதம்: பாராட்டு வாங்கித் தரும் பொடிமாஸ்!

* ரசம் மணமாக, சுவையாக இருக்க வேண்டுமா? ரசத்தில் பருப்பு தண்ணீர் ஊற்றி, நுரைத்து வரும்போதே இறக்கிவிட வேண்டும், கொதிக்கவிடக் கூடாது. நெய்யில் கடுகு தாளிக்கும்போது ஒரு டீஸ்பூன் மிளகுப் பொடியைப் பொரித்துச் சேர்த்தால் எந்த ரசமும் சூப்பர்தான்!

* வற்றல் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெயில் தாளித்து, அதிலேயே தேவையான சாம்பார் பொடி போட்டு வதக்குங்கள். பிறகு புளித் தண்ணீர், உப்பு சேர்த்து குழம்பு செய்தால் தனி வாசனையுடன் ருசியுடனும் இருக்கும்.

* வாழைக்காய் பொடிமாஸ் செய்யும்போது, வேகவைத்த வாழைக்காயை உதிர்த்துச் செய்யாமல் கேரட் துருவியில் துருவிச் சேர்த்தால் கண்ணுக்கும் விருந்து, நாவுக்கும் சுவை! இத்துடன் கேரட்டையும் சீவிப் போட்டு, பச்சை பட்டாணியை வேகவைத்து சேர்த்தால பலநிற பொடிமாஸ் உங்களுக்குப் பாராட்டை வாங்கித்தரும்.

* வெல்லக் கொழுக்கட்டைக்கு மாவு கிளறுவது பலருக்கும் கைவராது. தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் மாவை அப்படியே தூவி செய்யும்போது அது கட்டிப்போவதற்கான வாய்ப்பு அதிகம். கட்டிதட்டிவிட்டால் கொழுக்கட்டைக்குச் சொப்பு செய்ய வராது. அதற்குப் பதில் அரிசி மாவைத் தண்ணீரில் கெட்டியாகக் கரைத்துக்கொண்டு, வாணலியில் ஒரு கரண்டி நீரில் சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் பால், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். கரைத்த அரிசி மாவை அதில் சேர்த்துக் கைவிடாமல் கிளறுங்கள். கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி, ஒரு பாத்திரத்தை மேலே கவிழ்த்து மூடிவையுங்கள். அரை மணி நேரம் கழித்து எண்ணெயைக் கையில் தொட்டுக்கொண்டு நன்றாகப் பிசைந்து கொழுக்கட்டை சொப்பு செய்தால் விள்ளாமல், விரியாமல் அருமையாக செய்ய வரும்.

* மைசூர்பாகு செய்யும்போது கடலை மாவைப் பாகில் அப்படியே சேர்த்தால் கட்டிதட்ட வாய்ப்புண்டு. அதற்குப் பதிலாக சிறிதளவு நெய்யை நன்றாக உருக்கி, அதில் கடலை மாவைக் கலந்து சேர்த்தால் சுலபமாகச் சேர்ந்துகொள்ளும். நெய்யும் டால்டாவும் சம அளவு கலந்து மைசூர்பாகு செய்தால் சுவையாக இருக்கும்.

* கேசரிக்கு வறுத்த ரவையுடன் வெந்நீரும், சிறிதளவு சூடான பாலும் கலந்து செய்தால் சீக்கிரம் வெந்து, கூடுதல் சுவையோடு இருக்கும்.

* வெல்லச் சீடை - பலருக்கும் சரியாக வராத ஒரு பட்சணம்! ஒன்று உள்ளே வேகாது அல்லது உதிர்ந்துவிடும். ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் வெல்லம் என்ற அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அரிசியை மாவாக அரைத்து வெறும் வாணலியில் சற்று சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். அதில் கைபொறுக்கும் சூட்டில் வெந்நீர் சேர்த்து உதிர்த்துக்கொள்ளுங்கள். வெல்லத்தை இளம்பாகாக்கி, அதை உதிர்த்த மாவில் சேர்த்துக் கிளறுங்கள். தேவையான உளுந்து மாவு, ஏலப்பொடி, நெய் சேர்த்துப் பிசைந்து சீடை செய்தால் அருமையாக இருக்கும்.

- ராதா பாலு, திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x