Last Updated : 06 Nov, 2016 01:42 PM

 

Published : 06 Nov 2016 01:42 PM
Last Updated : 06 Nov 2016 01:42 PM

களம் புதிது: ஆஸ்திரேலியாவில் சாதித்த ‘சாய்வாலி’

நம் நாட்டில் பலருக்கும் ஒவ்வொரு நாளும் தேநீருடன்தான் தொடங்குகிறது. புத்துணர்ச்சி பெறுவது முதல் எடை குறைப்புவரை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பரிமாணத்துடன் இடம்பெற்றுவிடுகிறது தேநீர். தேநீரைத் தன் உற்சாகத்துக்கு மட்டுமல்ல, வியாபாரத்துக்கான உத்தியாகவும் பயன்படுத்திவருகிறார் உப்மா. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் உப்மா விரதியின் அடையாளம் விதவிதமான சுவைகளில் தயாராகும் தேநீர் வகைகள்!

சண்டிகரைச் சேர்ந்த உப்மா, தேநீர் தயாரிப்பதற்காக ‘ஆர்ட் ஆஃப் சாய்’ வகுப்புகளை ஆன்லைனில் நடத்திவருகிறார். அத்துடன் தேயிலை கலவைகளை ஆன்லைனில் விற்பனையும் செய்துவருகிறார். இந்தியக் கலாச்சாரத்தில் தேநீர் குடிப்பதற்காக மக்கள் எப்போதும் ஒன்றுகூட விரும்புவார்கள்.

“இங்கே மகிழ்ச்சியான நேரங்களிலும் கடினமான நேரங்களிலும் தேநீர் தவறாமல் இடம்பெறுகிறது. ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் நான் எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒரு டீயைக் குடிக்க முடியவில்லை. அப்போதுதான் டீத்தூள் கலவை தயாரிக்கும் ஐடியா பிறந்தது” என்று சொல்லும் இவர், முதலில் இந்தத் தொழிலைத் தன் குடும்ப உறவுகள், நண்பர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறார். பின்னர், அருகிலுள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் தேயிலைக் கலவையை விற்பனைக்கு வைத்திருக்கிறார். இன்று நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறார்.

வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடரும் உப்மாவுக்கு, அவருடைய தாத்தாதான், மூலிகைகள், வாசனை மசாலாக்களைக் கொண்டு ஆயுர்வேத தேநீர் போடக் கற்றுத்தந்திருக்கிறார். மெல்போர்னில் ‘சாய்வாலி’ (பெண் டீ விற்பனையாளர்) என்ற பெயரில் ஆன்லைனில் தேயிலை கலவையை விற்பனை செய்துவருகிறார். அருமையான மணமும் சுவையும் ஆஸ்திரேலியர்களின் ருசியுணர்வைத் தூண்ட 26 வயதில் உப்மா, வெற்றிபெற்ற தொழில் முனை வோராக மாறியிருக்கிறார்.

இந்த ஆண்டுக்கான இந்திய ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் சமூக விருது வழங்கும் விழாவில், சிறந்த பெண் தொழிலதிபர் விருதை கடந்த வாரம் சிட்னியில் பெற்றிருக்கிறார். விருதைப் பெற்ற உப்மா, “ஆஸ்திரேலிய மக்கள் காபிக்கு மாற்று ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தனர். இதுவே சரியான நேரம் என்று டீ விற்பனைத் தொழிலைக் கையில் எடுத்தேன். ஆஸ்திரேலிய சமூகத்துக்கு, டீ மூலம் இந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்” என்று சொல்லியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x