Last Updated : 28 Apr, 2016 01:28 PM

 

Published : 28 Apr 2016 01:28 PM
Last Updated : 28 Apr 2016 01:28 PM

அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு

மே 4: அக்னி நட்சத்திரம்

அக்னியின் மறு பெயர் சூரியன். சூரிய ஓளி கூர்மை அடைந்து உஷ்ணம் அதிகரிக்கும்போது, அக்குறிப்பிட்ட காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கத்திரி என்ற பெயரும் உண்டு. இச்சொல்லின் பொருள் வேனிற் காலத்துக் கடுங்கோடை என்பதாகும்.

அக்னி நட்சத்திரம் வந்துவிட்டால் வெயில் கடுமையாக இருக்கும். வெயில் உடலில் பட்டால், உடலிலுள்ள எலும்புகள் திண்மை பெறும். இளஞ்சூரிய ஒளியில் விட்டமின் டி உள்ளது என்று மருத்துவம் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் வெயில் கிருமி நாசினியாகவும் விளங்குகிறது.

அக்னியின் தோற்றம்

ஆயிரம் நாக்குகள் கொண்ட செந்நிறமுடையவன் அக்னி தேவன். யாகங்களில் இடப்படும் ஆகுதிப் பொருட்களை தேவாதி தேவர்களுக்கு எடுத்துச் செல்பவர் அக்னி தேவன் என்கிறது வேதம். அதனால் அக்னி தேவனுக்கு புரோகிதன் என்ற தகுதியும் உண்டு. இந்த அக்னி தேவன் மூன்று வகையான உருவமாகக் காணப்படுகிறான். நெருப்பு, மின்னல், சூரியன் என்பவை ஆகும்.

அக்னியால் கூறப்பட்ட பல புராணங்களின் தொகுப்பிற்கு அக்னியின் பெயர் வைக்கப்பட்டு அக்னி புராணம் என்று அழைக்கப்படுகிறது. தேவர்களின் புரோகிதன் என்று ரிக் வேதம் குறிப்பிடப்படுகிறது.

அக்னியின் தோற்றத்தை விளக்குகிறது வேதம். அக்னிக்கு ஏழு கைகள், இரண்டு தலைகள், மூன்று கால்கள். இவரது நாக்கானது தீப்பிழம்பாய் ஏழு பிளவுகளுடன் வெளிப்படுகிறது. சிவப்பு நிறமான அக்னியின் உடலில் இருந்து ஏழு விதமான ஒளிக்கிரணங்கள் வர்ண ஜாலமாய் வெளிப்படுகின்றன. அக்னியின் வாகனம் ஆடு. அக்னி, பெரும் செல்வந்தன் என்று கருதப்படுகிறான்.

உயிர் வாழ்க்கைக்கு உரமிடும் அக்னி

அக்னியை பகவானாகக் கொண்டிருப்பதால். அக்னியைக் காலையும் மாலையும் வீட்டிலேயே ஹோமமாக வளர்த்து பூஜிப்பதுண்டு. இதற்கு அக்னி ஹோத்திரம் என்று பெயர். யாகங்களில் இடப்படும் பசு நெய் காற்றில் புகையாகக் கலந்து உயிர் வளர்ச்சிக்கு உரமிடும் என்பது ஐதீகம்.

அக்னியின் அகோரப் பசி

சுவேதகி என்ற மன்னன் பன்னிரெண்டு ஆண்டுகள் யாகம் நடத்தினான். அவன் தொடர்ந்து யாகத்தீயில் நெய் இட்டுக் கொண்டிருந்தான். இதனால் அக்னிக்கு அகோரப் பசி ஏற்பட்டது. இந்தப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் வழி தெரியாமல் திணறினான் அக்னி.

பசி தீரும் வழி

இந்தப் பசி தீரும் வழி என்ன என்று ஆராய்ந்தார்கள் தேவர்கள். அவர்களால் இதனை அறிய முடியாததால், பிரம்மாவை அணுகினர். பிரம்மாவும் பெருங்காடு ஒன்றினைத் தீ நாக்குகளால் தின்று தீர்த்தால் மட்டுமே, அக்னியின் இந்த அகோரப்பசி தீரும் என்று சாஸ்திரங்களைக் கண்டு உணர்ந்து கூறினார்.

அக்னியும், யமுனை ஆற்றங்கரையில் இருந்த காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்திரனோ மழையைப் பொழிந்து, அக்னி தன் தீ நாக்குகளால் உண்ண முடியாதபடி ஈரப்படுத்தினான். இந்திரனுக்கு தெரியாமல் காட்டை உண்டுவிடலாம் என்று பல உருவங்களை அக்னி எடுத்தும் பலன் இல்லை. அக்னிக்கு சங்கடம் ஏற்பட்டு துவண்டுபோனது.

முதியவர் வடிவம்

அக்னி, முதியவர் வேடம் தாங்கி யமுனைக் கரையில் உலா வந்தார். பசிக்கொடுமை வாட்டி வதக்கியது. இந்த நேரத்தில் கிருஷ்ணரும், அர்ச்சுனனும் அங்கே வந்தனர். அவர்களை அடைந்தார் முதியவர். பசிக்கிறது என்றார். பசியைப் போக்க உதவுவதாகக் கிருஷ்ணரும் வாக்கு அளித்தார். உடனே தன் சுயரூபம் கொண்டான் அக்னி.

அம்புக் கூடாரம்

இந்திரனின் மழை தன்னை உண்ணவிடாமல் தடுக்கிறது என்பதை முதியவர் உருவில் இருந்த அக்னி கூற, அர்ச்சுனனை அம்புக் கூடாரம் அமைக்க கிருஷ்ணர் உத்தரவிட்டார். அர்ச்சுனனும் காண்டவ வனம் முழுவதும் மூடும் அளவில் ஆயிரமாயிரம் அம்புகளைக் கொண்டு கூடாரம் அமைத்தான்.

கிருஷ்ணரின் கட்டளை

காண்டவ வனத்தைச் சாப்பிடலாம் என்று கிருஷ்ணர் அக்னிக்கு அனுமதி அளித்திருந்தாலும், அவரது ஒரு கட்டளைக்கு உட்பட்டே அதனை செய்யலாம் என்றார். இருபத்தியொரு நாட்களுக்குள் வயிறு நிறைய உண்டுவிட வேண்டும் என்பதே அது. இதனை ஒப்புக்கொண்ட அக்னி, காட்டை உண்பதற்காகத் தன் தீ நாக்குகளை நீட்டினான். இந்திரன் மழை பொழியத் தொடங்கினான். ஆனால் மழையின் ஒரு துளி கூட, அம்புக் கூடாரம் வழியாக நுழைய முடியவில்லை என்பதே உண்மை.

அக்னி பகவான் முதல் ஏழு நாட்கள் மரங்களின் கீழ்ப் பகுதியையும், அடுத்த ஏழு நாட்கள் மரங்களின் நடுப்பகுதியையும், அதற்கும் அடுத்த நாட்களில் நுனிப் பகுதியையும் உண்டு பசியாறினான். கிருஷ்ணருக்கு அளித்த வாக்கினையும் நிறைவேற்றினான்.

அக்னியின் போக்கு

முதல் ஏழு நாட்கள் அக்னியின் நிலை ஏறுமுகமாகவும், நடு ஏழு நாட்களில் அதன் தாக்கம் கடுமையாகவும், மூன்றாவது ஏழு நாட்களில் குறைவாகவும். இருக்கும். இதனை உணர்வுபூர்வமாகவே அறிய முடியும்.

தானமும் தர்மமும்

பசிப்பிணி போக்குதலே சிறந்த தானம். அதுவே அன்னதானம். கொதிக்கும் வெயில் உள்ள நாட்களில் வயிற்றுப் பசியையும் தாகத்தையும் தாங்கவே முடியாது. எனவே அக்னி நட்சத்திர நாட்களில், குடிநீருடன் அன்னதானம் வழங்க வேண்டும். வாய் வாழ்த்தாவிட்டாலும், வயிறு வாழ்த்தும் என்பது கிராமங்களில் வழக்கத்தில் உள்ள சொலவடை. இத்துடன் குடை, செருப்பு, விசிறி, நீர்மோர், பானகம் ஆகியவற்றையும் வெயில் நேரத்தில் வழங்கலாம்.

ஈசன் இணையடி நீழலே

சர்வேஸ்வரனான சிவன் பொதுவாகவே அபிஷேகப் பிரியன். அக்னி நட்சத்திர நாட்களில், லிங்க பாணத்திற்குச் சற்று மேலே தாரா பாத்திரம் என்ற துளை உள்ள பாத்திரம் தொங்கும். அதில் பக்தர்கள் அளிக்கும் பன்னீர், இளநீர், வாசனை திரவியங்களான வெட்டி வேர், சந்தனம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், மஞ்சள் பொடி, வாசனைப் பொடி, ஏலக்காய் பொடி உட்படப் பல பொருட்கள் கலந்த நீரை பக்தர்கள் அளித்தாலும் தாரா பாத்திரத்தில் சிவாச்சாரியார் சேர்ப்பார்கள்.

அலங்காரப் பிரியனான பரந்தாமனோ பள்ளி கொண்டு இருப்பதே அலைகள் தாலாட்டும் பாற்கடலில்தானே.

அக்னி நட்சத்திரம் 2016 ம் ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x