Published : 12 Apr 2018 12:32 PM
Last Updated : 12 Apr 2018 12:32 PM

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம்

துலாம் ராசி வாசகர்களே,

பிறர் தன்னைக் குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளர மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் இனம்புரியாத சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனதில் தன்னம்பிக்கை தந்து தலைநிமிர வைக்கும். தொடர் போராட்டமாக இருந்து வந்த குடும்பத்தில் இனி அமைதி தங்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி வஸ்துக்களைத் தவிர்க்க வேண்டும்.

சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பெரிதுபடுத்த வேண்டாம். கவுரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டிலேயே அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 3-ம் வீட்டில் அமர்வதால் செலவுகளும் திடீர்ப் பயணங்களும் அதிகரிக்கும்.

இந்தத் தமிழ் வருடம் பிறக்கும் நேரத்தில் சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிச் சிறப்பாக நடந்தேறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

14.04.2018 முதல் 12.02.2019 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதாலும் கேது 4-ல் நிற்பதாலும் தாயாரின் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 13.02.2019 முதல் 9-ல் ராகு நுழைவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கேது 3-ம் வீட்டில் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4-ல் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.

Thulam

வியாபாரத்தில் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்திலேயே லாபத்தைப் பெருக்கப் பாருங்கள். வைகாசி, ஆனி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.

கடையை நவீனமாக்குவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களால் விபரீத லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமானாலும் அதற்குத் தகுந்த சம்பள உயர்வும் உண்டு.

இந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் கோபப்பட்டுப் பேச வைத்தாலும், மறுபக்கம் பணவரவையும் செல்வாக்கையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமர்ந்திருக்கும் நடராஜரை உத்திரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x