Last Updated : 15 Mar, 2018 10:24 AM

 

Published : 15 Mar 2018 10:24 AM
Last Updated : 15 Mar 2018 10:24 AM

கோண்டுகளின் நாயகன் ராவணன்

ரா

மாயணத்தின்படி, ராவணன் இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னன்; சிறந்த சிவபக்தன் என்ற தகவல்கள் எளியவர்களுக்கும் தெரியும். ஆனால், தென்னக ஆலயங்களில் சிலைகளாகத் தென்பட்டாலும் ராவணன் வழிபடப்படும் தெய்வமாக இல்லை. மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானில் வசிக்கும் கோண்ட் பழங்குடி மக்கள் ராவணனின் பிறந்த இடமாக பிஸ்ராக் என்ற ஊரைக் கருதுகின்றனர். இது டெல்லியின் கிரேட்டர் நொய்டா அருகில் உள்ளது. ராவணனுடைய மனைவி மண்டோதரி மத்தியப் பிரதேசத்தில் விதிஷாவில் பிறந்தவர் என்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது.

ராவணனனைத் தங்கள் பரம்பரையில் வந்தவராகக் கூறும் கோண்ட் இனத்தவர்கள், தாங்கள் குடியேறும் இடங்களில் ராவணனுக்குச் சிலையெழுப்பி, தசரா காலத்தில் விழா எடுக்கிறார்கள்.

எரிக்கப்படும் வேளையில் பூஜை

கான்பூரில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தில் ராவணனுக்குத் தனி சன்னிதியே உள்ளது. தசரா நேரத்தில் மட்டும்தான் இந்த சன்னிதியில் வழிபாடு நடக்கும். குறிப்பாக, ராவணன் பொம்மை வெளியில் எரிக்கப்படும்போது இங்கு சிறப்பு பூஜை நடக்கும்.

ராவணன் பிறந்த இடமாக நம்பப்படும் பிஸ்ராக்கில், ராவணனுடைய தந்தை கட்டியதாகச் சொல்லப்படும் சிவன் கோயிலில் ராவணன் ஐந்தரை அடி உயரத்தில் இருக்கிறார். தசரா நேரத்தில் இப்பகுதியிலுள்ள கோண்ட் இனத்தவர்கள் துக்கம் அனுஷ்டித்து கடைசி நாளில் ராவணனுக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர்.

மண்டோதரி பிறந்த ஊராகக் கருதப்படும் மத்தியப் பிரதேச மாநிலத்து விதிஷாவில் ராவணனுக்குப் படுத்த நிலையில் பிரம்மாண்டமான சிலை இருக்கிறது. ராவணனை நிறுத்திவைக்க முயன்றபோதெல்லாம் இந்தக் கிராமத்தில் பல பிரச்சினைகள் எழுந்ததால் ராவணனைப் படுத்த நிலையிலேயே வைத்துவிட்டார்கள்.

நரம்புகளால் வீணை மீட்டியவன்

ஆந்திரப் பிரதேசம் காக்கி நாடாவில் கடற்கரையருகே காற்று வாங்க வரும் மக்கள் ராவணனைத் தரிசித்துச் செல்கின்றனர். ராவணன் சிலைக்குப் பின்னால் பிரம்மாண்டமான லிங்கம் மற்றும் தெய்வங்களின் சித்திரங்களைக் காணலாம். ராவணன் இந்த ஊரில் ஒரு சிவன் கோயிலைக் கட்ட எண்ணியிருந்ததாக ஒரு கதை இங்கே நிலவுகிறது. மத்தியப் பிரதேசத்தில் ராவணருண்டி என்ற கிராமம் ராவணனைத் தனது மாப்பிள்ளையாகக் கருதுகிறது. இங்குள்ள சிவன் கோயிலில் ராவணனுக்குத் தனி சன்னிதி ஏற்படுத்தியுள்ளனர்.

ஒரு சிவபக்தனாக, வேதங்களில் விற்பன்னனாக, தன் கை நரம்புகளாலேயே வீணை செய்து, சாமகானம் பாடி சிவனை மகிழ்வித்த ராவணனின் நல்ல அம்சங்களையும் ராவணன் வழிபாடு நினைவுகூர்கிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x