Published : 07 Dec 2017 11:05 AM
Last Updated : 07 Dec 2017 11:05 AM
ப
ம்பா ஆற்றின் கரையில் உள்ளது பருமல கிராமம். கேரளத்தின் தெற்குத் திசையில் செங்கன்னூர் அருகே உள்ளது இது.
கேரளத்தில் வாழ்ந்த புனிதர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் பருமலா திருமேனி. இவர் 1848 ஜூன் 15-ல் பிறந்தார்.
அவருடைய தாய் மரியம், தந்தை கொச்சுமாத்தாய். பருமலா திருமேனி முனதுருத்தியில் சதுர்த்தி வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்துவந்தார். அவரது சொந்தப் பெயர் மார் க்ரிகோரியோஸ். ஞானஸ்தானத்தின்போது கீவர்கீஸ் என அழைக்கப்பட்டார்.
அவரை அனைவரும் அன்பாக கொச்சைப்பெரா என்று அழைத்தனர். இளம் வயதிலேயே தாயை இழந்ததால் மூத்த சகோதரியின் அரவணைப்பில் வளர்த்தார். சிறு வயதிலேயே வாழ்க்கையை இறைவனுக்காகச் சமர்ப்பித்தார். மிகவும் எளிமையாக உடையணிந்தார். குறும்புகள் காட்டாமல் அமைதியாக இருந்தார். வேதப் புத்தகக் கதைகளைக் கேட்பதிலும் படிப்பதிலும் ஆர்வமாக இருந்தார்.
பாதிரியார் பட்டம்
பத்து வயதில் கரிங்காரிரோ ஆலயத்தில் மலங்கர மெட்ரோபாலிட்டன் மாத்தியூஸ்மார் அத்தானாசியோஸ் என்பவரால் கொருயோ பட்டம் வழங்கப்பட்டது. பத்து வயதிலேயே பாதிரியார் பட்டம் பெறுவதற்கான முதல் படியைத் தாண்டினார். 1865-ல் டீக்கன் பட்டமும் பாதிரியார் பட்டமும் பெற்றார். அதே ஆண்டு கோர் எப்பிஸ்க்கோப்பா பதவியும் வழங்கப்பட்டது. அப்போது கீவர்கீஸ்க்கு 18 வயது.
பிறகு வடக்கன் பரவூர் தேவாலயத்தில் ‘மார் க்ரிகோரியஸ்’ என்ற பெயரில் மெட்ரா போலிதாவாக (பிஷப் ) பட்டம் சூட்டப்பட்டார். இளம் வயதில் பிஷப் பட்டம் பெற்றதால் அவரை மக்கள் ‘கொச்சுத் திருமேனி’ என்று அன்புடன் அழைத்தனர்.
கீவர்க்கீஸ் மார் க்ரிகோரியஸ் திருமேனியின் வாழ்விடம் பருமலையாக முடிவுசெய்யப்பட்டது. முதலில் நிறுவப்பட்ட ஆலயம் ‘அழிப்புர’ என்றழைக்கப்பட்டது. மக்களின் குறைகள், பிரச்சினைகள், நல்வாழ்க்கைக்கான பிரார்த்தனைகள் ஆகியவை கொச்சுத் திருமேனியால் இங்கு நடத்தப்பட்டன. அங்கு வரும் பக்தர்களுக்கு நல்ல மார்க்கத்தைக் கற்பித்தார்.
இறை வழியை வெளிநாடுகளிலும் இவர் பரப்பினர். 1892-ல் இலங்கைக்குச் சென்றார். கடல்வழியே சென்றபோது நிறைய துன்பங்களை அனுபவித்தார்.
ஒரேயொரு ஒளிப்படம்
கீவர்கிஸின் ஒளிப்படத்தைப் பார்க்க மக்கள் ஆவல்கொண்டனர். அவர் எப்போதும் பிரார்த்தனையிலும் தியானத்திலும் இருந்ததால் அவரை யாராலும் ஒளிப்படம் எடுக்க முடியவில்லை. திருமேனியை ஒளிப்படம் எடுப்பதற்காக ஒருவர் நீண்டநேரமாகக் காத்திருந்தார். திருமேனி வந்தபோது வெயில் கடுமையாக இருந்தது. அதனால் சரியான ஒளியில் படம் எடுக்கமுடியவில்லை. அப்போது திருமேனி ஒரு நிமிடம் கண் மூடி தியானம் செய்தார்.
சட்டென்று ஒரு மேகம் வந்து குடைபிடிக்க, ஒளிப்படம் எடுக்கப்பட்டது. அவர் வாழ்வில் எடுக்கப்பட்டது அந்த ஒரேயொரு ஒளிப்படம்தான்.
அறிவுக்கு வழி
கல்வி கற்பதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்கூறினார். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்களை வலியுறுத்தினர். குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்காகப் பல பள்ளிகளை நிறுவினார்.
கீவர்கீஸை குடல் நோய் தாக்கியது. திருமேனியைத் தரிசித்து ஆசிபெறுவதற்காக மக்கள் திரண்டு வந்தனர். தன்னைத் தேடி வருபவர்க்கெல்லாம் உணவு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். மக்கள் அனைவரும் பசியாறி, ஆசிபெற்று வீடு திரும்பினர். தனது மரணம் எப்போது நடக்கும் என அவர் நன்றாக அறிந்திருந்தார்.
மிகவும் உறுதியுடன் மரணத்தை எதிர்பார்த்துப் படுத்துக்கொண்டிருந்தார். இறக்கும் தறுவாயில் கர்த்தாவே என்று மூன்று முறை சொன்னார். 1902 நவம்பர் 2-ல் நித்திரையடைந்தார். அவரின் கடைசி விருப்பப்படி அவர் வாழ்ந்த பருமலை ஆலயத்தின் வடக்கு உட்புற திசையில் அவருடல் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது 45- ம் ஆண்டு நினைவு தினத்தன்று அவர் ‘செயின்ட் ஆப் மலங்கார’ என்று அறிவிக்கப்பட்டார்.
பருமலை பண்டிகை
அவரது நினைவு தினமான நவம்பர் 1, 2 ஆகிய இரண்டு நாட்களிலும் பரிமலை பரிசுத்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளத்தில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கால்நடையாக பருமலை செல்கின்றனர்.
அவர் வாழ்ந்த அழிப்புரை வீடு தற்போது பிரார்த்தனைக் கூடமாக விளங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT