Published : 12 Oct 2017 10:58 AM
Last Updated : 12 Oct 2017 10:58 AM

தெய்வத்தின் குரல்: ‘ரேபம்’- தமிழின் தனிச் சிறப்பு

-கரம், இ-கரம், க-கரம் என்று சொல்வது போல ர-கரம் என்று சொல்லக் கூடாது, ‘ரேபம்’ என்றே அந்த எழுத்துக்கு மட்டும் தனிப் பெயர் கொடுத்திருக்கிறது. ம்ருதுவான சப்தமாக இல்லாமல் கொஞ்சம் முரட்டுச் சப்தமாக இருப்பது ரேபம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.

இதிலிருந்து Linguistics -ல், Semantics பாஷா சாஸ்திரத்தில் ஒரு பெரிய விஷயம் அகப்படுகிறது. (என்னவெனில்) தமிழில் இடையினம் என்பதைச் சேர்ந்ததாக ‘ர’ என்று ஒரு ம்ருது சப்தமான எழுத்தும், வல்லினத்தைச் சேர்ந்ததாக ‘ற’ என்று ஒரு முரட்டுச் சப்த எழுத்தும் இருக்கின்றன. பேச்சு வழக்கில் ‘சின்ன ர’, ‘பெரிய ற’ என்கிறோம். தமிழிலும், தமிழைப் போல் த்ராவிட பாஷைகளிலேயே இன்னொன்றான தெலுங்கிலுந்தான் வல்லின ‘ற’ உண்டு, சம்ஸ்கிருதத்தில் கிடையாது என்று பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். பாஷா சாஸ்த்ரஞ்ஞர்கள் (மொழியியல் வல்லுநர்கள்) கூட அப்படிச் சொல்வதாகப் பார்க்கிறேன். வாஸ்தவத்திலோ சம்ஸ்கிருத ர-சப்தம் தமிழில் உள்ள இடையின ‘ர’வுக்கும் வல்லின ‘ற’வுக்கும் மத்தியிலே உள்ள சப்தமே ஆகும்; வார்த்தை ஆரம்பத்தில் இடையினம் வருகிறபோது வல்லினம் மாதிரியும் அது த்வனிக்கும்.

தமிழில் இடையின ர, வல்லின ற இரண்டுமே வார்த்தையின் ஆரம்ப எழுத்தாக வராது. ர-ரா-ரி-ரீ... ரௌவரை எந்த எழுத்துமே வார்த்தையாரம்பத்தில் வராது. ‘ற’விலும் இதேபோல்தான். ‘வல்லின ‘ற’ விஷயம் சரிதான். ஆனால், இடையின ‘ர’வில் ஆரம்பிப்பதாக அநேக வார்த்தைகள் இருக்கின்றனவே!’ என்று நினைக்கலாம். வாஸ்தவத்தில் அந்த வார்த்தைகள் எல்லாமே சம்ஸ்கிருதம் முதலான பிற பாஷைகளிலிருந்து எடுத்துக்கொண்ட தாக்கத்தால் இருக்கும். முறைப்படி அவற்றைத் தமிழில் எழுதும்போது ‘ர’வுக்கும் முந்தி, வார்த்தையாரம்பமாக இ, உ, அ- இப்படி ஒரு எழுத்தைச் சேர்த்துத்தான் எழுதுவார்கள். இரகசியம், இராமன், இலக்குவன், இராவணன், உலோகம்,.... ‘உலகம்’ என்கிறது கூட ‘லோகம்’தான்..., உரோமம், உருசி, அரங்கன், அரம்பை என்றிப்படித்தான் எழுதுவார்கள்.

கிறிஸ்துவும் கிறிஷ்ணவும்

சம்ஸ்கிருத ‘ர’ பொதுவாக நம்முடைய இடையின - வல்லின ‘ர’க்களுக்கு இடைப்பட்ட சப்தம் எனலாம். அதிலும் வார்த்தையாரம்பத்தில் கொஞ்சம் ம்ருது - இடையினம் மாதிரி த்வனிக்கும், (வார்த்தை) மத்தியில் வரும் போது ஜாஸ்தி வல்லின சப்தமாக இருக்கும்.

இங்கிலீஷ் Christ -ஐ ‘கிறிஸ்து’ என்று வல்லின ‘ற’ போட்டுச் சொல்கிற மாதிரியேதான் ‘க்ருஷ்ண’ என்பதையும் (வல்லினமாக) சொல்ல வேண்டும் என்று கூட ஒரு அபிப்ராயம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இங்கிலீஷில் பார்த்தால், world, girl போன்ற வார்த்தைகளில் ‘r’ சைலன்ட் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இன்னும் பெரும்பாலான வார்த்தைகளிலும் வெள்ளைக்காரர்கள் r-ஐ ஒரே மழுப்பாக மழுப்பிக்கொண்டுதான் போவார்கள். ஆனாலும், Christ என்பது மாதிரி ‘ர’வைத் தெளிவாக உச்சரிக்கிறபோது நம்முடைய வல்லினம் மாதிரியே சொல்வதால்தான் நாம் ‘கிறிஸ்து’ என்பது. சம்ஸ்கிருதத்திலும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

அதாவது, ‘ர’காரம் என்காமல் ‘ரேபம்’ என்று சொல்லும் அட்ரம் என்ற ஒரு சம்ஸ்கிருத வார்த்தையாரம்பத்தில் வருகிறபோது ம்ருது பண்ணி நம்முடைய இடையினம் மாதிரி சொல்ல வேண்டும், வார்த்தையின் நடுவில் அது வரும்போது வல்லினம் தொனிக்கும்படிச் சொல்ல வேண்டும். இதைத் தெரிந்துகொண்டு சிலர் ‘நாறாயணஸ்வாமி’, ‘நடறாஜன்’ என்று கையெழுத்துப் போட்டுக்கூடப் பார்த்திருக்கிறேன்! இப்படி இரட்டை வித சப்தங்களாக ‘ர’ மட்டும் இருப்பதால்தான், அது மட்டுமே peculiar- ஆக இப்படி இருப்பதால்தான், மற்ற எழுத்துக்களை அ-கரம், த-கரம், ந-கரம் என்கிறது போல அதை ‘கரம்’ சேர்த்துச் சொல்லாமல் ‘ரேபம்’ என்பது.

தெய்வத்தின் குரல் (ஏழாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x