Last Updated : 24 Aug, 2017 12:40 PM

 

Published : 24 Aug 2017 12:40 PM
Last Updated : 24 Aug 2017 12:40 PM

அதிபதி ஆன கணபதி

விநாயகர் சதுர்த்தி - ஆகஸ்ட் 25

விநாயகர் தோன்றிய கதை நமக்கெல்லாம் தெரியும். கயிலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் சென்றபோது, அரைத்த மஞ்சளில் உருவம் செய்து கணேசனுக்கு உருவம் கொடுத்து தன் காவலுக்கு நிற்கச் சொன்னார். இந்நிலையில் அங்கு வந்த சிவபெருமானையும் சிறுவன் கணேசன் தடுத்துவிட்டான். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையைத் துண்டித்தார். பின்னர், பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் தனது பூதகணங்களை அழைத்து யானையின் தலையைத் துண்டித்து அந்தச் சிறுவனுக்குத் தலையாக வைத்து கணபதி ஆக்கினார். பூதகணங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் முதல் கடவுளாகவும் இப்படித்தான் ஆனார் கணபதி.

கடவுள் எப்போது வருகிறார்

பார்வதிதான் சக்தி. மனித உடலில் அவள் மூலாதாரச் சக்கரமான குண்டலினியில் உறைந்திருக்கிறாள். நாம் காம, குரோத, பந்தங்களிலிருந்து விடுபட்டு நம்மைத் தூய்மையாக்கிக்கொள்ளும்போது, கடவுள் அங்கே வந்துவிடுகிறார். அதனால்தான் பார்வதி குளிக்கும்போது சிவன் அங்கே வந்துவிடுவதாகச் சொல்கிறது கதை. பார்வதி மஞ்சளில் ஏன் பிள்ளையாரை உருவாக்கினார்.

24chsrs_pillayar இந்தோனேசியாவில் விநாயகர் right

மஞ்சள் குண்டலினி உறையும் இடத்தோடு தொடர்புள்ள நிறம். வள்ளலாரின் சன்மார்க்கக் கொடியும் மஞ்சளும் வெள்ளையும் கொண்டதுதான். நாபி முதல் புருவமத்தி ஈறாக உள்ள கொடிதான் புறத்தில் காட்டப்பட்டள்ளது. அந்தக் கொடியின் மேற்புறம் மஞ்சள் என்றும் அடிப்பாகம் வெள்ளையென்றும் விளக்கம் சொல்லியுள்ளார் வள்ளலார்.

இந்த உலகத்தைக் காக்கும் சிவன், வருகை தரும்போது சிறுவன் கணேசனால் அடையாளம் காண முடியவில்லை. கணேசன் அகந்தை உள்ள ஜீவனாய் அடையாளப்படுத்தப்படுகிறது. அகந்தையால் கடவுளை ஒருபோதும் அடையாளம் காண முடியாது. அகந்தையை அழிக்கக் குருவாக மாறிய சிவன், அகந்தை உறைந்திருக்கும் தலையைத் துண்டிக்க வேண்டியிருந்தது. குரு என்பவர் இருட்டை அழித்து வெளிச்சத்தை உருவாக்க வேண்டியவர். சில நேரங்களில் மிகக் கடுமையான நடைமுறையைத் தன் பிரியத்துக்குரிய மாணவனிடமும் பின்பற்ற வேண்டியிருக்கிறது.

உலகின் பிரதிநிதி தேவி

சிறுவன் கணேசனின் மரணத்தை அறிந்து வெளியே வந்த தேவி, மொத்தப் படைப்புகளையும் அழித்துவிடுவேன் என்று சிவனை மிரட்டினார். அகந்தையென்னும் உடல் அழியும்போது விடுதலையடையும் ஜீவன் பிரம்மத்துடன் இணைகிறது. அப்போது அகந்தையால் உருவாக்கப்பட்ட இந்த உலகம் அழிந்துவிடுகிறது. அந்த உலகின் பிரதிநிதியாக தேவி இங்கே சுட்டிக்காட்டப்படுகிறார்.

சிவன் கணேசனுக்கு யானையின் தலையை வைத்து உயிர் கொடுப்பது நமது சிறிய அகந்தையிலிருந்து நம்மைப் பிரித்துப் பேரிருப்பான பிரம்மத்துடன் இணையச் செய்வதைச் சித்திரிக்கிறது. தனி ஜீவனாக நம்மை அடையாளம் காண்பது மறைந்து உலகியற்கையுடன் தொடங்கும் ஜீவித பந்தமாகத் தொடரப்போகும் நீடித்த பந்தம் அது.

இப்படித்தான் சிறுவன் கணேசன் இந்த உலகின் சின்னஞ்சிறு பூச்சிகள், விலங்குகள் முதல் மனிதர்கள் வரை தேவர்களுக்கும் அசுரர்கள் எல்லாருக்கும் முதல் கடவுளானார். படைப்பின் இயக்கத்தில் இத்தனை உயிர்களும் பங்களிக்கின்றன. அந்த உயிர்கள் அனைத்துக்கும் நன்றி சொல்வதன் பொருட்டே கணபதிக்கு நன்றி சொல்கிறோம். அவரது ஆசிர்வாதத்தைப் பெறுவதன் வாயிலாக நாம் அனைத்துயிர்களின் ஆசிர்வாதங்களைப் பெறுகிறோம். விநாயகர், நமது எல்லா முயற்சிகளுக்கும் துணையிருக்கட்டும்.

shutterstock_186383855விநாயகர் உருவச் சிறப்புகள்

கால்கள்

ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிக்கும் ஞானமே திருவடிகளாக இருக்கின்றன.

பெரிய வயிறு

ஆகாயம் தொடங்கி அனைத்துப் பொருட்களும் தன்னகத்தே ஒடுங்கவும், உண்டாகவும் இடம்தந்து அடங்கியிருக்கும் இடமாகப் பெரிய வயிறு உள்ளது.

ஐந்து கரங்கள்

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே, இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. எனவே, இவரே மகாவிஷ்ணுவாகிறார். துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது. எனவே, இவா் ருத்ரா் ஆகிறார். மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே, இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.

கொம்புகள்

மகாபாரதத்தை எழுதுவதற்காகத் தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தைவிட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

தாழ்செவி

பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளைச் சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x