Published : 27 Jul 2017 11:01 AM
Last Updated : 27 Jul 2017 11:01 AM
கடல் உள்வாங்கும்போது மட்டுமே பக்தர்கள் வழிபட வழிவிடும் சிவாலயம் இது. பாண்டவர்களின் பாவம் தீர வழிபட்ட மிஷ்கலங்க மகாதேவர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கிறார்.
அகமதாபாத் மாவட்டம் பாவ்நகரில் கோலியாக் கடற்கரை உள்ளது.இந்தக் கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிவாலயம் இருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சுமார் ஆறு மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்குகிறது. அப்போதுதான் பக்தர்களால் வழிபட முடியும்.
இந்த நிகழ்ச்சி தினம்தோறும் ஒரே நேரத்தில், அதே கால இடைவெளியில் நடைபெறுவது மேலும் வியப்பை அளிக்கிறது. மாலை எட்டு மணி அளவில் கடல் உள்வாங்கும். கடற்கரைக்கு அருகில் காத்திருக்கும் பக்தர்கள் கடலுக்குள்ளே செல்கின்றனர். உள்ளே மேடை போன்ற மணற் திட்டில் அந்தச் சிவாலயம் அமைந்திருக்கிறது. உள்ளே ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன.
கடல்நீர் வற்றியதும் கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். பள்ளமும் சேறும் சகதியுமாக ஒன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டும்.ஆடையெல்லாம் நனைந்து, தடுமாறி, வீழ்ந்து, அடிபட்டு, சமாளித்துத் தான் கோயிலைச் சென்றடைய முடியும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாது பக்தர்கள் இங்கு நூற்றுக்கணக்கில் தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT