Published : 20 Jul 2017 09:36 AM
Last Updated : 20 Jul 2017 09:36 AM

விருச்சிகம்: ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

சிதறிக் கிடக்கும் சக்தியைத் திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை ஒரு வேலையும் செய்யவிடாமல் முடக்கிப்போட்ட ராகு பகவான், இப்போது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்வதால் சோம்பல் நீங்கும். முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக்காட்டுவீர்கள். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனி பிரகாசிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வீட்டில் ஒரு நல்லதுகூட நடக்காமல் தடைப்பட்டுக் கொண்டேயிருந்ததே, இனி சுபகாரியங்களால் வீடு களைகட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்.

தாம்பத்யம் இனிக்கும். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தீர்களே! இனி கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். ஆனால், ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாருடன் கருத்து மோதல் வர வாய்ப்பிருக்கிறது. கனிவான பேச்சால் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பாருங்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். பாகப்பிரிவினை பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகு பகவான் செல்வதால் வெளிநாட்டில் வேலைக்கு முயன்றவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், நெருங்கியவராக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் செல்வதால் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். ஆன்மிகப் பெரியவர்கள் உதவுவார்கள். ஆனால், நிலபுலன்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை நல்ல விதத்தில் முடிவடையும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் புது உத்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் வளைந்து கொடுத்துப் போவார்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். உத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய மேலதிகாரி, வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்களின் வெகுநாள் கனவான பதவியுயர்வு இனி உண்டு. வேலைச்சுமை குறையும். கலைத்துறையினரின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்துகொண்டு காரியத்தடை,மன உளைச்சல், தாயாருக்கு மருத்துவச் செலவு என உங்களைப் பலவகையிலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான், இப்போது மூன்றாவது வீட்டிலே வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் -மனைவிக்குள் அடிக்கடி சந்தேகப்பட்டுக்கொண்டீர்களே! இனி நெருக்கம் அதிகரிக்கும்.

சோம்பலாக இருந்த பிள்ளைகள் இனி சுறுசுறுப்படைவார்கள். உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். புலம்பிக்கொண்டிருந்த தாயார் இனி சிரிப்பார். அவருடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், இளைய சகோதர வகையில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து மறையும். கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் உங்களின் தைரியம், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அலைச்சல்கள் வந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். புது வேலை கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். ஆனால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் செல்வாக்கு கூடும். உங்களின் நிர்வாகத் திறமை கூடும். வழக்கு சாதகமாகும். சொத்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை நீங்கும்.

இந்த ராகு - கேதுப் பெயர்ச்சி விரக்தி அடைந்திருந்த உங்களை, வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் எங்கும் முதல் வரிசையில் அமர வைக்கும்.

பரிகாரம்: அஸ்வினி நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் முருகப் பெருமானை 9 நெய் தீபமேற்றி வணங்குங்கள். அத்தி மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x