Last Updated : 06 Jul, 2017 10:26 AM

 

Published : 06 Jul 2017 10:26 AM
Last Updated : 06 Jul 2017 10:26 AM

மேன்மை தரும் மேல்வெண்பாக்கம் பெருமாள்

மகாலஷ்மி சமேத ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் நான்கு யுகங்களாக மேல்வெண்பாக்கம் என்ற சிறு கிராமத்திலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலுக்கு, 1957-ம் ஆண்டு மஹாபெரியவர் காஞ்சியில் இருந்து நடந்தே வந்து இங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தார். அஷ்ட லக்ஷ்மிகளும் ஒரே லக்ஷ்மியாக உருவாகி பெருமாளின் அருகில் அணுக்கமாக அமர்ந்து இருக்கும் காட்சி மிக அற்புதமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம்’ என்று ஒரு இலையோ ஒரு பூவோ ஏதேனும் ஒன்றை எனக்காக மனப்பூர்வமாக அளித்தால்கூடப் போதும் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா, கீதையில் கூறியிருப்பதைக் குறிப்பிட்டு இதைக் கூறியிருக்கிறார்.

கண்ணீரும் பெருமாளுக்கு உகந்தது

ஆனந்தப் புன்னகை சிந்தும் அழகிய திருமுக மண்டலத்துடன் காணக் கிடைக்கிறார் மூலவர் பெருமாள். அணுவளவும் பிரியாமல் தாயாருடன் காட்சி அளிக்கும் பெருமாளைக் கண்டவுடன் பக்தர்களின் கண்களில் ஆனந்த நீர் நிரம்பி ஆறாய்ப் பெருகுவது உண்மையில் ஓர் அதிசய அனுபவம். பக்தியில் பெருகும் இக்கண்ணீ ர்கூடப் பெருமாளுக்கு மிகவும் உகந்தது என்பது திண்ணம்.

இங்கு ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரத்தன்று கலச பூஜை, ஹோமம், பெருமாளுக்கு கலசாபிஷேகம் ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன.

சம்வத்ஸராபிஷேகம்

சுவயம் திருமேனியே சாளக்ராமமாக வடிவெடுத்து வந்துள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள், மேல்வெண்பாக்கத்தில் சதுர்யுகமாய் அருள்பாலித்து வருகிறார் என்கிறது தல புராணம். மூலவரான இப்பெருமாளுக்கே திருச்சன்னிதியில் சம்வத்ஸராபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு ஸ்ரீஅஹோபில மடம் ஸ்ரீமத் அழகியசிங்கர், ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஆகியோர் ஆசி கூறியுள்ளனர். மேலும், காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடம், காஞ்சி ஸ்ரீஉபநிஷத் ப்ரும்மேந்திர மடம் ஆகிய மடங்களின் பீடாதிபதிகளும் ஆசி தெரிவித்துள்ளனர் .

அனுமன் தனது பிரம்மஹத்தி தோஷம் தீர இப்பெருமாளை வணங்கினாராம். ஆதிசேஷனையே கௌதுப மாலையாய் திருமார்பில் சூடியுள்ளவர் மூலவர் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். தாயாருடன் ஐக்கிய பாவத்தில் அருள்பாலிப்பவர், காஞ்சி மஹாபெரியவரால் ஆராதனை செய்யப்பட்டவர் இப்பெருமாள். ஸ்ரீசூக்த ஸ்ரீமந்திரமே தாயார் வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

ராகு, கேது தோஷ பரிகாரமாகவும் இத்தலம் விளங்குகிறது. இப்பெருமாள் ப்ரம்மஹத்தி தோஷத்தைக்கூட நீக்கிய சக்தி வாய்ந்த பெருமாளாக இருப்பதால், அனைத்துத் தோஷங்களையும் நீக்கிவிடுவார் என்பது ஐதீகம். இப்பெருமாள் சன்னிதியின் சுற்றுச் சுவரில் ராமாயணக் காட்சிகள் படங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது அழகு.

ஆயிரமாவது ஆண்டு காணும் ஸ்ரீராமானுஜர் தனது காலத்தில் இங்கு விஜயம் செய்துள்ளாராம். பக்தர்களுக்குக் குழந்தை வரம் அருளுவதால் இப்பெருமாளுக்குப் பிள்ளைக்காரன் சுவாமி என்ற காரணப் பெயர் உண்டு. பெருமாளும் தாயாரும் ஐக்கிய பாவத்தில் காட்சியளிக்கும் இத்திருக்கோயிலுக்கு இணைந்தோ தனித்தோ வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x