Published : 20 Jul 2017 09:35 AM
Last Updated : 20 Jul 2017 09:35 AM

மீனம்: ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

தன்னலமற்றப் போக்கும், வழிநடத்திச் செல்லும் குணமும் கொண்டவர்களே! ராகுவும் கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் பதற்றம், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள் என்று கொடுத்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். முன்கோபத்தைக் குறைக்கப் பாருங்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தபந்தங்களிடையே இருந்துவந்த மனக்கசப்பு விலகும். எனினும், அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்காதீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரிப்பது நல்லது. மகனின் அடிப்படை நடத்தைக் கோலங்கள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகு பகவான் செல்வதால் வேலைச்சுமை இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். இட வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். சில நேரங்களில் வீட்டில் தாயா, தாரமா என்ற தடுமாற்றம் வரும். ஷேர் பணம் தரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல விசா கிடைக்கும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் உண்டு. பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடன் ஒன்று தீரும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாகக் கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உயரதிகாரிகள் இனி உங்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கைக்கு வரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும் வீண் அலைச்சலையும் தந்து தூக்கமில்லாமலும் தவிக்கவைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி, குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். புதுப் பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு உண்டு. பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு மாறுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள், சகோதரர்கள் விரும்பி வருவார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வேலை கிடைக்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையைச் செலுத்தி நேர்த்திக் கடனை முடிப்பீர்கள்.

சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் வழக்கில் வெற்றி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

இந்த ராகுவும் கேதுவும் துவண்டிருந்த உங்களுக்கு புதுத் தெம்பையும் செல்வம், செல்வாக்கையும் அள்ளித் தரும்.

பரிகாரம்: மகம் நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். துளசிச் செடி நட்டுப் பராமரியுங்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x