Published : 13 Oct 2016 11:47 AM
Last Updated : 13 Oct 2016 11:47 AM

தெய்வத்தின் குரல்: தர்மம் தலை காக்கும்

புத்தாண்டு பிறக்கப்போவதற்கு அறிகுறியாக இயற்கை அன்னை தனது மர வர்க்கங்களின் அரசிளங் குழந்தைகளான அரசையும் வேம்பையும் முதலில் அடியோடு இலையுதிரச் செய்கிறாள். பிறகு பச்சைத் துளிர்களைத் தழைக்க வைக்கிறாள்.

அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்து அதனடியே விநாயகரையும், நாகராஜனையும் பிரதிஷ்டை செய்வது தொன்றுதொட்ட வழக்கு. பனிக் காலத்துக்குப்பின் இலை உதிரும்போது இந்த மரங்களைப் பார்த்தால் இலையே இருக்காது. பிள்ளையாரும் நாகராஜனும் மரத்தின் நிழற்குடையில்லாமல் வெளிச்சம் தங்கள்மேல் படுகிற மாதிரி இருப்பார்கள்.

இது, இம்மாதிரி ஆகாசம் பார்க்க சுக உஷ்ணமான சூர்ய வெளிச்சத்தை ஆனந்தமாக அனுபவிக்கிற பருவ காலமாகவே இருக்கிறது. மழையிலே குடை வேண்டும். கொளுத்துகிற வெயிலில் குடை வேண்டும். கடும்பனிக் காலத்திலும் இராவேளையில் சூரியன் இல்லாதபோது ஆகாசம் பார்க்க உட்கார்ந்து இருக்க முடியாது. ஆனால் அத்தனை பனியில்லாத இந்த இலையுதிர் காலத்தில் சிவராத்திரியோடு குளிர் 'சிவ சிவா' எனறு போய்விடும் என்பார்கள்.

அப்படிப்பட்ட காலத்தில் சுக உஷ்ணமாகச் சூரியன் இருக்கும் காலத்தில், பகல் இராப்பொழுது இரண்டிலும் ஆகாசம் பார்க்க உட்கார்ந்து இருக்கலாம். இதை உணர்த்துகிறது போலவே இயற்கையன்னை இந்தப் பருவத்தில் விக்நேசுவரருக்கும் நாகராஜனுக்கும் சூரிய பூஜை செய்கிற மாதிரி மேலே இருக்கிற அரசு, வேம்பு மரங்களின் இலைகளை உதிர்த்துவிடுகிறாள்.

நாகராஜனை சுப்ரமண்ய சுவாமி என்றே சொல்லலாம். தெலுங்கர்கள் சுப்ரமண்யர், பாம்பு இரண்டையும் `சுப்பராயடு' என்றே சொல்லுகிறார்கள். ஷஷ்டியில் நாகராஜ பூஜை செய்கிற வழக்கம் நம் தமிழ் தேசத்திலும் பிராசீனமாக இருந்து வந்திருக்கிறது. ஆதி தம்பதிகளின் முதல் குழந்தைகளான பிள்ளையார், குமாரஸ்வாமி இரண்டு பேருக்கும் இயற்கையன்னை காட்டுகிற பரிவு, பார்வதீ பரமேசுவரர்களின் குழந்தைகளான நம் அத்தனை பேரிடமும் காட்டுகிற அன்புக்கு அடையாளமாக இருக்கிறது.

அது நிறைந்த பரிவாக இருக்கிறது. இப்போது சுகோஷ்ணமாக மித வெப்பமாக இருந்தால் இவர்களை இப்படிச் சூரிய ஒளியில் உட்கார்த்தி வைத்திருந்தாலும், வசந்த காலம் வந்தவுடன், சூரியன் கொஞ்சம் உக்ரமானவுடன், அது அவர்களை உபத்திரவப்படுத்தக் கூடாது என்கிற கரிசனம் இயற்கை அன்னைக்கு வந்துவிடுகிறது. சூரியன் கடுமையாகும் காலத்தில் துளிர்கள் தழைத்துப் பசுங்குடை பிடிக்கிறாள். இலையுதிர்ப்பது, துளிர்ப்பது எல்லாம் இயற்கை; லோக நியதி; அவை யுகாந்தரங்களாக மாறாமல் நடப்பவை.

பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. அப்படி அவை நியதிப்படி நடப்பதால்தான் உலக வாழ்க்கை நடக்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் நெறிகெட்டுப் போய்விடும். அதாவது லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் சௌக்கியமாக வாழ வேண்டும் என்கிற அன்பான எண்ணத்திலேயே அவை ஒன்றோடொன்று ஒத்துப் போவதற்காக இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு தர்மம், நியதி (law) ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தன் குழந்தைகளை வெயில் படாமல் மழை படாமல் காப்பாற்ற வேண்டும்; அவர்களுக்கு இள வெயிலின் வெப்பம் தேவையாக இருக்கிறபோது அதைத் தந்து அரவணைக்க வேண்டும் என்கிற அன்பு ஈசுவரனுக்கு இருப்பதால் அதற்கு அநுசரணையாக இயற்கையை நடத்திவைத்து மரங்களுக்கு ஒரு நியதியை, தர்மத்தைத் தந்திருக்கிறார்.

இந்த அன்பைப் பெற நமக்கு யோக்யதாம்ஸம் வேண்டாமா? வேண்டும். மரத்துக்கும் மட்டைக்கும் இருக்கிற நியதி நமக்கும் உண்டு. லோக க்ஷேமத்துக்காக அதை நாம் நடத்திக் காட்டுகிற போதுதான் ஈசுவரனின் அன்பைப் பெற பாத்தியதை கேட்கலாம். மனிதனுக்காக உள்ள இந்த நியதிக்கே தர்மம் என்று பெயர். இந்த நியதியை மீறவும் மனிதனுக்கு மூளையைத் தந்து ஸ்வாமி விளையாட்டுப் பார்க்கிறார். அந்த மூளையை வைத்துக்கொண்டு இவனும் எதை எதையோ சௌக்கியமாக நினைத்துக்கொண்டு, அவற்றுக்காக அலைகிறான். இதில் தனக்கான தர்மத்தையும் மீறுகிறான். ஆனால் இறுதியில் சௌக்கியத்தைத் தருவது தர்மமே.

'லோகம் முழுவதையும் பகவானுடையதாகப் பார்த்து, அதற்கேற்ப எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடப்பதே மனுஷ்யர்களின் தர்மம். தனக்கென்று மட்டும் இவன் செய்து கொள்கிற காரியங்கள் இவனை அதர்மத்தில்தான் தள்ளும். எனவே, இப்போது இவனுக்கு இருக்கிற சுயநலத்தைக் குறைக்க வேண்டும். இவனுக்கு ஈசுவரனின் நினைப்பை உண்டாக்கி, அவனுடைய உடைமையே உலகமெல்லாம் என்ற அறிவை ஏற்படுத்த வேண்டும்' என்ற அடிப்படையில்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன.

`உன் ஆசைப்படி நடந்து கொண்டு உனக்கேற்ற சொத்து சேர்த்துக்கொள்' என்று சொல்கிற மதம் எதுவுமே இல்லை. தன்னை முக்கியமாக நினைத்துக் கொள்கிற வரையில் இவன் சுயநலத்துக்குத்தான் காரியம் செய்து கொள்வான் என்பதால் அத்தனை மதங்களும் கடவுள் என்கிற ஒன்றை இவனுக்குச் சொல்லி, `அப்பா பிரபஞ்சம் முழுவதையும் செய்த அந்த மஹா சக்தியின் முன் நீ ஒன்றுமே இல்லை' என்று காட்டி இவனுடைய அகங்காரத்தைக் குறைக்கின்றன.

அந்த மகாசக்திமானைப் பிடித்துவிட்டால் நம் மூளையைச் செய்த அவனே அதை எப்படித் திருத்த வேண்டுமோ அப்படித் திருத்தி நம்மை நம் தர்மத்தில் ஈடுபடுத்தி விடுவான் என்பதால் பக்தியையே பெரும்பாலான மதங்கள் முக்கியமாக வைத்திருக்கின்றன.

தர்மமே தலை காக்கும். பத்துத் தலை ராவணன் விழுந்து நாசமாக, ராமசந்திரமூர்த்தி விஜயராகவனாகத் தலை நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் தர்மம் தலைகாத்ததுதான். அவரவருக்கும் முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மமே ஒவ்வொரு மதமாயிருக்கிறது. இந்த தர்மத்தை அவரவரும் தைரியமாக, நியாயமாக பின்பற்றிச் சாசுவத சௌக்கியத்தைப் பெறுவீர்களாக.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x