Published : 21 Apr 2016 12:13 PM
Last Updated : 21 Apr 2016 12:13 PM

துன்முகி வருட ராசி பலன்கள் (மேஷம் முதல் கன்னி வரை)

இந்த வருடத்தை சமஸ்கிருத ஜோதிட நூல்கள் துன்முகி எனவும், தமிழ் ஜோதிட நூல்கள் துன்முகி எனவும் குறிப்பிடுகின்றன. துன்முகி தேவதையானவள் கலியுக மக்களிடையே இருக்கக் கூடிய கஷ்ட, நஷ்டங்களையெல்லாம் போக்குவதற்காக சற்றே கோர முகத்துடன் தோன்றி மக்களுக்கு நாலாவித நன்மைகளையும் நல்குபவளாக இருப்பாள்.

துன்முகி வருட வெண்பா இது.

“மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே

தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான

குஜர தேசத்தில் குறைதீர வே விளையும்

அச்சமில்லை வெள்ளையரி தாம்”

என்ற இடைக்காடர் சித்தர் பெருமான் பாடலின்படி இந்த வருடம் உலகெங்கும் மழை பொழியும். மண்வளம் அதிகமாகும். விவசாயம் தழைக்கும். தானியங்கள் பெருகுவதுடன் பால் உற்பத்தியும் அதிகரித்து மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். துன்முகி வருடத்தின் ராஜாவாகவும், தான்யாதிபதியாகவும் சுக்கிரனும், மந்திரியாகவும், மேகாதிபதியாகவும், அர்க்காதிபதியாகவும் புதனும், ரசாதிபதியாக சந்திரனும், நீரசாதிபதியாக சனியும் வருகிறார்கள்.

மேஷம்

அதீத தன்னம்பிக்கையாளர்களே! இந்த துன்முகி வருடம் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் பிறப்பதால் மனோபலம் அதிகமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிவகை பிறக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருடப் பிறப்பு முதல் 01.08.2016 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் நிற்பதால் அடிப்படை வசதிகள் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வரன் தேடித் தேடி அலுத்துப்போன உங்களின் மகளுக்கு இந்த ஆண்டு கல்யாணம் சிறப்பாக முடியும். மகனின் உயர்கல்வி, வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

தூரத்து சொந்தம் தேடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வீண்பழி வரக்கூடும். புகழ், கௌரவம் குறைந்துவிடுமோ என்ற ஒரு அச்சம் வரும். தன்னம்பிக்கை குறையும். சில நேரங்களில் நெருக்கடிகளையும், தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டிவரும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால் திறமைகள் வெளிப்படும். தடைபட்ட திருமணம் கூடி வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவிக்கு இருந்துவந்த நோய் குணமாகும். இந்த ஆண்டு முழுக்க அஷ்டமத்துச் சனி தொடர்வதால் திடீரென்று அறிமுகமானவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. நகை, பணம், முக்கிய சொத்து ஆவணங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. வீட்டில் களவுபோக வாய்ப்பிருக்கிறது. நெஞ்சு வலி, உறக்கமின்மை வந்து செல்லும். கை, கால் மரத்துப் போகும். துன்முகி வருடம் முழுக்க ராகு ராசிக்கு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாதக் குணம் அதிகமாகும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள்.

பாதை மாற வாய்ப்பிருக்கிறது. மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கேது லாப வீட்டிலேயே தொடர்வதால் பங்குச்சந்தை பணம் தரும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். கோவில் விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்துகொண்டேயிருக்கும். யாருக்கும் கடன் தர வேண்டாம். ஆனி, தை, மாசி மாதங்களில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். உங்களின் உத்யோக ஸ்தானாதிபதியான சனி பகவான் 8-ல் நீடிப்பதால் அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். உங்கள் மீது சிலர் வழக்குத் தொடுப்பார்கள். நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வைப் போராடி பெற வேண்டிவரும்.

இந்த வருடம் பிறக்கும்போது குரு பகவான் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டேயிருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் கௌரவம் ஒரு படி உயரும். கேது 11-வது வீட்டில் தொடர்வதால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் பெரியோரின் ஆசியால் பணப் புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வும் கிடைக்கும்.

ரிஷபம்

கடந்த காலத்தை அசைபோடுபவர்களே! உங்கள் ராசிக்கு தனஸ்தானத் தில் இந்த துன்முகி வருடம் பிறப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. வி.ஐ.பி.க்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளுமளவுக்கு நெருக்கமாவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி நவீன ரக வண்டி வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 01.08.2016 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களும் ஏற்படும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடித் திட்டங்கள் தீட்டி உழைப்பீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களை கட்டும். மனை வாங்கி போட்டு வெகு நாட்களாகிவிட்டதே! அதில் இப்போது வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். குழந்தைபாக்யம் தள்ளிப் போனவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும்.

மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனின் கூடாநட்பு விலகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால் வீண் பழி, அவமானங்கள், கவலைகள், பொருள் இழப்புகள், ஏமாற்றங்கள் தொடங்கி உடலைப் பாதிக்கும் சிறுநீரகத் தொற்று, ஒவ்வாமையும் வந்துபோகும். இந்த வருடம் முழுக்க ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-வது வீட்டிலும் தொடர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும்.

வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். வீடு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துபோகும். உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வரும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். கண்டகச் சனி நடைபெறுவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கருப்பையில் கட்டி, தைராய்டு, சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையாலும் பிரியும் நிலைக்குச் சிலர் தள்ளப்படுவீர்கள். உங்கள் ராசியை சனி பார்ப்பதால் மறதி, மன இறுக்கம், வீண் சந்தேகம் வந்து நீங்கும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். விபத்துகள், பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள்.

தொழில் போட்டி அதிகமாகும். ஆவணி, ஐப்பசி மாதங்களில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் பழைய சிக்கல்களெல்லாம் பனியாய் விலகும். நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். என்றாலும் உத்யோகஸ்தானத்தில் இந்த ஆண்டு முழுக்க கேது தொடர்வதால் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், மொட்டைக் கடிதங்களின் அடிப்படையில் சின்னச் சின்ன விசாரணைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் வரும். ஆடி, மாசி மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும்.

ராசிநாதன் சுக்ரன் உச்சமாகி முழு பலத்துடன் இருக்கும் போது இந்த வருடம் பிறப்பதாலும், ஆகஸ்டு மாதம் முதல் குரு வலுவடைவதாலும் வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் வழிகாட்டுதலால் முன்னேறுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும்.

மிதுனம்

கற்பூரப் புத்தி உள்ளவர்களே! சூரியன், புதன் மற்றும் சுக்ரன் உங்களுக்குச் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அரசாங்க அனுமதி கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலையுயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். இந்த வருடம் முழுக்க சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். பதவிகள் தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த துன்முகி வருடம் பிறப்பதால் அவ்வப்போது தலைச் சுற்றல், செரிமானக் கோளாறு, பதற்றம், படபடப்பு வந்துசெல்லும். இந்த துன்முகி வருடம் முழுக்க ராகு 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் மனோபலம் கூடும். பங்குகள் மூலம் பணம் வரும். வேற்று மதத்தவர், மாற்று மொழியினரால் திடீர்திருப்பம் உண்டாகும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். ஆனால் கேது 9-ல் தொடர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கல் வரும். வருடப் பிறப்பு முதல் 01.08.2016 வரை குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.

வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 4-ல் நுழைவதால் தாயாருக்கு நெஞ்சு வலி, முதுகுத் தண்டில் வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசு காரியங்கள் தாமதமாகும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 5-ல் அமர்வதால் மனக்குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். அயல் நாட்டிலிருப்பவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். சித்திரை, ஆவணி மாதங்களில் புதுக்கிளைகள் தொடங்குவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளைத் தருவார்கள். சித்திரை, புரட்டாசி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

சனி, ராகு வலுவாக இருப்பதால் இந்த வருடத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

கடகம்

இரக்கக் குணம் அதிகமுள்ளவர்களே! உங்களின் யோகாதிபதி செவ்வாய் ஆட்சிபெற்று 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வி.ஐ.பி.க்கள் நண்பர்களாவார்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகள் உங்களைப் புரிந்துகொள்வார். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் வந்தமைவாள்.

எதிர்பாராத பணவரவு உண்டு. இந்தாண்டு முழுக்க சனிபகவான் 5-ம் இடத்திலேயே தொடர்வதால் குழம்புவீர்கள். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வீண் அலைச்சல்களும், செலவுகளும் இருக்கத்தான் செய்யும். திடீர் பயணங்கள் உண்டாகும். அவ்வப்போது தூக்கம் கெடும்.

இந்த துன்முகி வருடம் முழுக்க ராகு 2-ம் இடத்திலும், கேது 8-ம் இடத்திலும் தொடர்வதால் பல் ஈறில் ரத்தம் கசிதல், பல், காது மற்றும் கணுக்கால் வலி, பார்வைக் கோளாறு வந்துபோகும். சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். சாலைகளைக் கவனமாகக் கடந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். 01.08.2016 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வங்கிக் கடன் கிடைத்து வாகனம் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு ராசிக்கு 3-ல் அமர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக்கூட இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.

முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 4-ல் அமர்வதால் தாயாருடன் கசப்புணர்வுகள், அவருக்கு நரம்புச் சுளுக்கு, மூட்டு வலி வந்து போகும். அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சிலர் வீடு மாற வேண்டி வரும். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிறுநீரகத் தொற்று, வாய்ப் புண், வயிற்றுப் புண் வரக்கூடும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். லாபம் சுமார்தான். புது ஒப்பந்தங்களை யோசித்து ஏற்கப்பாருங்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். வைகாசி, புரட்டாசி மாதங்களில் எதிர்பார்த்த சலுகைகளும், விரும்பிய இடத்திற்கே வேலை மாற்றமும் உண்டாகும்.

செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதாலும், குரு சாதகமாக இருப்பதாலும் பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் முடியும். வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

சிம்மம்

தன்மானம் தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இந்த துன்முகி வருடம் பிறப்பதால் நினைத்தது நிறைவேறும். வெற்றிபெற்ற மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். 01.08.2016 வரை ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர்வதால் உடல்நலம் பாதிக்கும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். தோலில் நமைச்சல், குட்லவால் தொற்று, வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வரக்கூடும்.

தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. உங்களின் திறமைகள் குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைப்பீர்கள். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு, களைப்பு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மோதல்களெல்லாம் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரம், நகைகளையெல்லாம் மீட்க வழி வகை பிறக்கும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 3-ல் அமர்வதால் வேலைச் சுமை இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தலைத்தூக்கும். உறவினர்களில் சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகுவார்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 4-ல் அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாகத் தொடர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, சோர்வு, களைப்பு வந்துச் செல்லும். அவருடன் பிணக்குகள் வரும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும்.

வழக்கால் நெருக்கடிகள் வரக்கூடும். நகர எல்லைப் பகுதியிலோ, வெளியூரிலோ வீடோ, மனையோ வாங்கியிருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. உங்கள் இடத்தை மற்றவர்கள் ஆக்கிரமிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் இருக்கும் ஊரை விட்டு வேறு ஊர், வேறு மாநிலத்திற்கு குடிபுகுவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சின்னச் சின்ன அபராதம் கட்ட வேண்டிவரும். இந்த ஆண்டு உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். பச்சைக் கீரை, காய், கனிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். சின்னச்சின்னப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்கப்பாருங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இந்த வருடம் பிறப்பதாலும், ஆகஸ்டு மாதம் முதல் குரு வலுவடைவதாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். நோய் விலகும். ஏமாந்த தொகை கைக்கு வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும்.

கன்னி

மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்களே! இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் தனாதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது ராசியையும் பார்த்துக்கொண்டிருப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறமை அதிகரிக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். புதுப் பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் 3-ம் வீட்டில் தொடர்வதால் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். புதுவேலை கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பூர்வீகச்சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். ராகுபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். திட்டமிடாத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப செலவுகளும் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் கேது இந்தாண்டு முழுக்க 6-ம் இடத்திலேயே தொடர்வதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள்.

வேற்று மாநிலத்தவர்கள், மாற்று மொழியினர்களால் ஆதாயமடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 01.08.2016 வரை குரு ராசிக்கு 12-ல் நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அரைகுறையாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தூக்கம் குறையும். ஆனால் 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம் வந்து போகும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தெரியும். ஒவ்வாமைகள், நோய்த்தொற்றுகள் வரக்கூடும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி தினசரி மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு, கசப்புணர்வு வந்து செல்லும். யாருக்காகவும் உறுதிமொழிகள் தர வேண்டாம். உங்கள் குடும்ப விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.

ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 2-ல் அமர்வதால் அதுமுதல் குடும்பத்தில் நிம்மதி, திடீர் பணவரவு, பேச்சில் கனிவு எல்லாம் வரக்கூடும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியச் சாலைக்குக் கடையை மாற்றுவீர்கள். ஆனி, ஆடி, மாசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். சக ஊழியர்களில் ஒரு சிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துகொள்வார்கள். மூத்த அதிகாரிகள் ஒருசில விஷயங்களைச் செய்யச் சொல்லி வற்புறுத்தினாலும் சட்டத்திற்குப் புறப்பாக நீங்கள் எதையும் செய்துகொண்டிருக்காதீர்கள். ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்களில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

தனபாக்யாதிபதி சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்ப அந்தஸ்து உயரும். மகளுக்குத் திருமணம் முடியும். சனி, கேது சாதகமாக இருப்பதால் பங்குச்சந்தை மூலம் பணம் வரும். நவீன ரக செல்போன், மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x