Published : 23 Jun 2016 11:52 AM
Last Updated : 23 Jun 2016 11:52 AM

திருத்தலம் அறிமுகம்: முத்திருக்கோலத்தில் மகா விஷ்ணு- வெங்கடாம்பேட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில்

நின்ற திருக்கோலம், சயனத் திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம் என ஒரே இடத்தில் மூன்று திருக்கோலத்திலும் விஷ்ணு பகவான் காட்சி கொடுத்த இடம் வெங்கடாம் பேட்டை  வேணுகோபால சுவாமி திருக்கோயில்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வெங்கடாம் பேட்டை. கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்தவர் வேங்கடபதி நாயக்கர். தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் இவர் நிர்மாணித்த ஊர்தான் வெங்கடாம் பேட்டை.

துவாபர யுகத்தின் முடிவில் உலகில் அறச்செயல்கள் அற்று அதர்மங்கள் தலைவிரித்து ஆடின. இதைக் கண்டு மனம் வருந்திய சடமர்ஷனர் எனும் மகரிஷி தீர்த்தவனம் என்ற இடத்தில், மூவுலகும் போற்றும் பூமகள் நாயகனை வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டார். அறம் தழைக்கவும் தர்ம நெறி நிலைக்கவும் இத்தவத்தை மேற்கொண்டார்.

பேரின்பத்தைக் கேட்ட ரிஷி

மகரிஷியின் தவத்தைக் கண்டு மெச்சிய மகா விஷ்ணு, லெட்சுமி பிராட்டியோடு ரிஷிக்குக் காட்சி கொடுத்து, என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். மகாவிஷ்ணுவையும் தேவியையும் வணங்கிய சடமர்ஷனர், “இந்தத் தீர்த்த வனத்தில் முன்பொருமுறை எனக்கு கோடி சூரிய பிரகாசனனாகக் காட்சி தந்தீர்கள். அதுபோல இந்தக் கலியுகத்தில் அடியவர்கள் எம்பெருமானது திருக்காட்சியைக் கண்டு வாழ்வியல் துன்பங்களிருந்து விடுபட்டு பேரின்பத்தை அடைய வேண்டும். இதற்காக நீங்கள் இவ்வனத்தில் நின்ற, அமர்ந்த, சயனித்த திருக்கோலங்களில் காட்சி தர வேண்டும். அதன் மூலம் உங்களை நாடி வரும் பக்தர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் வழங்கி அருள்பாலிக்க வேண்டும்.’’ என்று வரம் கேட்டார்.

அவர் கேட்ட வரத்தை அளித்த மகாவிஷ்ணு, அந்த இடத்தில் மூன்று திருக்கோலத்திலும் காட்சி கொடுத்தார். அப்படிக் காட்சி கொடுத்த இடம்தான் வெங்கடாம்பேட்டைஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக் கோயில்.

இத்திருத்தலத்தில் மகா விஷ்ணுவானவர், நின்ற திருக்கோலத்தில் பாமா - ருக்மணி சமேதஸ்ரீ வேணு கோபாலனாகவும், அமர்ந்த திருக்கோலத்தில்ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமானாகவும், சயனத் திருக்கோலத்தில் அனந்தன் மீது அறிதுயில் கொண்டஸ்ரீ அனந்தசயன ராமனாகவும் காட்சி கொடுக்கிறார். இம்மூன்று திருக்கோலங்களையும் ஒருங்கே வணங்கும் அடியவர்கள் அனைத்துச் செல்வங்களையும் பெற்று வாழ்வில் நிலையான வெற்றியைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x