Published : 02 Jul 2015 11:51 AM
Last Updated : 02 Jul 2015 11:51 AM

குருப் பெயர்ச்சிப் பலன்கள்: 05.07.2015 முதல் 01.08.2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 05.07.2015 கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி, மேல்நோக்குகொண்ட அவிட்டம் நட்சத்திரம், ப்ரீதி நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த மந்த யோகத்தில், பஞ்ச பட்சியில் மயில் பலவீனமாக உள்ள நேரத்தில் உத்ராயணப் புண்ய காலம் கிரிஷ்மருதுவில் குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இரவு மணி 11.04-க்குப் பெயர்ச்சி ஆகிறார். 05.07.2015 முதல் 01.08.2016 வரை இங்கே அமர்ந்து தன் அதிகாரத்தைச் செலுத்துவார்.

குருபகவான் சிம்மத்தில் அமர்வதால் வங்கிகள் தங்களுடைய வட்டிவிகிதத்தைக் குறைக்கும். நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் சாதாரண நிலையில் இருப்பவர்களும் கடனை எளிதாகப் பெறும் அளவிற்கு சட்ட விதிகள் தளர்த்தப்படும். ஆனால் வாராக்கடனை வசூலிக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும். பணப்புழக்கம் ஓரளவு அதிகரிக்கும். கல்வி நிறுவனங்கள் தழைக்கும், உலகத்தரத்திற்கு ஈடுஇணையாக இந்தியக் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த படிப்படியாகப் புதிய சட்டதிட்டங்களை அரசு கொண்டு வரும்.

தகுதியற்ற அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த சிறப்புப் பயிற்சி அரசால் அளிக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். சுபாஷ்சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் முக்கியத்துவம் பெறுவார்கள். ரூபாய் நோட்டில் பல மாற்றங்கள் செய்யப்படும். நவீனமாக அச்சடிக்கப்படும். பழைய தியாகிகளின் படங்களும் ரூபாய் நோட்டில் இடம் பெறும். கள்ளப்பணப் புழக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.

வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்குப் புதிய சட்ட விதிகள் அமலுக்கு வரும். புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த புதிய மருந்துகள் கண்டறியப்படும். மருந்துகளின் விலை குறையும். பெரிய அளவிலே அறுவைசிகிச்சை இல்லாமல், ரத்த இழப்பில்லாமல் இதயநோயைக் குணப்படுத்தும் விதம் கண்டறியப்படும். பழைய கல்வெட்டுகள், புதைந்து கிடக்கும் விக்ரஹங்கள் வெளிப்படும். வழக்கறிஞர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். இனி குரு, பன்னிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.

மேஷம்

ஆளும் குணமும், ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்து குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்துவந்ததுடன், எந்த வேலையையும் முழுமையாக செய்ய விடாமல் உங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்த குருபகவான், இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும்.

செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அவர்களால் புகழ், கவுரவம் கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கோலாகலமாகத் திருமணத்தை முடிப்பீர்கள். மகனின் கூடாப் பழக்கம் விலகும்.

எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். தாய்க்கிருந்த நோய் விலகும். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களுடன் இருந்துவந்த விரிசல்கள் விலகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும்.

குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதுமே சோகமாக இருக்கும் உங்கள் முகத்தில் அழகும் இளமையும் கூடும். கடனாக, கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாகத் தந்துமுடிப்பீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வரும். இதுநாள் வரை இழுபறியாக இருந்துவந்த வேலைகளெல்லாம் முடிவடையும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும்.

லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டு. பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். பங்குதாரரை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொண்டு இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். வேலைச்சுமையும் குறையும். சக ஊழியர்களுடனான பிரச்சினைகளும் கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன் வசதி, வாய்ப்புகளை அள்ளித் தரும்.

ரிஷபம்

எப்போதும் லட்சியத்தை நோக்கி பயணிப்பவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதிலும் ஒருவித தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியதுடன் ஆர்வமில்லாமலும் செய்தீர்கள். சின்னச் சின்ன வேலைகளைக் கூட போராடி முடித்தீர்கள். நாலாவிதத்திலும் யோசித்துக் குழம்பினீர்கள். உங்களை எதிலும் ஆர்வமில்லாமல் அலைக்கழித்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். கடந்த ஓராண்டு காலமாக இருந்த 3-ம் வீட்டை விட 4-ம் வீடு ஓரளவு நன்மையைத் தரும்.

இதுவரை இருந்துவந்த தடைகள், பணப்பற்றாக்குறை, தாழ்வு மனப்பான்மை எல்லாம் நீங்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் பூர்வீகத்தை விட்டு விலகி வேறு ஊருக்கு மாற வேண்டிய சூழல் உருவாகும். தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படும். கருத்து மோதல்களும் வரும். வாகனங்கள் அடிக்கடிப் பழுதாகும். விபத்துகளும் வந்து போகும். பல வருடங்கள் நெருங்கிப் பழகியவர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் மற்றும் உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம்.

ப்ளான் அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். முறையான பட்டா இல்லாத இடத்தை வாங்க வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூடப் போராடி முடிக்க வேண்டிவரும்.

தந்தையாரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துகொண்டேயிருக்கும். இடப்பெயர்ச்சி உண்டு. திருமணம், கிரகப் பிரவேசத்தைப் போராடி முடிக்க வேண்டிவரும். குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும்.

பிரபலங்கள் அறிமுகமாவார்கள். 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.

வியாபாரத்தில் பெரிய தொகை முதலீடு செய்ய வேண்டாம். ஸ்டேஷனரி, மருந்து வகைகளால் லாபம் வரும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாகவும், கூட்டுத்தொழில் தொடங்குவதற்கு முன்பாகவும் வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொண்டாலும், நேரடி உயரதிகாரி உங்களைப் பற்றிக் குறைகூறிக் கொண்டிருப்பார்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களால் சின்னச் சின்ன நெருக்கடிகள் வரும் அடிக்கடி இடமாற்றம் வரும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். இந்த குரு மாற்றம் அலைச்சலையும் பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் விடாமுயற்சியாலும் பிரபலங்களின் நட்பாலும் முன்னேற வைக்கும்.

மிதுனம்

மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக பணம், பதவி, செல்வாக்குடன் சமூகத்தில் அந்தஸ்தையும் கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார். குரு 3-ல் மறைவதால் உங்கள் முன்னேற்றம் தொடரும். குரு மறைவதால் பயணங்கள் அதிகரிக்கும்.

நியாயமான செலவுகளும் கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த வேண்டிவரும். வேலைச்சுமை கூடும். எதிலும் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும்.

திடீரென்று அறிமுகமாகுபவரையெல்லாம் வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரத்தையெல்லாம் சரிபார்த்துக்கொள்வது நல்லது. உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன், மனைவியிடையே சண்டை, சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் உயரும். 9-ம் வீட்டைப் பார்ப்பதால் கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். லாப வீடான 11-வது வீட்டைப் பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பங்குவர்த்தகத்தில் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பெரிய முதலீடுகள் வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல் வரும். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டிவரும்.

அண்டை மாநில வேலையாட்களைப் பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் தொடர் விடுப்பதாலும், புது அதிகாரியின் கெடுபிடியாலும் வேலைச்சுமை அதிகரிக்கும். சம்பள உயர்வு உண்டு. மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.

கடகம்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் நுழைந்து உங்களை நாலாவிதத்திலும் அலைக்கழித்த குருபகவான் 05.08.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்கிறார். ராசியை விட்டு குரு விலகுவதால் வாடி, வதங்கியிருந்த உங்கள் முகம் இனி மலரும். சாதாரண விஷயத்தில் கூட சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி தன்னிச்சையாக மிகப் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பல்வேறு காரணங்களால் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வேலை கிடைத்தும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இனி உங்கள் ரசனைக்கேற்ற வேலை அமையும். மகளுக்கு உறவினர்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் வலியவந்து பேசுவார்கள். தாழ்வுமனப்பான்மையும், தடைகளும் நீங்கும். எதிர்பார்த்த தொகை வரும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கோபம் குறையும். சாதுர்யமாகப் பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். குரு ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். தேமல், முடி உதிர்தல் நீங்கும்.

உங்களது எட்டாவது வீட்டை குரு பார்ப்பதால் விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதில் தடையிருக்காது. குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். எட்டாவது வீட்டை குரு பார்ப்பதால் விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதில் தடையிருக்காது. குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குரு பத்தாவது வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் அறிந்து அதற்கேற்ப தொழிலை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் சேருவார்கள். பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி உண்டு. தொல்லை கொடுத்த அதிகாரி மாறுவார். உங்களை மதிக்கும் புது அதிகாரி வந்தமைவார். பதவி உயர்வுக்காக தேர்வெழுதிக் காத்திருந்த வர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றிக் கிட்டும். பணியும் நிரந்தரமாகும். உத்யோகம் சம்பந்தமாக சிலர் அயல்நாடு சென்றுவருவீர்கள்.

சிம்மம்

எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து ஏமாறுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதைத் தொட்டாலும் நட்டத்தையும் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் அடுக்கடுக்காகத் தந்து உங்களை அலைக்கழித்தாரே குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்கிறார். கணவன், மனைவிக்குள் உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் சண்டை, சச்சரவு வர வாய்ப்பிருக்கிறது.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பதறினால் சிதறிவிடும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாப்பாட்டில் காரம், உப்பை குறைத்துக்கொள்ளுங்கள். நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி அன்றாடம் அவசியமாகிறது. மஞ்சள் காமாலை, காய்ச்சல், சளித் தொந்தரவு வரக்கூடும். முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. ஒற்றையாக இருந்து எவ்வளவுதான் போராடுவது என்று ஆதங்கப்படுவீர்கள்.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்துபோகும். ஏதோ ஒரு சக்தி உங்களை அழுத்துவதைப் போலவும், தடுப்பது போலவும் நினைப்பீர்கள். குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் கர்ப்பச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி புத்திரபாக்கியம் கிட்டும். மகனுக்கிருந்துவந்த கூடா நட்பு விலகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக முடியும். 9-ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பணப்பாற்றாக்குறை ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நஷ்டத்தை சரிக்கட்ட வேலையாட்களைக் குறைப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, துணி, வாகன வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களால் நிம்மதி குறையும். முன்பின் அனுபவமில்லாத தொழிலில் சிலரின் தவறான அறிவுரையால் முதலீடு செய்து நட்டப்பட வேண்டாம்.

உத்தியோகத்தில் சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள். சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மேலதிகாரிகள் உங்களை நம்பி சில கூடுதல் வேலைகளை ஒப்படைப்பார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும். ஆக மொத்தம் இந்த குருப்பெயர்ச்சி ஒருவிதப் படபடப்பையும் வேலைச்சுமையையும் தந்தாலும் கடந்தாண்டை விட வளர்ச்சியையும், செல்வாக்கையும் தரும்.

கன்னி

காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! கடந்த ஓராண்டு காலமாக குருபகவான் உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுடைய அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தினார். அதிகாரப் பதவியிலும் உங்களை அமர வைத்து அழகு பார்த்தார். எதிர்த்தவர்களையெல்லாம் அடக்கினார். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் முன்னேற்றம் தடைப்படாது.

ஆனால் அலைச்சல் இருக்கும். அத்துமீறிய செலவுகளால் அக்கம்பக்கம் கடன் வாங்க வேண்டிவரும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் அனைத்திலும் நீங்கள் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. கூடாப் பழக்கமுள்ள நண்பர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள்.

முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் ஆடம்பரமாகப் பேசுபவர்கள் யார், உண்மையான அன்புடன் பழகுபவர்கள் யார், உங்கள் மீது நிஜமான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டிவரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற மனநெருக்கடி இருக்கும். வாகனத்திற்கான உரிமம் மற்றும் காப்பீட்டைக் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள்.

சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாய்மாமன், அத்தை வழியில் இருந்துவந்த மனவருத்தங்கள் விலகும். காற்றோட்டம், வெளிச்சம் இல்லாத வீட்டிலிருந்து மாறி அமைதியான சூழல் உள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். 6-ம் வீட்டை குரு பார்ப்பதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். மூட்டுவலி, இடுப்பு வலி தீரும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. புது முதலீடுகள் பெரிய அளவில் செய்ய வேண்டாம். கமிஷன், வாகன உதிரிப்பாகங்கள், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். டிராவல்ஸ், மருந்து, உரம், கம்ப்யூட்டர் உதிரிப்பாகங்கள் மற்றும் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போங்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டு. சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில் அல்லது அயல்நாட்டில் வேலை அமையும். இந்த குரு மாற்றம் சுபச் செலவுகளையும், பயணங்களால் திருப்பங்களையும் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x