Published : 25 May 2017 09:43 AM
Last Updated : 25 May 2017 09:43 AM
காரேய் கருணை இராமாநுஜா என்பது ராமாநுஜரைப் போற்றும் துதிகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது. கார் என்றால் கருப்பு என்று பொருள். அது கருமேகத்தைக் குறிக்கிறது. மேகத்தின் நிறம் கருப்பு என்று பொதுவாகச் சொன்னாலும், சூல் கொண்டு நன்கு திரண்ட மேகம் மட்டுமே கருப்பு வண்ணத்தில் இருப்பது. அதுதான் மழையைப் பொழிகிறது. இத்தகைய மேகத்தில் மழை பொழியாமல் இருக்க முடியாது. அது எந்த இடத்தில் திரண்டு இருக்கிறதோ, அங்கு மழை பொழியும். இந்தப் பொழிவுக்கு இடம், காலம், பொருள், ஏவல் முதலிய காரணங்கள் கிடையாது.
எனினும் இந்த மழைப்பொழிவு நன்மையை மட்டுமே தரும் என்று கருத முடியாது. பெய்த இடத்திலேயே பெய்வது. சில இடங்களில் மழை பொழிவே இல்லாமல் போவது முதலான குறைகளும் உண்டு.
`காரேய் கருணை இராமாநுசா` என்றால் ` கார் ஏய்ந்த கருணை ராமாநுஜரே (மேகத்தை விஞ்சிய கருணை கொண்ட ராமாநுஜரே) என்று பொருள். `ராமாநுஜர், மேகத்தைப் போலவே பாகுபாடு இன்றி அனைவருக்கும் கருணை மழைப் பொழிபவர்; மேகத்தின் மழைப் பொழிவில் காணப்படும் குறைகள் இல்லாதவர்’ என்பது கருத்து என்ற புத்தகத் தலைப்பு விளக்கம் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சம்பிரதாயங்கள் ஏன்? ஆசாரியர், சிஷ்யன் – சில தகவல்கள், ஸ்ரீவைஷ்ணவம், ஸ்ரீராமாநுஜர் வாழ்க்கை, ராமாநுஜர் வாழ்க்கை – சில கேள்விகள், ராமாநுஜர் ஆற்றிய பணிகள், இந்தியா முழுவதும் பக்தி எழுச்சி, ஸ்ரீபாஷ்யம் எல்லோருக்குமான புத்தகம் அல்ல, ஆச்சார்யாளும் உடையவரும், நம்மவர் யார், அயலார் யார்? ஆகிய தலைப்புகளில் ராமானுஜரின் வாழ்க்கையும், அவரது தத்துவங்களும் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. ஸ்ரீவைணவத்திற்கு ஆச்சார்யன் அதி முக்கியம். அதிலும் ஸ்ரீராமானுஜர் ஆச்சார்யனாகவே அவதரித்தவர் என்று சொன்னால் ஆச்சரியமில்லை. ஸ்ரீராமானுஜரின் திக்விஜயப் பாதை படமாக விளக்கப்பட்டுள்ளது கூடுதல் தகவலை அளிக்கிறது.
நூல் பெயர்: காரேய் கருணை இராமாநுஜா!
ஆசிரியர்: வேதா T ஸ்ரீதரன்
விலை: ரூ.150
கிடைக்குமிடம்: வேத பிரகாசனம்
64, மதுரை சாமி மடம் தெரு,
(செம்பியம் தீயணைப்பு நிலையம் எதிரில்)
பெரம்பூர், சென்னை – 600 011.
தொலைபேசி: 99405 52516, 80152 52859, 72002 56789.
email:vedaprakaasanam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT