Published : 12 Nov 2015 11:52 AM
Last Updated : 12 Nov 2015 11:52 AM

ஆன்மிக ஞானிகள்: தமிழில் கந்த புராண கீர்த்தனை தந்த கவிகுஞ்சர பாரதி

கந்த புராண கீர்த்தனையை இயற்றி அதன் மூலம் கந்தனின் வரலாற்றைப் பாடலாகப் பதிவு செய்தவர் கவி குஞ்சர பாரதி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தனிச்சிறப்பு பெற்ற கவிஞர்.

சிவகங்கை சமஸ்தானத்தின் அதிபதியாக இருந்தவர் கெளரி வல்லபராஜன். இவர் தமிழின் மீது மிகுந்த பற்றும், இசை ஆர்வமும் கொண்டவர். தமது அரசவைக்கு வரும் புலவர்களையும், சங்கீத வித்வான்களையும் ஆதரிப்பதுடன், அவர்களின் புலமையைப் பாராட்டிப் பல பரிசுகளை வழங்கி கவுரவிக்கும் வழக்கமும் கொண்டவர்.

ஒருமுறை பெருங்கரை என்ற ஊரில் வாழ்ந்த கோடீஸ்வரன் என்னும் புலவர் இவரது அவைக்கு வந்தார். இப்புலவரின் கவிகளில் உள்ள பொருள் நயம், சொல் நயம், இனிய குரல்வளம், முகமலர்ச்சி, பக்திச் சுவை ஆகிய அனைத்தையும் கண்டு வியந்த அரசர், அவரது கவியாற்றலையும், இசைப் புலமையையும் பாராட்டி, அவருக்குக் கவி குஞ்சரம் என்னும் பட்டமளித்துப் பாராட்டினார்.

கந்தன் மேல் இசை நூல்

1810-ம் ஆண்டு பெருங்கரை என்ற ஊரில் பிறந்த கோடீஸ்வரனின் தந்தை சுப்பிரமணிய பாரதி, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும், இசை மற்றும் வேத சாஸ்திரங்களிலும் புலமை பெற்றிருந்தார். அவருக்குத் தமிழும், இசையும் பரம்பரைச் சொத்து. பாரதி என்பது குலப் பெயர். கவி குஞ்சர பாரதியின் புலமையைக் கேள்வியுற்ற ராமநாதபுரம் சமஸ்தான அரசர் முத்துராமலிங்க சேதுபதி, அவரைத் தன் அரசவை வித்வானாக நியமித்தார். இவரது சகோதரர் பொன்னுசாமி புலமை பெற்ற தமிழறிஞர்.

அக்காலத்தில் சீர்காழி அருணாச்சலக் கவிராயர் என்பவர் ராமாயணத்தைக் கீர்த்தனை வடிவில் இயற்றியுள்ளதைக் கேள்விப்பட்ட பொன்னுசாமி அதைப் போல ஒரு இசை நூலைக் கந்தன் மேல் இயற்ற ஆர்வம் கொண்டார். கவி குஞ்சர பாரதியின் புலமை, கவித்துவம், இசை ஞானம் ஆகியவற்றை உணர்ந்ததால் அவரிடமே அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம், இதனை இயற்ற அடித்தளமாக அமைந்தது. கந்தன் குறித்த அந்த இசை நூலுக்குக் கந்த புராணக் கீர்த்தனை என பெயரிடப்பட்டது. இதனை இயற்றி முடிக்க ஐந்து ஆண்டு காலம் ஆனதாம். இந்த இசைக்கோவை புத்தகமாக 1914-ம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x