Published : 25 Sep 2014 01:16 PM
Last Updated : 25 Sep 2014 01:16 PM

அலையும் மனதை ஒருநிலைப்படுத்த

தியானம் என்பது எளிமையாகத் தெரியும். காற்றில் ஆடாமல் நேராக உள்ள சுடர் போல் புறத்தொல்லைகளில்லாமல் மனதை ஒருநிலைப்படுத்துவதே தியானம்.எவர் ஒருவர் தியானத்தைச் சரியாகப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் சிறந்தவர்களாவார்கள்.தியானம் ஒரு வாழ்க்கை முறை. அது தவத்தின் படிக்கல்.

புத்தர் பல ஆண்டுகள் தியானம் செய்து ஞானம் பெற்று மக்களுக்கு நன்னெறி போதித்தார். ஒரு மதமே உருவாகியது. புத்தரின் உருவத்தைக்கூட நாம் தியான உருவமாக்கத் தவக் கோலத்தில்தான் காண்கிறோம்.

சிவபெருமானும் அனுமனும் தியான நிலையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் பரவசத்தை உண்டாக்குகின்றன. தேவர்களும் முனிவர்களும் அரசர்களும் தியானத்தால் பெற்ற பலன்கள் ஏராளம். சிவன் தன்னைத் தியானித்தவர்களுக்கு வேண்டும் வரங்களைக் கொடுத்துள்ளார். பைபிள் தியானத்தைப்பேசுகிறது.

முழுதுணர் ஞானம்

தியானத்தின் இலக்கணமாக, “ஏகாக்ர சிந்தா நிரோத” என்கிறார் சமணத்தின் தத்துவார்த்த சூத்திரம் தந்த உமா சுவாமி. அதாவது அலையும் மனதை ஒரு நிலைப்படுத்துதல் என்கிறார். சமணத்தின் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களும் தியானத்தை அடிப்படையாகக் கொண்டு தவத்தால் முழுதுணர் ஞானம் அடைந்து உலக உயிர்களுக்கு நல்வழி காட்டினர். அவர்களின் உருவங்கள் பாலப்பருவமாகவோ, இளமைப் பருவமாகவோ காட்டப்பட்டிராது. அவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ தியானத்தில் இருப்பது போல்தான் இருப்பர்.

தியானத்தின் நான்கு வகைகள்

ஆர்த்த தியானம் என்பது தியானத்தில் உள்ள பொழுது மனம் தூய்மையாக இல்லாமல் துயரமான எண்ணவோட்டத்தில் இருத்தலாகும். ரௌத்திர தியானம் என்பது தியான நேரத்தில் தீய எண்ணங்களாலும் கோபம், ஆசை, காமம் போன்றவைகளாலும் சிந்தனை நிரம்பி இருத்தலாகும்.

தர்ம தியானம் என்பது நல்லதியானமாகும். தியானத்தின்போது அருகன் அருளிய அறம், அகிம்சை, கொல்லாமை போன்ற அறநெறிகளையும்,தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நன்மைதரும் நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகியவற்றை மனதில் இருத்தியும் தியானம் செய்வதாகும்.

சுக்கில தியானம் என்பது தூயதியானம். இத்தியானத்தில் மிகத் தூய எண்ணத்துடன் மனது இருக்கும். ஆசைகளை அறவே அகற்றி, இன்ப துன்பங்களை எண்ணாது தியானித்தல் ஆகும்.கடினமான இத்தியானத்தைக் கைவரப் பெற்றவர்கள் எல்லா உலகங்களையும் உணரும் முழுதுணர் ஞானம் அதாவது கேவல ஞானம் பெறுவர்.

தியானத்தில் ஆர்த்த, ரௌத்திர எண்ணங்கள் இல்லாது, தரும சிந்தனையோடு மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய வேண்டும். அப்பொழுது சுவாசக்காற்றை சீராக உள்ளிழுத்தும், வெளியிட்டும் செய்தல் மிக அவசியம். அதனால் ஆழ்ந்த தியானம் அமையும்.

தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக அருங்கலச் செப்பு, “ஒருசிறை இல்லம் பிறவுழியானும் மருவுக சாமாயிகம்” என்கிறது. வீட்டின் தனி அறை, ஆற்றங்கரை, மலை, குகை, காடு, கோயில் போன்ற தனியிடங்களில் தியானம் செய்யலாம். எனவேதான் பல தீர்த்தங்கரர்களும் மாமுனிகளும் மலைகளின் மீது தியானித்து முக்தியடைந்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x