Last Updated : 16 May, 2015 01:25 PM

 

Published : 16 May 2015 01:25 PM
Last Updated : 16 May 2015 01:25 PM

வீட்டைக் காக்கும் காப்பீடு

சொந்த வீடு என்பது எல்லோருக்குமே வாழ்வில் ஒsரு பெருங்கனவு. அந்தக் கனவை அடைய ஒவ்வொருவரும் படும் கஷ்டங்கள் ஏராளம் ஏராளம். கடனை வாங்கி, வீட்டில் உள்ள நகைகளை விற்று, கையைக் கட்டி வாயைக் கட்டிதான் சொந்த வீடு என்ற கனவைப் பலரும் அடைகிறார்கள். அப்படிக் கஷ்டப்பட்டு அடையும் வீடு இடிந்தாலோ, தீப்பிடித்தாலோ அல்லது வேறு காரணங்களால் பிரச்சினைக்கு உள்ளானாலோ வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்வோம். இதைத் தவிர்க்க முடியாதா?

நிச்சயம் முடியும். வீட்டுக்குக் காப்பீடு எடுப்பதன் மூலம், வீட்டுக்கும் பாதுகாப்பு, நமக்கும் பாதுகாப்பு. காப்பீடு என்றவுடனே ஆயுள் காப்பீடு போலவா என்ற கேள்விகள் எழும். ஆயுள் காப்பீடு என்பது ஒரு மனிதரின் வாழ்நாளுக்கான காப்பீடு. ஆயுள் காப்பீடு எடுத்த ஒருவர், இடையில் இறந்தால், அவர் எடுத்த காப்பீட்டுத் தொகை மனைவிக்கும் வாரிசுகளுக்கும் கிடைக்கும். வீட்டுக்கான காப்பீடு என்பதும் இதேபோலத்தான்.

வீட்டுக்குப் பாதுகாப்பு

இன்று பெரும்பாலும் வங்கியில் கடன் வாங்கி தான் பலரும் வீடு கட்டுகிறார்கள் அல்லது வாங்குகிறார்கள். இப்படி வீடு வாங்கியவர்கள் மாதந்தோறும் வங்கிக்குத் தவணை (இ.எம்.ஐ.) செலுத்திக் கொண்டிருப்பார்கள். இந்தக் காலகட்டத்தில் வீடு வாங்கியவருக்கு அசம்பாவிதம் ஏதாவது ஏற்பட்டால் என்ன ஆகும்?

எஞ்சிய பணத்தை வழங்கும்படி மனைவியையும், வாரிசுகளையும் வங்கிகள் நெருக்கும். பணத்தைச் செலுத்த முடியவில்லை என்றால் வங்கிகள் வீட்டை ஜப்தி செய்துவிடும். அப்போது அவர்கள் நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை ஏற்படலாம் இல்லையா? இதைத் தவிர்க்க வீட்டுக்கும், வாங்கிய கடனுக்கும் காப்பீடு எடுத்துக்கொண்டால், அது நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும். எனவே வீட்டுக்கான காப்பீடு மிகவும் அவசியம்.

கடன் வாங்கியவருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டுப் பணம் கிடைக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், தீ விபத்து, தீவிரவாதத் தாக்குதல் போன்ற பிரச்சினைகளில் வீடு பாதிக்கப்பட்டாலும் மொத்தக் குடும்பமும் இடிந்து போய்விடும் அலல்வா? ஆனால், வீட்டுக்குக் காப்பீடு எடுத்திருந்தால், அந்தப் பிரச்சினையே இல்லை. இந்தப் பாதிப்புகளுக்கும் காப்பீட்டுப் பணம் கைகொடுக்கும்.

குறைவான பிரீமியம்

வீட்டுக்கான காப்பீடு என்றால் மிகவும் அதிகமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். உதராணமாக ஒருவர், சுமார் 20 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனாக வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோமே. அவர் 15 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துகிறார் என வைத்துக் கொண்டால், இந்தக் கடன் தொகைக்குக் காப்பீடு எடுத்தால் ஆண்டுக்குச் சுமார் 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்.

இதை மாதமாகவோ, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ, ஓராண்டுக்கு ஒரு முறையோ செலுத்த வசதி உள்ளது. ஒரே சயமத்தில் மொத்தமாகக் காப்பீடு எடுத்துக்கொள்ளவும் செய்யலாம். அப்படி மொத்தமாகக் காப்பீடு செலுத்தும்போது இடையில் பிரிமீயம் செலுத்தத் தேவையில்லை. ஒட்டுமொத்தமாக பிரீமியம் செலுத்தும்போது தள்ளுபடியும் கிடைக்கும். அது மட்டுமல்ல, சம்பளதாரர்கள் கட்டும் காப்பீடு பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

திரும்ப பெறும் வசதி

தொடர்ந்து வீட்டுக்கான காப்பீடு பிரீமியம் செலுத்தி வருகிறோம்; வீடு வாங்கியவருக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று வைத்துக் கொள்வோமே.. அப்படியானால், நாம் கட்டிய மொத்தப் பணமும் வீணாகிவிட்டதே என்றுதானே நினைப்பீர்கள். இதற்கும் இப்போது வீட்டுக்கான காப்பீடுகளில் தீர்வு காணப்பட்டிருக்கிறது.

காப்பீடு பணத்தைத் திரும்பப் பெறும் வசதி, காப்பீடு பணத்தைத் திரும்பப் பெற முடியாத வசதி என இரு பிரிவுகளில் இப்போது வீட்டுக்கான காப்பீடுகள் வழங்கப்படுகின்றன. காப்பீடு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியைத் தேர்வு செய்தால் போதும். வீட்டை வாங்கியவருக்கு அசம்பாவிதமும், வீட்டுக்குப் பாதிப்பும் ஏற்படவில்லையென்றால், காப்பீடு எடுத்த காலத்துக்குப் பிறகு கட்டிய பிரீமியத் தொகையைத் திரும்பப் பெற்றுவிடலாம். அதற்கு வட்டி, போனஸ் தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கின்றன.

கூடுதல் சுமை

இதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்த வசதியில் செலுத்தப்படும் பிரீமியம் தொகை கொஞ்சம் அதிகம். இதற்காக மாதந்தோறும் கணிசமான பணத்தை ஒதுக்க வேண்டியிருக்கும். அதிக வருவாய் ஈட்டுபவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. குறைந்த வருவாயில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு அதிகத் தொகை ஒதுக்குவது கூடுதல் சுமையாக இருக்கும். வீட்டுக்கும் கடனுக்கும் பாதுகாப்பு இருந்தால் மட்டும் போதும் என்று நினைப்பவர்களுக்கு இரண்டாவது வகைதான் நல்ல தேர்வாக இருக்கும்.

இப்போதெல்லாம் பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், கடன் கொடுக்கும்போது வீட்டுக்கும் கடனுக்கும் சேர்த்துக் காப்பீடு எடுத்துவிடுகிறார்கள். சில வங்கிகள், நிறுவனங்கள் அந்தத் தொகையைக் கடனோடு சேர்த்துவிடுவதும் உண்டு. இன்னும் சில வங்கிகள் அதற்கான பிரீமியத்தைத் தனியாக வசூலிக்கவும் செய்கின்றன. காப்பீடு எடுக்கும்போது அதைப் பற்றி ஒரு முறை தீர விசாரித்துக் கொள்ளுங்கள்.

எது எப்படி இருந்தாலும், வீட்டுக்கும், வாங்கிய கடனுக்கும் காப்பீடு மிகவும் அவசியம். அதை முறையாக எடுத்துக்கொண்டால் சொந்த வீட்டுக்குப் பங்கம் வந்தாலும் பயமில்லாமல் இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x