Last Updated : 30 Aug, 2014 10:00 AM

 

Published : 30 Aug 2014 10:00 AM
Last Updated : 30 Aug 2014 10:00 AM

வீட்டை அழகாக்கும் உலர் சுவர்கள்

லட்சக்கணக்கில் செலவு செய்து தனி வீடு கட்டும் பலருக்கும் வீட்டின் உட்புறங்களையும், அறைகளையும் அமைப்பதில் பெரும் குழப்பம் இருக்கும்.

பொறியாளரின் ஆலோசனைப்படி அறைகளை அமைத்தாலும், காலப்போக்கில் தமது விருப்பத்திற்கேற்ப அறைகளை மாற்றியமைக்க முடியுமா என்பதும் அதற்கு ஆகும் செலவும் விருப்பங்களைத் தள்ளிப் போட வைக்கும். இதை உறுதிப்படுத்திக் கட்டிடத்திற்கு நேர்த்தியான வடிவம் கொடுக்கிறது உலர் சுவர் தொழில்நுட்பம்.

ஒரு கட்டிடத்திற்கு முக்கியமான பில்லர், பீம், காங்கிரீட் மட்டும் எப்போதும் போல அமைத்தால் போதும். சுவர்களை, உலர் சுவர் தொழில் நுட்பம் மூலம் அமைக்கலாம். ஸ்டட் சேனல்கள் மூலம் பிரேம் அமைத்து, பைபர் சிமெண்ட் போர்டுகளை இரண்டு புறமும் பொருத்தி உலர் சுவர்கள் பொருத்தப்படுகின்றன.

வெளிநாடுகளில் இந்த முறை அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. ஆனால் நம் நாட்டில் பாதுகாப்பு கருதி வீட்டின் சுற்றுச்சுவர்களை மட்டும் பாரம்பரிய சுவர்போல செங்கல் மூலம் கட்டலாம். மற்றபடி வீட்டின் உள்புறம் அனைத்துமே உலர் சுவர்கள் அமைக்கலாம். குறிப்பிடும்படியாக பில்லர், பீம் இல்லாத இடத்திலும்கூட பாதுகாப்பான உறுதியான சுவர்களை எழுப்பலாம்.

கற்கள் மூலம் கட்டும் சுவருக்குப் பூச்சுடன் சேர்ந்து ஒரு அடி, அதாவது 11 அல்லது 12 அங்குல அகலம் தேவை. ஆனால் உலர் சுவர் முறையில் 3 முதல் 9 அங்குல அளவுகளுக்குள் நம் தேவைக்கேற்ப சுவர்களை அமைக்கலாம். தேவையான அகலத்தில், உயரத்தில், நீளத்தில் அதற்கேற்ப பிரேம் அமைத்து சுவர் அமைக்கலாம் என இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் உள் அலங்கார நிபுணர் ஜி.சந்திரசேகரன் கூறுகிறார்.

சுவரின் எடை குறைவு, தீத்தடுப்பு தன்மை கொண்டது, ஒலி வெளிபுகா தன்மை இவையனைத்தும் கூடுதல் பலன்கள். இருபுறமும் சிமெண்ட் போர்டுகள் வைக்கப்படுவதால் வெளிப்பார்வைக்கும் மிகத் துல்லியமாக இருக்கும்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, வெப்பமயமாதலைத் தடுக்கும் முறையாக உள்ளது. குளியலறைகளில் கூட உலர் சுவர் அமைத்து டைல்ஸ், மார்பிள்ஸ் பொருத்தலாம். உண்மையிலேயே ஒரு சுவர் கட்டினால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை விடக் கூடுதலான பலன் இதில் உண்டு. ஒரு இடத்தில் வைக்கப்பட்ட உலர்சுவர் தேவையில்லை என்றால் உடனே அதை அகற்றவும் முடியும்.

வெளிப்புற அழகுக்கு

இதுதவிர வெளிப்புறங்களில் கட்டிட அமைப்பை நீளமாக்குவது, அழகுபடுத்துவது உள்ளிட்ட பணிகளை இதில் செய்யலாம். எக்ஸ்டேர்னல் லேர்டிங் அப்ளிகேசன் எனும் முறை மூலம் கட்டிடத்தை வடிவமைப்பை மாற்றி அமைக்கலாம். இதில் தேவையான வண்ணங்களைப் பூசவும் முடியும்.

ஏ.சி.பி. அலுமினியம் தகடுகளை வெளிப்புறச் சுவர்களில் பொருத்தும் முறை அதிகமாக உள்ளது. ஆனால் எந்த வண்ணத்தில் அலுமினிய அட்டைகள் பொருத்தப்படுகிறதோ, அந்த வண்ணம் தான் கடைசி வரை இருக்கும். ஆனால் உலர்சுவரில் தேவையான வண்ணைத்தைக் கொண்டுவரலாம். மழை, வெயில் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாது. உலர் சுவர்களைப் பயன்படுத்துவதால் கட்டிடத்தின் மொத்த எடை குறையும்.

பூகம்பம் போன்ற பேரிடர்களால் ஏற்படும் பெரும் சேதத்தைக் குறைக்கலாம். அறைகளை மாற்றியமைத்துக்கொள்வதும் மிக எளிது.

இந்த முறை கட்டுமானத்திற்கு உழைப்புத் திறன், கால அளவு, கட்டுமானப் பொருட்களின் தேவை, ஆட்கள் என அனைத்துமே பாதியாகக் குறைவதால் தற்போது இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதே பைபர் சிமெண்ட் போர்டுகளை வாட்டர் ஜெட் கட்டிங் முறையில் கட்டிடத்தின் உள்புற மேல்கூரை மற்றும் வெளிப்புற அலங்காரத்திற்கும் பயன்படுத்தலாம். திரையரங்கு, வணிக வளாகம், மருத்துவமனைகளில் இப்போது வெளிப்புறச் சுவர்களே இந்த முறையில் அமைக்கப்படுகிறது. வீடுகளின் உட்புற வடிவமைப்பு இதில் முக்கியத்துவம் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x