Last Updated : 18 Feb, 2017 10:48 AM

 

Published : 18 Feb 2017 10:48 AM
Last Updated : 18 Feb 2017 10:48 AM

சொத்து அடமானக் கடன் குறைப்பா?

மண்ணில் போட்ட காசு எப்பவும் வீண் போகாது என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது உண்மைதான். அவசரத் தேவையாகப் பணம் தேவைப்படும்போது பலருக்கும் சொத்துகள் உதவியிருக்கின்றன. பலரும் சொத்தை விற்று தன் தேவையை நிறைவேற்றிக்கொள்வார்கள். இன்னும் பலர் சொத்தை அடமானம் வைத்து தன் தேவையை நிறைவேற்றிக்கொள்வார்கள். இதற்கு சொத்து அடமானக் கடன் உதவுகிறது. இப்படி அவசரத் தேவைக்கு உதவிய சொத்து அடமானக் கடன் தொகை வழங்குவதை பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் குறைத்து வருகின்றன. இதற்கு என்ன காரணம்?

அவசரமாகப் பணம் தேவை ஏற்படும்போது முதலில் நினைவுக்கு வருவது நகை மீதான கடன். ஓரளவுக்குத் தேவைக்கு இது உதவும். அதுவே பணத் தேவை கொஞ்சம் கூடுதலாக இருந்தால், சொத்து வைத்துள்ளவர்களுக்குச் சொத்து மீதான கடனே முதல் விருப்பத் தேர்வாக இருக்கும். சொத்தை அடமானமாக வைத்து வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவது எளிதான விஷயம். சொத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லையென்றால் கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்கள் உடனடியாக சொத்து அடமானக் கடனை வழங்கிவிடும். கடன் பெற்றவரால் கடனைத் திருப்பி திருப்பிச் செலுத்த முடியாமல் போனாலும் அவற்றுக்குக் கவலையில்லை. சொத்தை ஏலத்தில் விட்டு கடன் தொகையை எளிதாகத் திருப்பி எடுத்துக்கொள்ளும்.

வழக்கமாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சொத்தின் மதிப்பில் 40 முதல் 70 சதவீதம் வரை அடமானக் கடனாக வழங்க முன்வருவதுண்டு. அதுவும் சொத்து முக்கியமான இடத்தில் இருந்தாலோ, சொத்தின் மதிப்பு அதிகமாக இருந்தாலோ அதிகபட்ச அடமானக் கடனைப் பெறுவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது. கடந்த சில ஆண்டுகள் வரை பெரும்பாலும் சொத்து அடமானக் கடன் வழங்குவதும் அதிகமாகவே இருந்துவந்தன. ஆனால் 500 மற்றும் 1000 ரூபாய் பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு சொத்து அடமானக் கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே ரியல் எஸ்டேட் துறை கடந்த சில ஆண்டுகளாகவே தள்ளாடிக்கொண்டிருந்தது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளே விற்பனையாகாமல் மூடி வைக்கும் நிலையில் உள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை இன்னும் மந்த நிலைக்குச் சென்றுவிட்டது. இதன் காரணமாக வீடு, மனை விற்பனையும் சரிந்துவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் சொத்தின் மீதான விலை தானாகவே குறைய ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. சொத்து மதிப்பு குறையும் சூழல் உள்ளதால் சொத்தின் மீதான அடமானக் கடனும் குறையும் சூழல் உருவாகியுள்ளது.

முன்பு சொத்து அடமான க் கடன் மூலம் அதிகபட்சமாக 70 சதவீத தொகையைப் பெற முடிந்தது. சில இடங்களில் 80 சதவீதத் தொகைகூட வழங்கப்படுவதுண்டு. ஆனால், அண்மை காலமாக 40 முதல் 50 சதவீதம் வரையே அதிகபட்சமாக கடன் தொகையை வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையின் தற்போதைய சூழலில் ஏற்கெனவே வழங்கப்பட்ட அடமானமாகப் பெற்ற சொத்துகளை ஏலம் விட்டு விற்பனை செய்வதில் மந்தத்தன்மை நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வங்கிகள், நிதி நிறுவனங்களின் சார்பில் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் சொத்தை அடமானம் வைத்துக் கடன் அளிக்கவும் வங்கிகள் தயக்கம் காட்டவும் செய்கின்றன. அப்படியே கடன் அளித்தாலும் சொத்தின் மதிப்புக்கு மிகவும் குறைவாகவே அடமானக் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலைமை அடுத்த நிதியாண்டில் மாறும் என்றும் அப்போது வழக்கம் போல சொத்து அடமானக் கடன் கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக நிதி நிறுவனங்கள் கூறி வருகின்றன. எனவே சொத்து அடமானக் கடன் பெற நினைப்பவர்களுக்குத் தற்போதைய நிலை சாதகமாக இல்லை என்பதே உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x