Last Updated : 20 Sep, 2014 01:32 PM

 

Published : 20 Sep 2014 01:32 PM
Last Updated : 20 Sep 2014 01:32 PM

பத்தாண்டுகளில் நடந்த மாற்றம் என்ன?

ரியல் எஸ்டேட் சந்தை கடந்த 10 ஆண்டுகளில் பெரும் மாறுதல்களைக் கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2005-ம் ஆண்டு முதல் ரியல் எஸ்டேட் துறைக்குக் கிடைத்த அந்நிய நேரடி முதலீடு காரணமாகப் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உருவாயின.

அதற்கு முன்னர் பரவலாகக் காணப்பட்ட ஒரு சில மாடிகள் மட்டுமே கொண்ட கட்டிடங்கள் காணாமல் போய் எங்கு பார்த்தாலும் பல மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இந்தப் பத்தாண்டுகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளன என்று ரியல் எஸ்டேட் துறை தொடர்பான பிராபர்ட்டி கன்சல்டண்ட் சிபிஆர்இயின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2005-ல் அந்நிய நேரடி முதலீட்டு வாய்ப்பு ரியல் எஸ்டேட் துறைக்குக் கிடைத்த பின்னர், நிதிக்கான புதிய சாலைகள் திறந்துகொண்டன, முதலீட்டு வரவு பெருகியது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்திய விதிமுறைகள் காரணமாக 2004-ம் ஆண்டு வரை ரியல் எஸ்டேட் துறையில் நிதிக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்துவந்தது. ஆனால் 2005-ம் ஆண்டு வெளிநாட்டு நிதிகள் பெறும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னர் ரியல் எஸ்டேட் துறையின் நிதிவளம் பெருகத் தொடங்கியது. 2007-08 –ம் ஆண்டுகளில் அந்நிய முதலீடு பெருமளவில் இத்துறைக்குக் கிடைத்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில் சுமார் 14 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ரியல் எஸ்டேட் துறை பெற்றுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2005-ம் ஆண்டில் பொருளாதாரம், முதலீட்டு வாய்ப்புகளுக்கு தனது கதவைத் திறந்தது, இது பல துறைகளிலும் அடிப்படை மேம்பாடு காண்பதற்கு உதவியாக அமைந்தது, ஏனெனில் நுகர்வும் அதிகரித்தது, நிதி வரவும் பெருகியது என்கிறார் சிபிஆர்இயின் தெற்காசிய தலைவரும் மேலாண்மை இயக்குநருமான அன்சுமன் மகஸின்.

அந்நிய முதலீடு இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனது காலடியைப் பதித்ததால் இந்திய குடியிருப்புத் திட்டங்களின் முகமும் மாற்றமடைந்தது. அது வரை தனிவீடுகளும் ஒரு சில மாடிகளைக் கொண்ட வீடுகளுமே பிரதானமாக இருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மங்கியது.

இந்திய நகரங்களில் அநேக மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்கள் வீறு நடை போட ஆரம்பித்தன. இதற்குக் காரணம் வீட்டுத் தேவைகள் பெருமளவில் அதிகரித்ததுதான்.

வீட்டுத் தேவை அதிகரித்ததால் குறிப்பிட்ட ஒரு நிலத்தில் தனிவீடுகள், ஒரு சில மாடிகள் கொண்ட வீடுகள் கட்டுவதைவிடப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவது அவசியமானது. ஏனெனில் அந்தக் குறிப்பிட்ட நிலத்தில் அதிக வீடுகளை உருவாக்கும் வாய்ப்பை அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களே பூர்த்திசெய்தன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மதிப்பு மிக்க பெரும் நிறுவனங்களுக்கு அலுவலகக் கட்டிடங்கள் அதிகமாகத் தேவைப்பட்ட காரணத்தாலேயே இந்திய ரியல் எஸ்டேட் துறை முக்கிய அமைப்பானது என்றும், முக்கிய நகரங்களில் மட்டுமே வணிகம் கொழித்த நிலை மாறி, பெரு நகரங்களைச் சுற்றியுள்ள துணை நகரங்களிலும் வணிகம் கொழிக்கும் நிலை உருவானதற்கும் இதுவே சான்றாகியுள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2005-ல் மதிப்புமிக்க பெரு நிறுவனங்களில் அலுவலகங்கள் சுமார் 90 மில்லியன் சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்திருந்தன. ஆனால் இது 2014-ல் 400 மில்லியன் சதுர அடியாக அதிகரித்துள்ளது. இந்த அலுவலகக் கட்டிடங்களின் தோற்றமும், கட்டமைப்பும், பரவும் தன்மையும் தனியார் துறையாலும் அரசின் தலையீடுகளாலும் பெருமளவில் மாற்றம் அடைந்துள்ளன.

இந்தப் பத்தாண்டுகளில் வணிகத் தெருக்களின் காலம் மறைந்து ஷாப்பிங் மால்கள் பிரபலமடைந்துள்ளன என்றும் ரியல் எஸ்டேட் அமைப்பின் முன்னேற்றத்தில் தொழில்நுட்பமும் மின் வர்த்தகமும் கூட்டாக இணைந்துள்ளன என்றும் மகஸின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x