Last Updated : 19 Mar, 2016 11:13 AM

 

Published : 19 Mar 2016 11:13 AM
Last Updated : 19 Mar 2016 11:13 AM

சுவர் ஓவியம் 1 - தெய்வங்களை சுவீகரிக்கும் ‘மந்தனா’

வீட்டுச் சுவருக்கு வண்ணம் பூசும் கலாச்சாரம் பல்லாண்டுக் காலத்துக்கு முன்பிருந்தே இந்தியாவில் இருந்துவரும் ஒரு வழக்கமாகும். தங்கள் வீட்டை வெயில், மழை, காற்று போன்ற இயற்கையின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்காகவும், எறும்பு, கரையான் போன்ற சிறு பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காகவும் சுவர்களில் வண்ண பூசினார்கள்.

ஆனால் இப்போது உள்ளதுபோல பல வண்ணங்கள் அப்போது கிடையாதும். மேலும் காவி, வெள்ளை, மஞ்சள் ஆகியவற்றை மட்டும்தான் வீட்டுக்குப் பூச உகந்த நேரம் என்ற ஐதீகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.

இப்போது வீட்டுக்கு வண்ணம் பூச பெரும்பாலும் செயற்கையான வண்ணக் கலவையைத்தான் பயன்படுத்துகிறோம். அந்தக் காலத்தில் முழுவதும் இயற்கையான வண்ணங்களைத்தான் பயன்படுத்தினார்கள். வெறும் வண்ணங்களை மட்டும் பூசாமல் அதில் அழகான சித்திரங்களை, கோலங்களை அவர்கள் வரைந்தனர். அது அன்றைய காலப் பண்பாட்டை விளக்கும் தனிக் கலையாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் பரவலாக காவிப் பட்டை அடிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதாவது வீடு முழுவதுக்கும் வெள்ளை நிற வண்ணம் பூசி, அதன் ஓரங்களில் பட்டுப் புடவைகளுக்கு பார்டர் வருவதுபோல் காவி நிறப் பட்டையைப் பூசுவார்கள். இதுபோல் வண்ணம் பூசும் முறை இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது.

ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கேரளா போன்ற பல மாநிலங்களில் இந்தக் கலை தனித்துவத்துடன் இன்றும் இருக்கிறது. அப்படிப்பட்ட சுவர் வண்ணப் பூச்சு ஓவிய வகைகளில் ஒன்று மந்தனா.

மந்தனா சுவர் ஓவியக் கலை, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கிராமப் பகுதிகளில் இன்றும் வழக்கத்திலிருக்கும் கலையாகும். இந்தக் கலை வெறுமனே வீட்டுக்கு அழகு கூட்டும் கலையாக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. வழிபாட்டுச் சடங்காகவும் இருந்துவருகிறது. வீட்டுக்கு வரும் தெய்வங்களை வரவேற்கும் விதமாக வரையப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதாப்பூர் பகுதிகளில் பெரும்பாலும் இந்த வகைச் சுவர் ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்தக் கலை அந்தப் பகுதி பெண்களால் உருவாக்கி வளர்க்கப்பட்டு வருகிறது. வீட்டின் உள்ளே ஓவியங்கள் தீட்டும் வழக்கம் உள்ளது.

பிள்ளையார், மயில், நாய், பல விதமான தொழில் செய்யும் பெண்கள் என வண்ணமயமான அவர்களின் வாழ்க்கையை இந்தச் சுவர் ஓவியம் மூலம் பதிவுசெய்துள்ளார்கள். இந்த ஓவியங்கள் மூலம் அவர்களின் தொழில், வாழ்க்கை முறை குறித்த தகவல்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மாட்டுச் சாணம், அந்தப் பகுதியில் கிடைக்கும் ரதி என்னும் ஒருவகைக் களி மண், சுண்ணாம்புத் தூள் ஆகியவற்றைக் கொண்டு இந்த ஓவியங்களுக்கு வண்ணக் கலவை உருவாக்கப்படுகிறது. பருத்தி, முடிக் கற்றை போன்றவை எழுதுகோலாகப் பயன்படுகினன.

இந்த வகை மந்தனா வகை ஓவியம் சுவரில் மட்டும் அல்லாது தரைத் தளத்திலும் வரையப்படுகிறது. வட்ட வடிவக் கோலம்தான் இதன் ஆதார வடிவமாக இருந்தது. ஆனால் பின்னால் உருவங்களும் வரையப்பட்டன. மந்தனா பண்டிகைக் காலங்களிலும், குடும்ப விழா சமயங்களிலும் பெண்கள் உற்சாகத்துடன் கூடி வரைகிறார்கள். பெண்களின் பிரேத்யேகமான கலை என்பதால் அவர்களைப் போல் வீட்டுக்குச் சந்தோஷத்தையும் அழகையும் கொண்டுவந்துவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x