Last Updated : 15 Nov, 2014 12:07 PM

 

Published : 15 Nov 2014 12:07 PM
Last Updated : 15 Nov 2014 12:07 PM

எண்ணத்தைச் சொல்லும் வண்ணம்

சொல்லும்போதே மனசுக்குள் மழை பொழிய வைக்கும் சொல் வீடு, அதுவும் சொந்த வீடு. அதற்கு ஈடு இணையே இல்லை. வீடு கட்டுவது வெறும் கட்டிடம் எழுப்பும் செயல் அல்ல. வீடு என்பது அந்தஸ்தின், ரசனையின் வெளிப்பாடாக அமைய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் ஆசை. யாரும் கட்ட முடியாத வீட்டைத் தான் கட்ட வேண்டும் அதைச் சொல்லிப் பெருமைப்பட வேண்டும் என்னும் ஆர்வம் இல்லாதவர்களில்லை. எனவேதான் வீட்டின் நிமித்தம் பெரும் பிரயத்தனங்களை மனிதர்கள் மேற்கொள்கிறார்கள்.

வீட்டின் கட்டுமானம் தரமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பார்த்தவுடன் தெரிவது வீட்டுக் கட்டுமானத்தின் தரமல்ல. வீட்டு வண்ணத்தின் வசீகரமே. வீடு கட்டுவதைப் பொறுத்தவரை கட்டுமானத்தில் தொழில்நுட்பங்களே ஆளுமையைச் செலுத்தும் சூழலில் வர்ணத்தைத் தேர்ந்தெடுப்பதை நமது ரசனைத் தன்மையே முடிவுசெய்கிறது. ஆகவே வீட்டைக் கட்டுபவர்கள் அந்தப் பணியை ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்தாலும் தங்களுக்குத் திருப்தி தரும் வண்ணத்தில் வீட்டின் பூச்சு அமைய வேண்டும் என்பதில் கருத்தாய் இருப்பார்கள்.

பளிச்சிடும் வீடுகள்

இப்போதெல்லாம் பளிச்சென்ற வண்ணத்திலேயே பல வீடுகள் பளபளக்கின்றன. கூடுமானவரையில் வீட்டுக்குள் குளுமையை உணரச் செய்யும் வகையில் வீடுகளுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பளிச்சென்ற வண்ணங்களை வீட்டின் புறச்சுவர்களுக்குப் பூசும்போது வெயில், மழை போன்ற இயற்கையை அவை தாங்கி நிற்கும் என்பதால் அவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மிகவும் மென்மையான வண்ணத்தைப் பூசும்போது அது எளிதில் நிறமிழந்துவிடும் என்பதால் புறச்சுவர்களுக்கு மென்மையைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் புறச் சுவர்களுக்கு வண்ணம் பூசும்போது அந்த வண்ணத்தின் வெப்பத்தைக் கிரகித்து வெளியிடும் தன்மையைக் கருத்தில்கொண்டு புறச் சுவருக்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அடர்த்தியான நிறம் அதிகமான வெப்பத்தை உள்வாங்கிவைத்துக்கொள்ளும் என்னும் சூழலில் சிறிது மென்மையான வண்ணத்தைப் பூசலாம்.

வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை என வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் அந்தந்த அறைகளில் நாம் புழங்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வைக் கணக்கிலெடுத்துக்கொண்டு நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிறங்களின் சேதி

ஆரஞ்சு நிறம் என்பது நன்னம்பிக்கையை ஊட்டுவதாகவும் சமூகத் தொடர்புக்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. ஆரஞ்சு வண்ணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் துன்ப காலங்களில் தேவைப்படும் மன உறுதியைத் தரும் என்றும் சொல்கிறார்கள். எப்போதும் வீட்டில் அமைதி தவழ வேண்டும், அக்கம்பக்கத்தினருடன் உறவு மேம்பட வேண்டும் என்பதை விரும்புபவர்கள் இந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக் கலாம்.

மஞ்சள் நிறம் அறிவு நிரம்பிய மனத்தின் நிறமாகக் கொள்ளப்படுகிறது. இது நேர்மறையான எண்ணத்தையும், உற்சாகம் ததும்பும் மனநிலை யையும், புதிதுபுதிதான எண்ணங்களையும், வசீகரமான கற்பனைகளையும் உருவாக்கும் என்கிறது வண்ணம் தொடர்பான உளவியல். மஞ்சள் என்பது மங்கலகரமானது என்னும் நம்பிக்கையையும் இதனுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளலாம். அறிவும் மங்கலமும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் நிறைந்த சூழல் தேவைப்படுபவர்கள் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தி வீட்டுக்கு வண்ணமடிக்கலாம்.

பச்சை வண்ணத்தைப் பொறுத்தவரை, சமச்சீரான தன்மைக்கும் இணக்க மான சூழலுக்கும் உத்திரவாத மளிக்கிறது என்கிறார்கள். ஏதாவது ஒரு சிக்கலான தருணத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் இதயத்தின் வார்த்தைகளையும் மூளையின் சொற்களையும் நடுநிலையாக ஆராய இந்த நிறம் உதவும் என்று சொல்லப்படுகிறது. வளர்ச்சியைக் குறிக்கும் நிறமும் பச்சையே. அதே சமயத்தில் பச்சை வண்ணம் ஒருவிதமான பொஸஸிவ்வான எண்ணத்தையும் உருவாக்கி விடும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற மென்மையான எச்சரிக்கையும் தருகிறார்கள் வண்ணம் தொடர்பான கல்வி கற்றவர்கள்.

நீல நிறமோ நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. எந்த மோதலையும் உருவாக்காமல் அதனதன் கதியில் இயங்கச் செய்யும் வல்லமை கொண்டது நீல நிறம் என்கிறார்கள். நீல நிறம் நம்பத் தகுந்தது, பொறுப்புணர்வு அளிப்பது என்று சொல்கிறது நிறங்களுக்கான உளவியல். பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையான எண்ணத்தையும் உற்பத்தி செய்வதில் நீல நிறம் சிறப்பாகச் செயல்படுகிறது என்கிறார்கள். கடினமான காலங்களில் சரியான முடிவுகளை எடுக்க இந்த நிறம் உதவும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.

குளு குளு கூரை

கட்டிடத்தின் கூரையைப் பொறுத்தவரை வெள்ளை நிறத்தைப் பூசினால், கட்டிடத்தில் படரும் வெயிலால் உருவாகும் வெம்மையைப் பெருமளவு குறைக்க முடியும் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இதை ஆய்வு மூலம் நிரூபித்திருக்கவும் செய்கிறார்கள்.

ஆக, வீட்டுக்கான வண்ணப்பூச்சைத் தேர்ந்தெடுக்க வெறும் ரசனை மட்டும் போதாது. ஏனெனில் ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு பொருள் இருக்கிறது. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு உணர்வைத் தருவதாக உள்ளது. ஆகவே வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் வண்ணத்தில் நிபுணத்துவமும் ரசனையும் கொண்ட ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நலம். இல்லை எனில் நீங்கள் ஆசை ஆசையாய் வண்ணம் பூசிய வீட்டைப் பார்க்க வரும்

உங்கள் நண்பர் இதென்ன இப்படி ஒரு வண்ணத்தைப் பூசியிருக்கிறாய் என எளிதாக உங்கள் மூஞ்சியில் கரிபூச முயல்வார். அந்த வண்ணத்தின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற தெளிவு உங்களுக்கு இருந்தால், நண்பரின் வாயை அடைப்பது எளிதாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x