Published : 27 Mar 2015 02:16 PM
Last Updated : 27 Mar 2015 02:16 PM

புல்லட் பைக்கில் முதலுதவி

அது ஒரு புல்லட்தான். அதன் பின்பகுதியில் உள்ளூர் ஆம்புலன்ஸ் வண்டியின் தொடர்பு எண் எழுதப்பட்டுள்ளது. அதன் இன்னொரு புறத்தில் தீயணைப்பு நிலையத்தின் தொடர்பு எண் எழுதப்பட்டுள்ளது. வண்டியிலேயே தீயணைப்பானும் பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் முதலுதவிப் பெட்டி ஒன்றும் உள்ளது. வழியில் ஏதேனும் விபத்துக்களில் காயம்பட்டவர்கள் எதிர்ப்பட்டால் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு “பார்த்து ஓட்டுங்கண்ணே” என்று சொல்லிவிட்டு நகர்கிறார் புல்லட் பைக்கின் உரிமையாளர் சின்னதுரை.

நாகர்கோவில் நகருக்குள் வலம் வந்தவரை ஓரம் கட்டிப் பேசத் தொடங்கினோம். “அஞ்சு கிராமம் பக்கத்துல புதுக்கிராமம்தான் என்னோட ஊரு. நான் படிச்சது வெறும் நாலாம் கிளாஸ் தான். சின்ன வயசுல இருந்தே இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்ன்னு ஆசை அதிகம்.

படிப்பறிவு குறைவுன்னாலும் எல்லாருகிட்டயும் கேட்டு உள்ளூரில் ரேசன் கார்டு வாங்கி கொடுக்கிறது மாதிரி பணிகளை செய்வேன். இருந்தும் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு விழிப்புணர்வை கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணுனேன். அப்போ உதிச்சதுதான் இந்த யோசனை” என்கிறார்.

சின்னதுரை கட்டிடவேலை, எலக்ட்ரீஷியன், மெக்கானிக், டைல்ஸ் வேலை எனப் பல வேலைகள் செய்துவருகிறார். தன் புல்லட்டை 80,000 ரூபாய் கொடுத்து ஒருத்தரிடம் இருந்து விலைக்கு வாங்கினார். பின்னர் ஒரு லட்ச ரூபாய் செலவில் ஆல்ட்ரேஷன் செய்தார்.

“இப்போ இந்த பைக்கில் தீ அணைப்பான் கருவிகூட இருக்கு.என்னோட முதலுதவி பெட்டியில் குளுக்கோஸ், டிஞ்சர், பஞ்சு, கத்திரி, ரத்த காயத்திற்கான களிம்பு உள்ளிட்ட அனைத்தும் வைச்சுருக்கேன்.சாலையில் போகும் வழியில் விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்துட்டு இருக்கேன்.இதே மாதிரி கட்டிட வேலைக்கு செல்லும்போது சக தொழிலாளிகளுக்கு சிறு காயம் பட்டாலும் முதலுதவி பெட்டியில் இருந்து மருந்து எடுத்து கட்டிவிடுவேன்.” என்கிறார்.

அடுத்ததாகத் தன் புல்லட்டில் சோலாரும் பொருத்த உள்ளார். அது குறித்த தகவல்களைத் திரட்டத் தொடங்கியுள்ளார். “இன்று நாட்டில் சிறு குழந்தைகள் மீதான பாலியியல் தொல்லை, தாக்குதல் ஆகியவை அதிகரிச்சுட்டு இருக்கு.

அதனால் புல்லட்டில் குழந்தைகள் ஹெல்ப் லைன் தொடர்பு எண்ணையும் எழுதி போட ஸ்டிக்கருக்கு ஆர்டர் சொல்லிருக்கேன்.நான் பெருசா படிக்காவிட்டாலும் நாலு பேரு புல்லட்டை பார்த்து படிச்சுட்டு பாராட்டும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு”என்கிறார் சின்னதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x