Last Updated : 02 Oct, 2015 01:47 PM

 

Published : 02 Oct 2015 01:47 PM
Last Updated : 02 Oct 2015 01:47 PM

இளைஞர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்?

காந்திக்கும் இன்றைய அதிநவீன இளைஞர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர் பழைய காலத்து ஆள் அல்லவா! இயந்திரங்கள், கருவிகள் போன்றவற்றுக்கு எதிரானவர் அல்லவா! நமக்கு எப்படி ஒத்துவருவார்?

ஹார்லே டேவிட்சன் பைக்கில் நூறு கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமான வேகத்தில் ஈ.சி.ஆரில் போவதென்றால் சுகம்தானே. ஆனாலும், சற்று தூரத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையைக் கடந்தால் நாம் பிரேக்கைப் பிடித்து வேகத்தைக் குறைக்கத்தானே செய்வோம். வேகம் வேகம் என்று வேகத்தையே நமது இன்றைய வாழ்க்கையும் பைக்கும் பிரதானப்படுத்தினாலும் அடிப்படையாக நமக்குக் கருணையும் பரிவும் இருக்கிறதல்லவா? அந்தக் கருணைக்கும் பரிவுக்கும் நமது பைக்கின் பிரேக் உதவி செய்கிறதல்லவா? அந்த பிரேக்தான் காந்தி போன்றவர்கள்.

பிரேக் என்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல நமது உயிருக்கும் முக்கியம்.

இளைஞர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்?

ஆலன் குர்தி இறந்து கரையொதுங்கியதற்கும் இன்னொரு உலகம் அதிநவீனமாக ஆவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது. முன்னேறிய நாடுகள் தங்கள் முன்னேற்றத்துக்குப் பகடைக்காய்களாக ஏழை நாடுகளை உருட்டும் விளையாட்டொன்றின் பக்கவிளைவுகளில் ஒன்றுதான் ஆலன் குர்தி கரையொதுங்கியது. நமது வசதிக்காகவும் சொகுசுக்காகவும் அமேசான் காடுகள் ஒவ்வொரு நாளும் நியூயார்க் நகரம் அளவில் அழிக்கப்படுகின்றன. சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தும் கோகோ உற்பத்திக்காக ஆப்பிரிக்க மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்; சுரண்டப்படுகிறார்கள்.

காந்தியின் மேற்கோள் ஒன்று உலகப் புகழ் பெற்றது: ‘உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் தேவையைத்தான் இந்தப் பூமியால் பூர்த்திசெய்ய முடியுமே தவிர அனைத்து மனிதர்களின் பேராசையை அல்ல.’

நவீன கருவிகளையோ இயந்திரங்களையோ பயன்படுத்துவதற்கு எதிரானவர் இல்லை காந்தி. ஆனால், நவீனக் கருவிகளும் சாதனங்களும் கடுமையான உழைப்பிலிருந்து மனிதர்களை விடுவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர சொகுசுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார். ஏனெனில் நம்மை சொகுசாக வைத்திருக்க எத்தனை பேர் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை பேர் சுரங்கங்களில் செத்து மடிய வேண்டியிருக்கிறது. எத்தனை நாடுகள் பெட்ரோலுக்காக அமெரிக்காவால் போர்த் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைந்துபோயிருக்கின்றன என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நவீன கருவிகளையோ இயந்திரங்களையோ பயன்படுத்துவதற்கு எதிரானவர் இல்லை காந்தி. ஆனால், நவீனக் கருவிகளும் சாதனங்களும் கடுமையான உழைப்பிலிருந்து மனிதர்களை விடுவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர சொகுசுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார். ஏனெனில் நம்மை சொகுசாக வைத்திருக்க எத்தனை பேர் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை பேர் சுரங்கங்களில் செத்து மடிய வேண்டியிருக்கிறது. எத்தனை நாடுகள் பெட்ரோலுக்காக அமெரிக்காவால் போர்த் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைந்துபோயிருக்கின்றன என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த உலகின் போக்கை, வேகத்தைக் கட்டுப்படுத்த காந்தி பெரிதும் இளைஞர்களையே நம்பியிருந்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தில், இளைஞர்களிடம் கட்டுப்படுத்த முடியாத அளவில் சக்தி இருப்பதால் ஆயுதப் போராட்டம் அவர்களை எளிதில் ஈர்த்துவிடும் என்று தெரிந்தும் காந்தி அவர்களில் பெரும்பாலானவர்களை அகிம்சை வழியை நோக்கித் திருப்பினார். இளைஞர்களிடம் அவர் பொறுமையாகப் பேசியதுதான் அதற்குக் காரணம்.

காந்தியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகன் மன் நாராயண். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பிராமணர். லண்டனில் பொருளியலில் பட்டம் பெற்று, சொந்தத் தொழில் செய்ய வேண்டும், இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனவுகளுடன் இந்தியாவுக்கு வருகிறார். முதலில் காந்தியிடம் வந்து ஆசிபெற்றுக் கொஞ்ச காலம் அவருடன் இருக்கும் திட்டத்தில் வந்தார். காந்தி அவருக்கு ஆசிர்வாதம் செய்து தனது ஆசிரமத்தில் சேர்த்துக்கொண்டார். அந்த ஆசிரமத்தில் வந்துசேரும் யாருக்கும் முதலில் கொடுக்கப்படும் பணி என்ன தெரியுமா? கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது. மன் நாராயணன் தனது வீட்டில்கூட அதைச் செய்ததில்லை. ஏராளமான பணியாளர்கள் இருந்தார்கள் அதையெல்லாம் செய்வதற்கு. எனினும் காந்தி சொல்லிவிட்டாரே என்று அதைச் செய்ய ஆரம்பித்தார்.

ஒரு வாரம் செய்துவிட்டு காந்தியிடம் வந்தார். “பாபுஜி நீங்கள் சொன்னபடி ஒரு வார காலம் கழிப்பறைகளைச் சுத்தம் செய்துவிட்டேன். எனக்கு மற்ற முக்கியமான பணிகளை ஒதுக்குங்கள்” என்று கேட்டிருக்கிறார். காந்தி திரும்பவும் கழிப்பறைகளைச் சுத்தம்செய்யும் பணிக்கே அவரை அனுப்பினார். ஒரு மாதத்துக்குப் பிறகு மன் நாராயண் காந்தியிடம் வந்து “ பாபு நான் லண்டன் பொருளியல் கல்லூரியில் பட்டம் பெற்றவன், என்னால் மகத்தான விஷயங்களைச் சாதிக்க இயலும், எனது திறமையை இப்படிக் கழிவறை சுத்தப்படுத்துவதிலேயே விரயம் செய்வது ஏனோ?” என்று வாதிட்டார்.

அதற்கு காந்தியின் பதில் இது: “நீ வெளிநாட்டில் கற்றவன், பெரிய விஷயங்களை உன்னால் சாதிக்க முடியும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும், ஆனால் சிறிய விஷயங்களைச் செய்வதற்கு உண்டான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்பதை நான் இன்னும் அறியவில்லை. வறுமை ஒழிப்பு, வளர்ச்சி, கல்வி வழங்குதல் போன்ற பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என விரும்புவது புரிகிறது. ஆனால், மிகக் கீழான வேலைகளைச் செய்வதற்கான மனப்பக்குவம் இல்லாமல் போனால் உனது தாய்நாட்டைச் சூழ்ந்திருக்கும் உண்மையான பிரச்சினைகளை நீ உணரமால் போய்விடலாம். உண்மையில் ஏதேனும் மாற்றங்களை உண்டாக்க விரும்பினால் நீ உனது அகந்தையை விட வேண்டும், அப்போதுதான் முக்கியத்துவமற்ற கீழான பணிகளைச் செய்வதற்கு தேவையான பணிவை உணர்ந்துகொள்ள முடியும், அதை கவுரவத்துடனும் மரியாதையுடன் செய்யத் தொடங்கும்போது பெரிய காரியங்கள் எல்லாம் தானாக எளிதில் கைகூடும்.”

அந்த இளைஞரிடம் காந்தி எப்படிப் பேசிப் புரியவைத்தார் பாருங்கள். இன்று இளைஞர்களை எதற்கெடுத்தாலும் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களுடன் பொறுமையாகப் பேச யாருக்கும் நேரமில்லை. பொறுமையாகப் பேசிப் புரியவைத்தால் காந்தியின் வழிகாட்டுதலில் அந்தக் கால இளைஞர்கள் சாதித்ததுபோல் இன்றைய இளைஞர்களாலும் சாதிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x