Last Updated : 31 Oct, 2014 02:27 PM

 

Published : 31 Oct 2014 02:27 PM
Last Updated : 31 Oct 2014 02:27 PM

அதுல எம் பேரு இருக்கா?

ஊரே ஒரே பரபரப்பா இருந்துச்சு. எல்லாரும் பட்டியலப் பத்தியே பேசுனாங்க. வழக்கமாவே வெகுளி வெள்ளச்சாமிக்கு ஒண்ணும் புரியாது. இட்லிய வச்சு கம்யூனிசத்த விளக்கும் பட வசனம்கூட அவனுக்கு கம்யூனிசம்னா என்னன்னு புரியவைக்க முடியலன்னா பாத்துக்கோங்களேன். அவன் அவ்வளவு வெகுளி.

வெளுத்ததெல்லாம் விலை உயர்த்தப்பட்ட பால்னு நினைக்கிற ரகம். லாண்டரியில் உள்ள வெளுத்த உருப்படியக்கூட பால்னு நினைச்சிருக்கான். அப்டியாப்பட்ட ஆளுதான் அண்ணன் வெள்ள. அவனுக்கு இந்தக் கறுப்புப் பணம் கறுப்புப் பணம்னு சொல்றாங்களே, அது என்ன, அத ஏன் விக்ஸ் பேங்குல போட்டு வைக்கிறாங்கன்னு ஒரே ஆச்சரியம்.

அவனோட ஆத்ம நண்பனிடம் கேட்டு விளக்கம் பெறலாம்னு நினைத்து அவனைப் பார்க்கப் போனான். அந்த நண்பனால கறுப்புப் பணம் பத்தி ஒண்ணும் சொல்ல முடியல. ஆனா அத போட்டு வச்சிருக்கும் இடம் விக்ஸ் பேங்கு இல்ல சுவிஸ் பேங்குங்குற விஷயத்தை மட்டும் விவரமா சொன்னான். அப்படியான்னு கேட்ட வெள்ள சுவிஸ் பேங்குக்கே போய் விஷயத்தைத் தெரிஞ்சுக்கலாம்னு யோசிச்சான்.

ஆனா இதப் போய் யாருட்டயும் கேட்க வேண்டாம். நாமளே தேடிப் பாக்கலாம்னு முடிவு பண்ணினான். தெருத் தெருவா அலஞ்சான். அந்த ஊரில் எஸ்பிஐ இருந்துச்சு, எஸ் பேங்க் இருந்துச்சு, இன்னும் என்னவெல்லாமோ பேங்க் இருந்துச்சு. முழு ஊரையும் சுத்திப் பாத்துட்டான் சுவிஸ் பேங்க காணவே இல்ல. கறுப்புப் பணத்தைப் போல் பேங்கையும் பதுக்கிட்டாங்களோன்னு அவனுக்குப் பலத்த சந்தேகம் வந்துருச்சு.

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்கிற லெவலுக்குப் போயிட்டான். வெள்ளச்சாமி வெகுளியா இருந்தாலும் ஓவியம் வரையத் தெரிஞ்சவன். அதனால நெறங்களப் பத்தி அவனுக்கு நல்லாத் தெரியும். கறுப்புப் பணம்னு சொல்றாங்க அதனால அது கறுப்பாத்தான் இருக்குங்கிறதுல அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் அது ஏன் கறுப்பா இருக்குதுங்கிறத தெரிஞ்சுக்க ஆசைப்பட்டான்.

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரத்தைப் போய் பார்த்தான். அவர் ஓர் எழுத்தாளர். உட்கார்ந்த இடத்துல இருந்தே உலக விஷயங்களை எல்லாம் பின்னிப் பெடலெடுக்குற ஆளு. அவரிடம் போய் வெள்ள நின்னான். டெய்லி ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவிக்கும் அந்த எழுத்தாளரிடம் வெள்ள கேட்ட கேள்விகளால பாவம் வெலவெலத்துப் போயிட்டார்.

புராணங்களை எல்லாம் கரைத்துக் குடித்திருந்த அந்த எழுத்தாளருக்குத் திருவிளையாடலில் சிவனே வந்து கொசுக்கடி தாங்காம ஒரு பாட்ட எடுத்து விட்ட மாதிரி, வெள்ள கடவுளோட அவதாரமோன்னு சந்தேகம் வந்துருச்சு. அவன அன்பா உபசரிச்சு, சாப்பாடு போட்டு, அனுப்பிவச்சுட்டாரு. நேரில் கண்ட இறைவன்ங்கிற பேரில் ஒரு கட்டுரை எழுதி அதை இணையத்துல போட்டாரு. போட்ட மாத்திரத்தில அத வாசகர்கள் வரிஞ்சு கட்டிட்டுப் படிச்சாங்க. லட்சக்கணக்கான ஷேர். சரி அதவிடுங்க வெள்ள விஷயத்துக்கு வருவோம்.

வழியில் வெள்ள ஒரு பத்திரிகைக்காரரைப் பார்த்தான். அவருக்குக் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சி அவர்ட்ட விவரம் கேட்டான் வெள்ள. அது ஒண்ணுமில்ல வெள்ள, பணக்காரங்க பணத்தை மத்தவங்க கண்ணுல படாம பாதுகாக்கிறதுக்காக மண்ணத் தோண்டி புதைச்சு வச்சிருவாங்க. அப்போது தூசு துப்பட்டன்னு அதுல துரு ஏறிரும்.

அதனால அது கறுப்பா மாறியிரும்னு தனக்குத் தெரிந்த விஞ்ஞான அறிவை வைத்துச் சொன்னாரு. வெள்ளைக்கு ஓரளவு புரிஞ்ச மாதிரி இருந்துச்சு. தனக்கு இது தோணாமப் போச்சேன்னு அவனுக்கு ரொம்ப வெட்கமாப் போச்சு. இவ்வளவு அறிவு இருப்பதால்தான் பத்திரிகையில் வேலை பார்க்க முடியுதுபோல் என நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

கறுப்புப் பணம் பத்தி தெரிஞ்ச வெள்ள மறு நாள் பேப்பர் வாங்க அதிகாலையிலேயே பேப்பர் கடையில போய் நின்னான். பேப்பர வாங்கி பிரிச்சுப் பார்த்த வெள்ளைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுப்போச்சு. அவன் பேரில் விக்ஸ் பேங்குல அதான் சுவிஸ் பேங்குல ரூ.50,000 கோடி இருந்துச்சுன்னு அதுல போட்டிருந்தாங்க. தான் ஒருவேளை சாப்பாடு இல்லாம ஒரு ரூபாய் இட்லி சாப்பிட்டு வாழுறோம், நம்ம பேருல ரூ.50,000 கோடியான்னு அதிர்ச்சியில அவன் மயக்கம்போட்டு விழுந்துட்டான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x