Published : 07 Aug 2015 02:47 PM
Last Updated : 07 Aug 2015 02:47 PM

ஐ.டி. உலகம் 9: சட்டத்துக்குள் வராத ஐ.டி. நிறுவனங்கள்?

சம்பள உயர்வில் பாரபட்சம், திடீர் பணி நீக்கம், பணியிடத்தில் பாலியல் தொல்லை என ஏராளமான பிரச்சினைகளை ஐ.டி. தொழிலாளர்களும் சந்திக்கிறார்கள். ‘தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பொருந்தும் சட்டம் இவர்களுக்குப் பொருந்துமா இல்லையா!’ என்ற குழப்பம் நீடிப்பதால் ஐ.டி. நிறுவனங்களில் சங்கம் அமைக்கும் உரிமை பல விதங்களில் மறுக்கப்படுகிறது.

தொழில் தகராறு சட்டம் 1947

தொழிற்சாலைகளில் பணிபுரிவோரில், மேற்பார்வையிடுவோர் தவிர ஏனையோரும் தொழில் தகராறுகள் சட்டம் 1947-ன் கீழ் வருவார்கள்.

சட்டத்துக்கு உட்பட்டு ஒரு நிறுவனம், தனக்கான விதிகளை வகுக்க வேண்டும் - எத்தனை மணிக்கு அலுவலகம் தொடங்கும், ஆடைக் கட்டுப்பாடு, விதிகளை மீறினால் என்ன தண்டனை என்பது உள்ளிட்டவற்றை முடிவு செய்து, அவற்றுக்குத் தொழிலாளர் நலத் துறையில் ஒப்புதல் பெற்று நிலை ஆணையை (Standing Order) நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் வருபவர்கள் ‘தொழிலாளர்கள்’ (workman) என்று கூறப்படுவார்கள். ஆனால் இந்தச் சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்று ஐ.டி. நிறுவனங்கள் கூறிவருகின்றன.

சமீபத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ‘ஐ.டி. நிறுவனங்கள் தொழில் தகராறு சட்டத்துக்குக் கீழ் வருமா, இல்லையா என்று அரசு முடிவு செய்ய வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் கூறியது. “300-க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் நிறுவனம் அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் ஐ.டி. நிறுவனங்கள் அந்த விதியைப் பின்பற்றுவதே இல்லை” என்கிறார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்பாளர் கற்பக விநாயகம்.

சமீபத்தில் நடந்த வழக்குகளில் ஐ.டி. நிறுவனங்கள் தங்களுக்குத் தொழில் தகராறு சட்டம் பொருந்தாது என்றும் கடைகள், நிறுவனங்கள் சட்டம் (shops and establishments act) தான் பொருந்தும் என்றும் கூறியுள்ளன என்பதைக் குறிப்பிடுகிறார் அவர். ஆனால், 2005-ம் ஆண்டு ஆந்திர அரசுக்கும் ஒரு ஐ.டி. நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம், கடைகள், நிறுவனங்கள் என்ற சட்டத்தின் கீழ் ஐ.டி. நிறுவனங்கள் வராது என்றும் ஐ.டி. நிறுவனங்களில் உள்ளே வரும் பொருள் சரக்காக மாற்றி தான் வெளியே அனுப்பப்படுவதால் மனித உழைப்பு செலுத்தப்படுகிறது என்றும் கூறியிருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். எனவே தமிழக அரசு ஐ.டி. நிறுவனங்கள் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் வரும் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரும் அவர், சென்னையைச் சுற்றியுள்ள 125 ஐ.டி. நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் மட்டுமே நிலை ஆணை பெற்றுள்ளதாகத் தொழிலாளர் துறை தெரிவிக்கிறது என்றும் கூறுகிறார்.

சட்டத் தீர்வுகள் என்னென்ன?

ஐ.டி. ஊழியர்கள் அதிக அளவில் நீதிமன்றங்களை நாடி வருவதில்லை என்று சொல்லும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ, இதுவரை ஐ.டி. ஊழியர்கள் வழக்கில் முன்னுதாரணமான வழக்கு என்று எதுவும் இல்லை என்கிறார். ஐ.டி. நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் இல்லாதது இதற்கு ஒரு காரணமாகும் என்றும் தொழிற்சங்க சட்டப்படி ஏழு நபர்கள் சேர்ந்து ஒரு தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கலாம், யாராலும் இதைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

தொழில் தகராறு சட்டம் பொருந்தும் என்று கூறப்படாதது போல், பொருந்தாது என்றும் அறிவிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இளங்கோ, எனவே சட்ட உதவியை நாட விரும்பும் ஐ.டி. ஊழியர்கள் தொழில் தகராறு சட்டம், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்பதை உணர்த்துகிறார். சிவில் வழக்காகப் பதிவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அவர், பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க சட்டப்படி நிறுவனத்துக்குள்ளேயே குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x