Last Updated : 31 Aug, 2016 09:57 AM

 

Published : 31 Aug 2016 09:57 AM
Last Updated : 31 Aug 2016 09:57 AM

வண்ணக் கதைக் களஞ்சியம்: ஜாலியா வாசிக்கலாம்

“என்ன புத்தகப்புழு ரொம்ப நாளா உன்னை ஆளையே காணோமே, இப்போ திடீர்னு ஆஜர் ஆகியிருக்க!”, ஆச்சரியத்துடன் கேட்டாள் நேயா.

“ஆமா நேயா, லீவுல ரெண்டு மாசம் நான் வாசிச்ச புத்தகங்களைப் பத்தி உன்கிட்ட சொன்னேன். நீயும் ரொம்ப ஆர்வமா அதையெல்லாம் வாங்கி வாசிச்ச. அப்புறம் பள்ளிக்கூடம் தொறந்துட்டாங்களா, நானும் என்னோட பள்ளிக்கூடத்துக்குப் போகணுமில்லையா. அதுக்கப்புறம் போன மாசம் முழுக்க ஒலிம்பிக் விளையாட்ட பார்த்து ரசிச்சுக்கிட்டு இருந்தேனா, புதுசா எந்தப் புத்தகத்தையும் வாசிக்கல. இதோ ஒலிம்பிக் முடிஞ்சிடுச்சு. புத்தகத்தைக் கையில எடுத்துட்டேன்.”

“பாடப் புத்தகமா? கதைப் புத்தகமா?”

“ரெண்டுமேதான். ரெண்டுமே ஒன்னா வந்தா எப்படியிருக்கும்?”

“நிச்சயமா நல்லா இருக்கும். ஆனா, அப்படி எதுவும் தமிழ்ல வந்திருக்கா என்ன?”

“வந்திருக்கே. இப்ப புதுசா ரெண்டு புத்தகங்களைக் குழந்தை எழுத்தாளர் யூமா வாசுகி தொகுத்திருக்கார். முதலாவது ‘உயிர்களிடத்து அன்பு வேணும்', ‘இரண்டாவது கண்ணாடி'. ரெண்டு புத்தகத்துலயும் சேர்த்து 25 குட்டிக் கதைகள். அந்தக் கதைகளைக் குழந்தைகளே வாசிச்சுப் புரிஞ்சுக்க வசதியா ஓவியர் சொக்கலிங்கத்தோட வண்ண ஓவியங்களை வரைஞ்சிருக்காரு. ஒரு பக்கத்துல பாதி ஓவியம், பாதி கதை. ஓவியமே கதையோட்டத்தைக் காட்சிகளா நம்மகிட்ட சொல்லிடுது.”

“நீ சொல்றதைப் பார்த்தா இந்த முழு வண்ணப் புத்தகம் எனக்குப் பிடிக்கும்னு தோணுது”

“நிச்சயமா. பொதுவா குழந்தைகளுக்குச் சொல்லப்படுற கதைகள்ல அறிவுரைகள் நிரம்பியிருக்கும். ஒழுக்கம், நன்னெறிங்ற பேர்ல இப்படிச் செய், அதைச் செய்யாதேன்னு நிறைய கட்டுப்பாடு களைச் சின்ன வயசிலேயே வலியுறுத்துற கதைகளா இருக்கும்.

ஆனா, இந்தக் கதைகள் அப்படியில்ல. எளிமையான வாழ்க்கை உண்மைகள், அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் விஷயங்கள், எல்லா விஷயத்திலும் பொதிந்து கிடக்கும் ஆக்கப்பூர்வமான அம்சங்களைப் பார்க்க வழிகாட்டும் வகையில் கதைகளை ரொம்ப கவனமாத் தேர்ந்தெடுத்திருக்கார் எழுத்தாளர் யூமா. பல கதைகள் நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டதா இருந்தாலும், சொல்லப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும், கதைகள் நமக்குச் சொல்லும் உண்மைகளும் ரொம்ப எளிமையா குழந்தைகள் வாசிக்கக்கூடிய அளவிலும், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் அமைஞ்சிருக்கு.

பகிர்ந்துகொள்ளும் உணர்வு, நட்பில் மோதலும் சேர்தலும், சுயநலமின்மை, காலம் அறிந்து செயல்படுவது, பொதுநலனுக்கான சமயோசித அறிவு, ஒன்றுபட்டு வாழ்தல், உழைப்பின் அவசியம், தவறைத் தட்டிக் கேட்கும் துணிச்சல், அகங்காரம் துறத்தல், சுயமுயற்சி என நிறைய விஷயங்களை இந்தக் கதைகள் சொல்கின்றன.”

“ஏதாவது ஒரு கதைய எனக்குச் சொல்லுறியா புழு?”

“கதையெல்லாம் நீயே வாசிச்சுத் தெரிஞ்சுக்கோ. அதேநேரம், திருடனை மாற்றிய புத்தர், அன்னை தெரசாவின் கருணை உணர்வு போன்ற பிரபலங்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும், ஓ. ஹென்றியின் 'கடைசி இலை' போன்ற பிரபலமான கதைகளும் இந்தத் தொகுப்புகள்ல இருக்கு”.

“ஓ, அப்படியா! நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்”

“சில இடங்கள்ல பாலிலிருந்து வெண்ணெய் வருவது, உயிரினங்களின் இயல்புக்கு மாறான குணங்கள் விவரிக்கப்படுவது போன்ற சின்னச் சின்ன பிரச்சினைகளும் இருக்கு. அதைத் தவிர்த்திருக்கலாம்.”

“பொதுவா நீதிக் கதைகளைப் படிக்கிறது சலிப்பா இருக்கும். ஆனா, நீ சொல்ற புத்தகம் நிச்சயமா அப்படியிருக்காதுன்னு தோணுது”

“நம் எல்லோருக்குமே கதைகள கேட்கப் பிடிக்கும். அதிலும் உன்னைப் போன்ற குழந்தைகளுக்கு, கதைகள்தான் உலகமே. அந்த வகையில் இந்தக் கதைகளைச் சுவாரசியமான பாடப்புத்தகமாக வெளியிட்டிருக்கு திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி. இப்புத்தகங்களை நூலாக்கியது பாரதி புத்தகாலயம்.”

“சரி, சீக்கிரமா வாங்கி வாசிக்கிறேன்” என்று சொல்லி நேயா விடைபெற்றாள்.

உயிர்களிடத்து அன்பு வேணும் / கண்ணாடி, இரண்டு புத்தகங்கள், தொகுப்பு: யூமா. வாசுகி,

வெளியீடு: எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம்,

விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.

தொலைபேசி: 044-2433 2424

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x