Published : 28 Jan 2015 04:35 PM
Last Updated : 28 Jan 2015 04:35 PM

தீயில் வெடிக்காத புதுமைப் பலூன்!

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போகும்போது முதலில் தங்கள் மேல் நீரை அடித்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? இதற்கான காரணம் என்ன? வாங்க, ஒரு எளிய சோதனை செய்து காரணத்தைத் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பெரிய பலூன்கள், தண்ணீர்.

சோதனை:

1. ஒரு பலூனைப் பெரிதாக ஊதி அதை முடிச்சுப் போட்டு கட்டுங்கள். இப்போது காற்று ஊதப்பட்ட பலூன் தயார்.

2. மற்றொரு பலூனின் வாயை ஒரு குழாயில் மாட்டுங்கள். குழாயைத் திறந்து பலூனில் தண்ணீரை நிரப்பி முடிச்சுப் போட்டு கட்டுங்கள். இப்போது தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன் தயார்.

3. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி மேஜை மீது வையுங்கள். மெழுகுவர்த்தியின் ஒரு அடிக்கு மேலே இருந்து காற்று ஊதப்பட்ட பலூனைச் சுடரின் அருகே கொண்டு வாருங்கள். சுடரின் அருகே பலூன் வந்ததும் ‘டமால்’ என்ற வெடித்து சிதறும். அப்போது மெழுகுவர்த்தி அனைவதையும் நீங்கள் பார்க்கலாம்.

4. மீண்டும் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொள்ளுங்கள். இப்போது தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனை மேலிருந்து சுடருக்கு அருகில் கொண்டு வாருங்கள். அருகே வரும்போது பலூன் வெடித்து தண்ணீர் மேஜை மீது கொட்டும் என்று எதிர் பார்ப்பீர்கள். ஆனால், பலூன் வெடிக்காது; தண்ணீரும் கொட்டாது. பலூன் அடிப்பாகத்தில் கரி படிந்திருப்பதைப் பார்க்கலாம்.

நடப்பது என்ன?

காற்றுள்ள பலூன் வெடித்ததற்குக் காரணம் என்ன? பலூனை மெழுகுவர்த்தி சுடருக்கு அருகே கொண்டு வரும்போது, சுடரின் வெப்பம் பலூனை உருகச் செய்கிறது. அதன் காரணமாகவும் பலூனுக்குள் இருக்கும் காற்றழுத்தத்தின் காரணமாகவும் பலூன் வெடிக்கிறது. வெடிக்கும்போது பலூனுக்குள் இருந்த காற்று வேகமாக வெளியேறுவதால் மெழுகுவர்த்தி அணைந்துவிடுகிறது.

தண்ணீர் உள்ள பலூனைச் சூடுபடுத்தும்போது ஏன் வெடிக்கவில்லை தெரியுமா? தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனைச் சூடுபடுத்தும்போது பலூனுக்குக் கொடுக்கப்படும் வெப்பத்தைப் பலூனுக்குள்ளே இருக்கும் தண்ணீர் உள்வாங்கிக் கொள்கிறது. இதனால், பலூனுக்குள் வெப்பம் செல்லாமல் அது இளகி வெடிப்பது தடுக்கப்படுகிறது.

குளிர்ந்த நீர் மென்மேலும் வெப்பத்தை ஏற்றுக் கொள்வதால் பலூன் வெடிப்பதும் இல்லை; நீரும் சிதறுவதில்லை. மெழுகுவர்த்தி சுடரிலிருந்து வரும் கார்பன் துகள்கள் பலூனில் படிந்துவிடுகிறது. அதனால் அடிப்பாகம் கரி பிடிக்கிறது.

பயன்பாடு

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்போது தங்கள் மீது நீரை அடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் உடம்பின் மீது உள்ள நீர்ப்படலம் வெப்பத்தை உள்வாங்கி கொள்வதால் வெப்பம் அவர்கள் உடலைத் தாக்காது. அதுதான் காரணம். இதேபோல தீச்சட்டி ஏந்துவோர் தங்கள் மீது நீரை ஏன் ஊற்றிக் கொள்கிறார்கள் என்பதற்குக் காரணம் சொல்ல வேண்டுமா என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x