Last Updated : 26 Oct, 2016 11:47 AM

 

Published : 26 Oct 2016 11:47 AM
Last Updated : 26 Oct 2016 11:47 AM

தினுசு தினுசா விளையாட்டு: கோ கோ குச்சிக்கோ!

விளையாடும்போது நேரம் போவதே தெரியாது. அப்புறம், நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவது மனதுக்குப் பிடித்த சந்தோசமான விஷயம். விளையாட்டில் இதுமட்டுமல்ல, இன்னும் சொல்லப்படாத பல நன்மைகள் உண்டு. பலரோடு ஒரு குழுவாகச் சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பை விளையாட்டு கொடுக்கிறது. விளையாடும்போது நமது கவனம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக, நமது உடல் ஆரோக்கியமாக இருக்க விளையாட வேண்டியது மிகவும் அவசியம்.

விளையாட்டைப் பற்றிய புராணம் போதும். நேரடியாக விளையாட்டுக்குப் போகலாமா? இந்த வாரம் விளையாடப் போகும் விளையாட்டு, ‘கோ கோ குச்சிக்கோ!’. இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது?

# இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம்.

# முதலில் இந்த விளையாட்டின் முதல் போட்டியாளரைத் தேர்வு செய்ய வேண்டும். முன்பே நாம் பார்த்த மாதிரி ‘சாட் பூ திரி..!’ அல்லது ‘உத்தி பிரித்தல்’ மூலமாக அவரைத் தேர்வு செய்யலாம்.

# இந்த விளையாட்டில் பங்கேற்கும் அனைவரின் கைகளிலும் மூன்று அல்லது நான்கடி நீளக் குச்சி (மரத்தாலான கோல்) இருக்க வேண்டும்.

எப்படி விளையாடுவது?

# முதல் போட்டியாளர் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு நிற்க வேண்டும்.

# அவரின் இரண்டு கை விரல்களுக்கும் இடையில் அந்த நீளமான குச்சியை வைக்க வேண்டும்.

# போட்டியில் பங்கேற்கும் மற்றவர்கள் அனைவரும், அவருக்குப் பின்புறத்தில் கையில் குச்சியோடு தயாராக நிற்க வேண்டும்.

# யாராவது ஒருவர் தன் கையிலுள்ள குச்சியால், முதல் போட்டியாளரின் கையிலுள்ள குச்சியை வேகமாகத் தட்டிவிட வேண்டும்.

# பின்னால் நிற்கும் போட்டியாளர்கள் தங்கள் கையிலுள்ள குச்சியால், அந்தக் குச்சியைத் தூரமாகத் தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும்.

# இப்போது முதல் போட்டியாளர் வேகமாக ஓடிவந்து தொடுவதற்குள், தன் கையிலுள்ள குச்சியின் நுனியை ஏதாவது ஒரு சிறு கல்லின் மீது வைக்க வேண்டும்.

# குச்சியின் நுனி கல்லின் மீது இல்லாத வேளையில், முதல் போட்டியாளர் தொட்டு விட்டால் அவர் ‘அவுட்.’ அதற்கு மேல் அவர் அந்த விளையாட்டில் தொடர முடியாது.

# முதல் போட்டியாளரின் கவனத்தைத் திசை திருப்பியும், அவர் கவனிக்காத நேரத்திலும் வேகவேகமாகக் குச்சியைத் தள்ளிக்கொண்டு போக வேண்டும்.

# ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் குச்சி சென்றுவிட்டால், முதல் போட்டியாளர் குச்சியைக் கையிலெடுத்துக்கொண்டு, அங்கிருந்து நொண்டியடித்துக்கொண்டே போட்டி தொடங்கிய இடத்துக்கு வர வேண்டும்.

# அடுத்து, திரும்பவும் வேறொரு போட்டியாளரைத் தேர்வு செய்த பிறகு, மறுபடியும் எல்லோரும் சேர்ந்து விளையாடலாம்.

தென்மாவட்டங்களில் இந்த விளையாட்டை ‘கோ… கோ… குச்சிக்கோ’ என்றும், வடமாவட்டங்களில் ‘அம்பால்’என்றும் சொல்கிறார்கள். விளையாடிப் பாருங்களேன். அப்புறம் இந்த விளையாட்டை நீங்க மறக்கவே மாட்டீர்கள்!

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x