Last Updated : 28 Jan, 2015 02:38 PM

 

Published : 28 Jan 2015 02:38 PM
Last Updated : 28 Jan 2015 02:38 PM

கிரீடம் உள்ள ஒரு பழம்

அன்புக் குழந்தைகளே... நான்தான் அன்னாசி பேசறேன். அம்மாவோட கடைக்குப் போறப்ப எல்லாம் என்னைப் பாக்குறீங்க; என்னைக் கேட்டு வாங்கிக்கூடச் சாப்பிடுறீங்க. எப்பாயாச்சும் என்னைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சிருக்கீங்களா? இல்லைதானே? சரி, நானே என்னைப் பத்திச் சொல்லுறேன். கேட்டுக்கங்க...

எந்தப் பழத்திலையாவது தலையில கிரீடம் பார்த்திருக்கீங்களா? கண்டிப்பா இல்லைன்னு நீங்கள் சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்கு மட்டும்தான் இப்படி அழகான கிரீடம் இருக்கு. இதை உண்மையில கீரிடம்னு நினைச்சுகாதீங்க.

இலைகள்தான் கிரீடம் மாதிரி அழகா தெரியுது. என்னோட சொந்த ஊரு எங்கே இருக்கு தெரியுமா? தென் அமெரிக்கா கண்டத்துல இருக்கு. அங்க இருக்குற பிரேசில், பராகுவே தான் நான் பொறந்து வளர்ந்த ஊரு. அப்புறம் எப்படி மற்ற ஊர்களுக்கு வந்தேன்னுதானே நினைக்குறீங்க?

முற்காலத்துல இருந்தே அமெரிக்காவுல இருந்து கப்பல்ல போற மாலுமிங்க என்னைச் சாப்பிட நிறைய எடுத்துட்டுப் போவாங்களாம். அப்படிப் போறப்ப ஒவ்வொரு ஊருக்கும் நான் போனதா சொல்றாங்க. அமெரிக்காவைக் கண்டுபிடிச்ச கொலம்பஸ்கூட என்னைச் சாப்பிட்டுப் பார்த்துட்டு என்னோட ருசியில் மயங்கி ஐரோப்பாவுக்கு எடுத்து போனதாகூட நிறைய சொல்றாங்க. ஆனா, இப்போ நான் உலகத்துல பல இடங்கள்ல வளர்றேன்.

வெப்பம் அதிகமா இருக்குற இடங்கள், மலைப்பிரதேசங்கள்ல நான் ஜோரா வளருவேன். அப்புறம் நான் ஒரு பூத்தாவரம். தரையில இருந்து அப்படியே நாற்று வளர மாதிரி பூக்களோட பிணைஞ்சு வளருவேன். புரோமிலியேசியேதான் என்னோட குடும்ப பேரு. என்னோட அறிவியல் பேரு அனனாஸ் கொமோசுஸ். அப்படின்னா ரொம்ப ரொம்ப நல்ல பழம்னு அர்த்தம். இங்கிலீஷ்ல மட்டும்தான் என்னை பைன் ஆப்பிள்ன்னு கூப்பிடுறாங்க. பல ஊர்கள்ள பொதுவா அனனாஸ்ன்னுதான் கூப்பிடுறாங்க. இந்தப் பேரோட ஒத்துப்போற மாதிரி தமிழ்ல அன்னாசிப் பழம்னு நீங்க கூப்பிடுறீங்க.

கடையில என்னைப் பார்த்தவுடனே ஒரு அன்னாசிப்பழம் எவ்ளோனுதானே கேட்பீங்க. உண்மையில நான் ஒரு பழம் இல்லை. ஒரு பழமாக இருக்குற எனக்குள்ள பல பழங்கள் ஒளிஞ்சுருக்கு. சந்தேகம் இருந்துச்சுன்ன, என்னைக் குறுக்கா வெட்டுங்க. நடுவுல ஒரு தண்டு தெரியும், அதைச் சுத்தி சின்னசின்னதா கண் இருக்குற மாதிரி தெரியும். அது ஒவ்வொன்னும் ஒரு பழம். மொத்தமா ஒன்னா சேர்ந்து சொரசொரப்பான தோலோட பழமா வளருறேன். அப்புறம் நான் வளருற இடத்தைப் பார்த்தா புதர் மாதிரி தெரியும். அதனால என்னை புதர்ல வளர்ற பழம்னுகூடச் சொல்லுவாங்க.

அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே. நீங்க கடைகளில் வாங்குறப்ப நான் ஒன்னு, ரெண்டு கிலோ எடையில இருப்பேன் இல்லையாஎ? நான் வளரறப்ப என்னை அப்படியே பறிக்காம விட்டுட்டா என்ன ஆவேன் தெரியுமா? குண்டா பெரிசா வளர்ந்து எட்டு, ஒன்பது கிலோ அளவுக்கு மாறிடுவேன். அதனால விவசாய நண்பர்கள் பக்குவமாக என்னைப் பார்த்து பறிச்சி கடைக்கு அனுப்பிடுறாங்க.

எனக்குள்ள என்னென்ன சத்துகள் இருக்கு தெரியுமா? நிறைய சத்துகள் இருந்தாலும் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைய இருக்கு. வைட்டமின் இ கொஞ்சம் கூட இருக்கு. என்னைச் சாப்பிட்டா எலும்பு நல்லா வளரும்.

பற்களும் ஆரோக்கியமா இருக்கும். சிறுநீர் சுரப்பியில இருக்குற கோளாறுகள்கூடச் சரியாகும். சில ஊருகள்ல எனக்குள்ள இருக்குற ‘பைனா’வைப் பயன்படுத்தித் துணிகள்கூடத் தயாரிக்கிறாங்க. இப்படி இன்னும் நிறைய பயன்கள் இருக்கு.

இனி கடைக்குப் போய் என்னைப் பார்த்தா, நான் சொன்னதெல்லாம் உங்க ஞாபகத்துக்கு வருமில்லையா? அப்போ நான் வரட்டுமா, டாட்டா..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x